அலட்சியத்தால் வாடுகிறேன்!

24 Nov, 2022 | 10:45 AM
image

கேள்வி:
நான் ஒரு பெண். எனக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாக நாம் நட்புடன் பழகுகிறோம். கட்டியணைத்தல், முத்தம் தருதலும் இந்த நட்பில் அடங்கும்.

சில நாட்களாக அவர் என்னைத் தவிர்த்து வருகிறார். ஆனால், என்னால் அவரை மறக்க முடியவில்லை. நான் யாரையும் காதலித்தது இல்லை. இவரை எனது நண்பராக மட்டுமே பார்க்கிறேன்.

அவருக்கு நிறைய நண்பிகள் இருக்கிறார்கள். நானும் அவர்களுள் ஒருத்திதான். ஆனால், அவரது அலட்சியத்தால் நான் மிகவும் பாதிப்படைந்திருக்கிறேன்.

எனது தொழில் தகுதியை வளர்த்துக்கொள்ள உயர்கல்வி கற்று வருகிறேன். இந்தப் பிரச்சினையால், என்னால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், அவரோ நன்றாகத் தொழில் செய்து முன்னேறுகிறார். அவரை மறப்பதற்கு எல்லா முயற்சிகளும் செய்துவிட்டேன். ஆனாலும் முடியவில்லை. அவரை மறக்க ஏதும் வழியிருந்தால் சொல்லுங்கள்.

பதில்:
நீங்கள்தான் எல்லா முயற்சியையும் செய்துவிட்டதாகச் சொல்கிறீர்களே... இதற்கு மேல் என்ன வழி இருக்க முடியும்?

மனிதன் உணர்வுகளுக்கு அடிமையானவன்தான். அதுதான் அவனது இயல்பு. ஆனால், தேவைப்படும் நேரங்களில், உணர்வு நிலையில் இருந்து சிந்திப்பதைத் தவிர்த்து, அறிவு நிலையில் இருந்து சிந்திக்கப் பழகுங்கள்.

அவரது பல பெண் நண்பிகளுள் நீங்களும் ஒருவர். ஆனால், உங்களுக்கோ, அவர் மட்டுமே சிறந்த நண்பர். இதுதான் பிரச்சினையே. உங்களுக்கும் வேறு நட்புக்கள் இருந்தால், அவரது அலட்சியம் உங்களுக்கு வலி தராது. எனவே, உங்களது நட்பு வட்டத்தைப் பெரிதாக்குங்கள். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள். அதாவது, கூடியவரையில், நண்பர்கள் மத்தியில் இருக்கப் பாருங்கள்.

நிச்சயமாக அவர் உங்களை, அவரது மற்ற நண்பிகள் போலத்தான் நடத்தியிருக்க வேண்டும். உங்களுக்கு வேறு நண்பர்கள் இல்லாததனால்தான், அவர் உங்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது போலத் தோன்றியிருக்கிறது.

எப்போதும் பிரச்சினைகள் தோன்றும்போது, அந்தப் பிரச்சினைக்கு வெளியே, மூன்றாவது நபராக நின்று அந்தப் பிரச்சினையைப் பாருங்கள். தீர்வு உடனடியாகக் கிடைக்கும். ஆனால், உங்கள் மனம் சொல்லும் தீர்வைச் செயற்படுத்தவேண்டியது உங்கள் கடமையே. அது சற்று வலி தந்தாலும், முழுமையாக நிவாரணம் தரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right