(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் இன்று மாலை இடம்பெறவுள்ள இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேர்தலை நடத்த முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறான காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்தினால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (நவ.21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் வாக்கெடுப்பு இடம்பெறுமானால் அதற்கு எம்மால் ஆதரவளிக்க முடியாது.
தற்போது நாட்டில் பணவீக்கம் 55 - 60 சதவீதமாகக் காணப்படுகிறது. உணவு பணவீக்கம் சுமார் 91 சதவீதமாகக் காணப்படுகிறது. இது பாரிய பிரச்சினையாகும்.
இதன் காரணமாகவே உணவு பாதுகாப்பற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு பிரச்சினைகளுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
வரவு - செலவுத் திட்டத்தில் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை. தற்போதுள்ள நெருக்கடிகளால் தொழிற்சாலைகள் பல மூடப்படுவதால் , உற்பத்திகளும் குறைவடைந்துள்ளன.
இதற்கு முன்னர் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 14 சதவீதம் மாத்திரமே வரி அறவிடப்பட்டது. ஆனால் தற்போது அந்த வரி 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தளவிற்கு வரியை செலுத்தக் கூடிய வருமானம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளில் இல்லை. எனவே அரசாங்கம் இந்த வரி அதிகரிப்பின் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.
பாதுகாப்புதுறைக்காக 415 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிசுக்கு 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி , சுகாதாரம் மற்றும் நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சேர்த்தால் கூட இந்த தொகை வராது. இவ்வாறான நிதி ஒதுக்கீடுகளில் நிச்சயம் மாற்றம் வேண்டும்.
மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு டிசம்பரில் இடம்பெறும். அதற்கு முன்னர் அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும். அவ்வாறன்றி இதே வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தோல்வியடைந்தால் ஜனாதிபதி உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும்.
சட்டத்திற்கமைய உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அண்மையில் உறுதியளித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா இல்லையா என சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் புதிய ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரை , ஏற்கனவே காணப்பட்ட ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் அவ்வாறே இருக்கும். அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.
எனவே இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு எதுவும் இல்லை. ஆணைக்குழுவால் தேர்தலை நடத்த முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
2023 மார்ச் முதல் வாரத்தில் தேர்தலை நடத்தி மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்தரப்பு என்ற ரீதியில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM