(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற்றால், அரசாங்கம் பொதுத் தேர்தலையும் பிற்போட அவதானம் செலுத்தும்.
இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது.
தேர்தலை பிற்போடும் முயற்சியை சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து தீர்வு காண முடியாது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகை உட்பட சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனால், அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக செயற்படுகிறது.
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமல் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் தேர்தலை நடத்த வேண்டும். தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தை சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்காது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தமக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோர சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டமை முற்றிலும் தவறானது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏதும் கிடையாது. ஆனால், இடைக்கால விதிவிதானங்களின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு நியமனம் இடம்பெறும் வரை அதுவரை நடைமுறையில் இருந்த ஆணைக்குழுக்களுக்கு முழுமையான அதிகாரம் உண்டு.
ஆகவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தில் எவ்வித மட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
எந்த தரப்பினருக்கும் அடிபணியாமல் சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்தும் முழு அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆகவே, உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அதனை விடுத்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோருவது காலத்தை வீணடிப்பதாகும்.
சட்டமா அதிபர் அரசாங்கத்தின் பிரதான சட்ட அதிகாரி சட்டமா அதிபரின் ஆலோசனை கட்டாயமானதல்ல, சட்டமா அதிபரின் ஆலோசனைகள் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இரத்து செய்யப்பட்ட பல சான்றுகள் காணப்படுகின்றன.
சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட முயற்சித்தால் மறுகணமே உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட பல முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளார்.
எல்லை நிர்ணய குழுவை அமைக்கும் அதிகாரம் பிரதமருக்கு கிடையாது. எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழுவுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது. எவ்வித அங்கீகாரமும் கிடையாது.
8000 உறுப்பினர்களை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த போது அவர் தான் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். கடந்த நான்கு வருட காலத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளமை சந்தேகத்துக்குரியது.
தேர்தல் முறைமை ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த தன்மையே மாகாண சபை தேர்தலுக்கும் நேர்ந்தது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குகின்றன. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகள் தேர்தல்கள் முறைமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை கருத்திற்கொள்ளாமல் மாகாண சபைகள் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதனால், அரசியலமைப்பின் விதிவிதானங்கள் மறுக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற்றால், அரசாங்கம் பொதுத் தேர்தலையும் பிற்போட அவதானம் செலுத்தும்.
இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM