கலைஞர் கருணாநிதியை கரித்துக் கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும் இந்திய தலைவர்களையும் காரணம் காட்டுவதை நிறுத்துங்கள் என கொழும்பு மாவட்ட எம்.பியும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழக இலங்கை அரசியல் பிரமுகரான மறைந்த மணவை தம்பியின் மைந்தர் மணவை அசோகனின் பவள விழா நிகழ்வு மட்டக்குளியில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
சும்மா, கலைஞர் கருணாநிதியை கரித்துக் கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணம் காட்டுவதை நிறுத்துங்கள்.
இலங்கையில் தமிழர்கள் கண்டுவிட்ட இழப்புகளுக்கு முதல் காரணம், இலங்கை தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார பேரினவாத அரசுகள்.
1940 களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர முன்வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார் ?
65:35 என்ற ஜனபரம்பலுக்கு நியாயமே இல்லாத 50:50 என்ற யதார்த்தமற்ற கோரிக்கையை முன்வைத்து, பிரிட்டிஷ் அரசாங்கமே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார் ?
1987 இல் வடக்கு, கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை தொடக்கிவைத்த, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் மாகாண சபைகளையும் எட்டி உதைத்தது யார் ?
இன்று "பிச்சை வேண்டாம், நாயை பிடி" என்ற மாதிரி 13 ஆம் திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார் ?
இந்திய நாட்டு பிரதமராக இருந்த, மீண்டும் பதவிக்கு வரவிருந்த, ராஜீவின் மரணத்துக்கான காரணத்தை மறந்துவிட்டு, இப்போது இந்திய அரசு தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்?
இன்றும் கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்காமல், வடக்கு,-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார் ?
கருணாநிதியும் இந்திய தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூறவரவில்லை. கருணாநிதியை 'கருணை நிதி' எனவும் நான் கூறவில்லை.
ராஜீவ் காந்தியை 'மகாத்மா காந்தி' எனவும் நான் கூறவரவில்லை.
ராஜீவ் அனுப்பிவைத்த இந்திய அமைதிப் படை இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை எனவும் நான் கூறவரவில்லை.
'ஆர்மி' என்ற இராணுவம் எல்லா நாடுகளிலும் ஒன்றுதான். கட்டவிழ்த்துவிட்டால் இந்திய, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க இராணுவம் எல்லாம் ஒன்றுதான்.
இந்தியா ஒரு நாடு. இலங்கை இன்னொரு நாடு. தமது 'தேச நலன்கள்' அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும் நமது தமிழ் அரசியல் மேதைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அது சிங்கள அரசியல் மேதைகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால் தான் அவர்கள் கெட்டிக்காரத்தனமாக காய் நகர்த்தி தமது இலக்கை அடைந்தார்கள்.
கருணாநிதியோ ஜெயலலிதாவோ எம்ஜிஆரோ, இன்று ஸ்டாலினோ கூட தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குத் தான் முதலில் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்திரா காந்தியோ ராஜீவ் காந்தியோ, இன்று நரேந்திர மோடியோ கூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் நூற்று முப்பது கோடி இந்திய மக்களுக்கு தான் முதலில் பொறுப்புகூற கடமைப்பட்டுள்ளார்கள்.
தங்கள் பார்வையில் தங்கள் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் தீமையென தாம் கருதும் எந்தவொரு காரியத்தையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
அதிலும், கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரண்டு முறை தனது திராவிட முன்னேற்ற கழக மாநில ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை தமிழ் மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது?
ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை குறி வைத்து கரித்துக் கொட்டுவதை நிறுத்துங்கள்.
முதலில், சுய விமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள். வரலாறு முழுக்க செய்துவிட்ட சுய தவறுகளை தேடுங்கள். விடை கிடைக்கும்.
நான் ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. அனுபவத்தை பகர்கிறேன். எனக்கு பின்னடைவு ஏற்பட்டால், காரணத்தை எனக்குள்ளே தான் நான் தேடுகிறேன். ஆகவே, விடையும் கிடைக்கிறது. இந்த யுக்தியை எனக்கு வரலாறு கற்றுக் கொடுத்திருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM