(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ( நவ.17) அனுமதி கோரப்பட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, அவரது தாயார் சுமனா பிரேமசந்தர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுகள் இன்று ( 17) விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்ற நீதியர்சர்களான காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் இவ்வாறு விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், ஜெப்ரி அழகரத்தினம் மற்றும் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் தமது மனுக்களில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.
இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தற்போதும் தாக்கல் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை பிரதிவாதியாக பெயரிடுவது குறித்த விடயத்தை தீர்மானிக்க, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
முன்னதாக குறித்த மனுக்களை பரிசீலனை செய்து, அதனை விசாரணைக்கு ஏற்றே உயர் நீதிமன்றம் கடந்த மே 31ஆம் திகதி துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இடைநிறுத்தி, இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்தது.
அரசியலமைப்பின் 10, 11, 12 மற்றும் 12(1) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி,ஹிருனிகா பிரேமசந்ர, அவரது தாயார், சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் சார்பில் மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த 2021 ஜனவரி 24 ஆம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தார்.
அதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ஜனாதிபதி பொது மன்னிப்பினை பெற்ற துமிந்த சில்வா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், இம்மனுக்களில் மனுதாரர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராவதுடன் சுமனா பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி திமுத்து குருப்புஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆஜராகின்றார். மற்றொரு மனுதாரரான சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆஜராகின்றார்.
பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன ஆஜராவதுடன் ஏனைய பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜராகின்றார்.
பொது மன்னிப்பின் பின்னணி :
கடந்த 2021 ஜனவரி 24ஆம் திகதி பொசன் போயா தினந்தன்று முற்பகல் 11.20 மணியளவில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா, 1750 நாள் சிறை வாழ்க்கையின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2015 ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி பரிந்துரைகளில் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது பொருத்தமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் பலரும் கையெழுத்திட்டு ஒரு பிரேரனையை ஜனாதிபதிக்கு கையளித்து துமிந்தவுக்கு பிணையளிக்க கோரியிருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே அவருக்கு பொது மன்னிப்பளிக்கப்பட்டது.
தற்போது உயர் நீதிமன்றம் அவரது பொது மன்னிப்பை இடை நிறுத்தியுள்ள நிலையில், மீண்டும் சிறையில் அவர் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM