இன்னுமா நம்புறீங்க!

Published By: Ponmalar

17 Nov, 2022 | 03:20 PM
image

கேள்வி 
எனக்கு வயது 19. நானும் 21 வயது வாலிபரும் காதலிக்கிறோம். என் வீட்டின் முன்னாலேயே அவரது வீடும் இருக்கிறது. அடிக்கடி பார்ப்போம். ஊமை மொழியில் பேசிக்கொள்வோம்.

இப்படித் தான் எமது காதல் ஆரம்பித்தது. சில தினங்களுக்கு முன், முதன்முறையாக இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவர் என்னை உறவுக்கு அழைத்தார். நீண்டகாலம் இதற்காக காத்திருப்பதாகவும் கூறினார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அதனால் பெரிய சண்டையில் முடிந்தது. தற்காலிகமாக அவரை பிரிந்திருக்கிறேன். அவரை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளவா அல்லது அப்படியே பிரிந்துவிடவா?

பதில்: 
ஒரு பெண்ணுடனான முதல் தொலைப்பேசி அழைப்பிலேயே உறவுக்கு அழைப்பவன், அதுவும், இதற்காகத்தான் காத்திருப்பதாகவும் கூறுபவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்பதை உங்கள் அறிவோ, மனமோ உங்களுக்கு உணர்த்தவில்லையா? ஆணின் பார்வையை வைத்தே அவனை சரியாகக் கணித்துவிடக்கூடியவர்கள் பெண்கள். ஆனால், நீங்களோ, அவன் கெட்டவன் என்பதை அவனே உங்களுக்குச் சொல்லியும் கூட அதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறீர்கள்.

இன்னும் அவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அவன் உங்களைக் காதலிக்கிறான் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்களா?

அவன் உங்களுக்கு எதிர்வீட்டில் இருப்பவன் என்பதால், அவனது தொல்லைகள் தொடரக்கூடும். எனவே, அவனை சந்திப்பதை, அவனுடன் ஊமை மொழியிலோ, தொலைப்பேசியிலோ கதைப்பதை தவிருங்கள். 

உங்களது கவனத்தை ஏதேனும் படிப்பிலோ அல்லது உபயோகமான பொழுதுபோக்கின் பக்கமோ திருப்புங்கள். இவற்றை நீங்கள் செய்யாதவிடத்து, அவனது வலையில் நீங்கள் விழும் சாத்தியமே அதிகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்