இந்திய வெளியுறவின் ஆழ, அகல, நீளம் !

Published By: Digital Desk 2

13 Nov, 2022 | 04:16 PM
image

(லோகன் பரமசாமி)

இந்திய வெளிவிவகாரத்துறையின் கொள்கை நிலைப்பாட்டில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இருப்புடன் இணைந்து பயணிக்கும் பொறிமுறையொன்று இல்லாத நிலை குறித்து தமிழர் சிந்தனைத்தரப்பு அதிருப்தி கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.  

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக இடம்பெற்றுள்ள உலக ஒழுங்கு மாற்றங்களோடு அதன் பின்னால் இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் வளர்ச்சிகளையும் உள்ளடக்கி தமிழ்பேசும் மக்கள் தமது இருப்புக் குறித்த தீவை நோக்கி நகர விரும்புகின்றனர்.

ஆனால் இந்திய வெளிவிவகார கொள்கையில் இத்தனை வருடங்களாக எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாத சூழலில் இந்தியா தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை வழங்குவதில் ஒத்துளைக்குமா என்பதில் தமிழ் சிந்தனை தரப்பு பெரும் சந்தேக கண்கொண்டே பார்க்கிறது. 

அடிப்படையில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பாரம்பரிய பாதுகாப்பு முதன்மை வகிக்கிறது. இவற்றில் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் விவகாரம் எப்பொழுதும் இந்தியாவின் பாதுகாப்புக்குச் சவாலாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது குறுகிய இராணுவ மோதல்களாகவும் இந்திய, பாகிஸ்தானிய உறவு நீடிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதிலிருந்து இந்தியா தனது பாதுகாப்புத் திட்ட வரைபடத்தை வடக்கு நோக்கியதாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தாலிபான்கள் சட்டபூர்வமான  அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் வரையில் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதான நிச்சயமற்ற தன்மைக்கு இந்தியா இட்டுச்செல்லப்பட்டுள்ளது 

இந்தியாவானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் குறித்து அதிக எச்சரிக்கை கொண்டுள்ள அதேவேளை சீன,இந்திய உறவும்கூட 1962ஆம் ஆண்டிலிருந்து சர்ச்சையானதாகவே காணப்படுகின்றது.

அது,2021இல் மிக உக்கிரமடைந்து மோதல்கள் இடம்பெற்றுமுள்ளன. சீன நகர்வுகள் குறித்த எச்சரிக்கைகள் இந்திய தரப்பில் தொடர்ந்தும் இருந்த வண்ணமே உள்ளது. 

அதேபோல உள்ளகரீதியில் ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை, அருனாச்சலப்பிரதேச பிரச்சினை வட,கிழக்கு மாநிலங்களில் எழுந்துள்ள தாக்குதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் என்று பலதரப்பு சவால்களுக்கு இந்தியா முகங்கொடுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தான், இந்தியா தனது அயல்நாடுகளான இலங்கை, நேபாளம், பங்களாதேஷம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுகின்றது. அந்த நெருக்கடிகள் இந்திய அரசியலில் தாக்கம் விளைவிக்கின்றன. 

இந்தியா, தெற்காசியாவில் முதன்மை நாடாக தன்னை நிலைநாட்டுவதற்கு திட்டமிட்டுக்கொண்டு வருகின்றது. அதனாலேயே அதனைச்சூழவுள்ள அயல்நாடுகளின் அரசியல் பிரச்சினைகளின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றது. 

அத்துடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் உள்ளக மாநிலங்களின் மேம்பாடும் கூட இந்திய வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் விரைவு படுத்தப்பட்டுள்ளது. 1990களுக்கு முதலிருந்த வளர்ச்சி வீதத்திலும் பார்க்க பொருளாதாரக் கொள்கை அடிப்படை மாற்றத்தின் காரணமாக இந்திய வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலைநாடுகள் சிலவற்றின் கணிப்பீடுகளின்படி இந்திய சனத்தொகையில் குறைந்தது அறுபது சதவீத பொருளாதார மேம்பாட்டை கிராமப்புற மக்கள் மத்தியில்  இட்டுச்செல்லும் அதேவேளை போக்குவரத்து கட்டமைப்புக்களையும் சீர்செய்து கொள்ளுமிடத்து இந்தியா சர்வதேச அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் நிலைக்கு வந்துவிடும்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை பிராந்திய ஒற்றுமையை வளர்ப்பதற்காக அயல்நாடுகளின் பொருளாதாரத்திலும் அதிகரித்த ஈடுபாட்டைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக  தெற்காசிய நாடுகள் இந்திய பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. மேலும் பிராந்திய அமைப்புகளான ஆசியான், வங்காள விரிகுடாவை மையமாக கொண்ட ‘பிம்ஸ்டெக்’ போன்றன தற்காலத்தில் இந்திய பொருளாதாரத்தில் அதிகரித்த இருதரப்பு, பல்தரப்பு நடவடிக்கைகளில் உள்ளன. 

அதேவேளை இந்திய சீன பொருளாதார வர்த்தகப்போட்டி நிலையானது நிரந்தரமானதொரு விவகாரமாகியுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியுடன் போட்டியிட வேண்டிய நிலையில் உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலையை நிர்ணயிக்கும் பிரதான காரணியாக சீனா உள்ளது. ஏனெனில் சனத்தொகை அளவில் இருநாடுகளும் உலகளவில் தொழிலாளர் படையைக் கொண்டுள்ளது. உற்பத்திச் சக்தி, மூலவளத்தேடல் என்பவற்றில் இருநாடுகளும் என்றும் போட்டியிலேயே உள்ளன.

சக்திவள பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகவும் இந்திய வெளிவிவகாரத்துறையின் கரிசனையிலும் உள்ளது. இந்தியா தனது உள்நாட்டுத் தேவைகளுக்கென எழுபது சதவீத எண்ணெய்யையும் ஐம்பது சதவீதமான எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. இதன்தேவை மேலும் அதிகரித்து வருவதை அந்நாட்டின் நுகர்வோர் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இதனை நிவர்த்திசெய்யும் வகையில் அணுசக்தி, சூரியசக்தி எனப் பல்வேறு சக்தி மூலங்களையும் அணுகக்கூடிய வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் இந்திய வெளிவிவகாரத்துறை செயலாற்றி வருகிறது. 

இவை அனைத்துக்கும் மத்தியில் சர்வதேச வல்லரசகளுடனான உறவை வளர்த்துக்கொள்வது இந்திய இராஜதந்திரத்தின் உச்சபட்சமாகும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப அறிவைக் கையகப்படுத்தி ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் உட்படுத்தக் கூடிய நிலையை வழங்கும் அதேவேளை இத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றத்தையே தமது பேரம்பேசும் பலமாக வல்லரசுகள் உபயோகிக்க முடியாத வகையில் அமைத்துக்கொள்வது வெளியுறவுத்துறையின் திறமையாகும். 

இந்தியா, நாற்கர நாடுகளின் கூட்டணியிலும் உள்ளது, அதேவேளை ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் அங்கத்தவராகவும் உள்ளது, ‘பிறிக்ஸ்’ போன்ற வளரும் வல்லரசுகளின் பங்காளியாகவும் உள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் தனது கொள்கையை வழிநடாத்தி செல்வது மிகக்கடினமானதாகும்.

உக்ரேன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையை கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் ரஷ்ய சார்பாக செயற்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அதன் சனத்தொகை பரம்பலும் சந்தைப்படுத்தலுக்கான கொள்ளளவும் இந்திய நகர்வுகளை இதர வல்லரசுகள் ஏக்கத்துடன் எதிர்கொண்டு நகர்ந்து செல்லும் தன்மையை கொண்டுள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறையின் வெற்றிகளில் ஒன்றாக சர்வதேச அணுசக்தி கூட்டில் இணைந்து கொண்டமையைக் கூறலாம். இதேபோல  அடுத்த இந்திய இலக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தன்னையொரு நிரந்தர அங்கத்தவராக தகவமைத்து கொள்வதாகும் இந்நிலையை அடைய வேண்டுமாயின் இந்தியா தனது பிராந்திய வல்லரசு நிலையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கித்துவம் மேலும் வளர வேண்டுமாயின் பல்வேறு விவகாரங்களையும் கையாள வேண்டியுள்ளது. இந்திய வெளிவிவகாரத்துறையைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழர் விவகாரம் அந்நாடு கையாளும் சிறிய விவகாரங்களின் ஒன்றாகும்.

இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு ஏற்றதாக அமையாக எந்த சக்தியையும் புதுடில்லி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அதுவேளை உள்நாட்டில் அரசியல் பலம் சேர்க்கக் கூடிய எந்த நிகழ்ச்சி நிரலையும் புதுடில்லி கவனத்தில் கொள்வதற்கும் தயங்கியதில்லை. இத்தகைய நகர்வுகள் எவையும் இதுவரை காலமும் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் இருப்போடு இணைந்த பயணிக்கும் பொறிமுறையைக் கொண்டதாக இல்லை. 

அண்மையில் இந்தியா ஈழத்தமிழர்கள் மீத கடைக்கண் பார்வை வைத்துள்ளதோடு, சீனாவுடனான போட்டியில் தமிழ் மக்களுக்கான தனித்தேசத்தை அங்கீகரிக்கும் நோக்கம் இந்தியாவிடம் உள்ளதைப்போன்ற மாயதோற்றம் தமிழகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைவாழ் தமிழ் மக்கள் மீது தார்மீக ரீதியா தமிழக மக்கள்  கொண்டுள்ள ஆர்வத்தை தமக்கு சாதகமாக்குவதே மேற்படி மாயத்தோற்றத்தின் பின்னணியாகும்.

இலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய வெளியுறவுதுறை அரசுப்பணி அதிகாரிகளின் தலையீடகளால் பல தடவைகள் பல்வேறு திருப்பங்களை கண்டுள்ளது.  ஆனால் அந்தத் திருப்பங்கள் எவையும் தமிழ்பேசும் மக்கள் சார்பாக நன்மை பயப்பதாக இருக்கவில்லை. 

ஆனால் தமிழ் மக்கள் தமது இருப்பை உணர்த்தும் வகையில் சர்வதேச அளவில் தமது விடயங்களை நகர்த்தவதன் ஊடாகவே இந்தியாவுக்கு அதன் பொறுப்பை உணர்த்த முடியும். அதேவேளை இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில் செயற்படுவதும் முக்கியமானதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13