ஆழ்ந்த அன்பு கொண்டவர்களுக்கு ஏற்படும் குழப்ப மனநிலை

Published By: Devika

11 Nov, 2022 | 06:35 PM
image

கேள்வி:

நான் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எனது குடும்பம் முழுவதையும் பறிகொடுத்துவிட்டேன். நான் நிம்மதியாகத் தூங்கி வருடக்கணக்காகி விட்டது. தற்போது ஒரு கடையில் வேலை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் இல்லாத சமையத்தில் யாரோ என்னிடம் பேசுவது போன்று இருக்கிறது. சுற்றும் முற்றும் பார்த்து ஏமாறுகிறேன். எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கு விசர் பிடித்துவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. வைத்தியரிடம் போகவும் பயமாக இருக்கிறது. எனக்கு உதவுவீர்களா?

பதில்:

மனதைத் தளர விட வேண்டாம். உங்களுக்கு ஒன்றுமில்லை. உற்றார், உறவினரோடு பல்லாண்டுகாலம் வாழ்ந்து விட்டு ஒரு நொடியில் உறவுகள் மொத்தத்தையும் பறிகொடுப்பது மிகமிகக் கொடூரமானது. உறவுகளுடன் ஆழ்ந்த அன்பு கொண்டவர்களுக்கு ஏற்படும் குழப்ப மனநிலைதான் உங்களுக்கும் தோன்றியிருக்கிறது. விசர் என்றெல்லாம் பிரச்சினையைப் பெரிதாக நினைத்து நீங்களே பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டாம். மிக எளிதாக தீர்க்கக் கூடிய விஷயம்தான் இது. இதற்கான சிகிச்சையில் முதலிடம் பிடிப்பது தியானப் பயிற்சிதான். உங்களுக்கு மட்டுமன்றி, இந்தப் பிரச்சினைக்குப் பொதுவான தீர்வினைப் பார்க்கலாம். ஏனெனில் பாதிப்பு வேறு விதமாயினும் பிரச்சினை ஒன்றுதான்.

மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதைப் பாதித்தால் தியானம் செய்வதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்துகொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒரு சிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவதுபோல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்தச் சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிச்சயமாக நிறுத்த முடியும்.

உடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசுகிசு, செக்ஸ் சிக்கல், குடும்பப் பிரச்சினை, சமூகரீதியான பிரச்சினை, கடந்தகாலப் பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழக் காரணமாகிறது.

மனஅழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்கும். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும். பெரும்பாலும் மனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ அல்லது இரவிலோதான் தொந்தரவைத் தரும். நீங்கள் பணியாற்றும் சூழலில் தனிமையை உணரும் தருணங்களிலேயே இதுபோன்ற குரல்கள் ஒலிக்கவேண்டும். சரிதானா? சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கங்களின் மூலமும் குணப்படுத்த முடியும்.

பணிச் சூழலில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும்போது அல்லது வாடிக்கையாளருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும்போது நம்மைத் திசைத்திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சு சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்துவிடும். எனவே, மனசத்தம் குறித்து உங்கள் கவனத்தைக் குவிக்கவேண்டும். பின்னர் தியானம் செய்வதன் மூலம் இந் தஅழுத்தத்தைச் சரி செய்யலாம்.

யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழிசெய்கிறது. மனதைக் கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்தச் சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பவேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.

உள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பவேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளைப் புறந்தள்ளவேண்டும். நிச்சயமாக இவை ஒன்றும் எளிதானவையல்ல என்பது உண்மைதான். ஆனால், நம்மால் எதுவும் முடியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right