மக்களின் வெற்றியே எங்கள் கட்சியின் உயிர் மூச்சு - மருதபாண்டி ராமேஸ்வரன்

Published By: Nanthini

06 Nov, 2022 | 04:17 PM
image

(க.கிஷாந்தன்)

"மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். எனவே, எத்தடை வரினும், அவற்றையெல்லாம் தகர்த்து,  சமூகத்துக்காக வீறுநடை போடுவோம். 

ஏனெனில், மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர் மூச்சு" என இ.தொ.கா கட்சியின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலாசார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா – கந்தபளை எஸ்க்கடேல் தோட்டத்துக்கான ஆறுமுகன் தொண்டமான் கலாசார மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மறைந்தும் எங்கள் மத்தியில் இதய தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவின் பெயரில் ஒரு கலாசார மண்டபம் திறப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. 

தனது பெயரை முன்னிலைப்படுத்தி திறப்பு விழா நடத்துவதற்கு அவர் இடமளிக்கமாட்டார். ஏதோவொரு விதத்தில் மக்களுக்கு நல்லது நடந்தால் சரியென பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். 

அவ்வாறானதொரு தலைவனை இளம் வயதில் இழந்தது, தாங்கிக்கொள்ள முடியாத பெருந்துயராகும். எனினும், அவரின் மகன் தளபதி ஜீவன் தொண்டமான் இன்று சிறப்பாக செயற்படுகின்றார். 

மக்களுக்கு சேவையாற்றுவதை பிரதான நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

எனவே, மக்களுக்கான காங்கிரஸின் பயணம் வெற்றியளிக்க நாம் அனைவரும் அவருக்கு தோள்கொடுக்க வேண்டும். 

மலையக மறுமலர்ச்சியே எமது இலக்கு. அதனை அடைவதில் பல தடைகள் வரலாம். சவால்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான சக்தி காங்கிரஸிடம் உள்ளது" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right