(இராஜதுரை ஹஷான்)
தவணை கடன் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ள நபர் மகிழ்வுடன் இருப்பதை போன்று அரசாங்கமும் தற்போது மகிழ்வுடன் உள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் 47 பில்லியன் டொலர் அரசமுறை கடனுக்கு தீர்வாக அமையாது,பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நாவல பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பலை போன்று வங்குரோத்து நிலையடைந்த பொருளாதாரத்தை தான் பொறுப்பேற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குறிப்பிட்டார்.
அவரின் கருத்திற்கமைய பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நிலையான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.கடலில் மூழ்கி விட கூடாது என்பதற்கான சுவாவ கவசம் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு 6.9 பில்லியன் அண்ணளவாக 7 பில்லியன் டொலர் அரசமுறை கடன்களை செலுத்த வேண்டும்.2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3 பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
4 பில்லியன் கடனை எம்மால் செலுத்த முடியாது ஏனெனில் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வாக அறிவித்தது.
கடன் செலுத்த வேண்டிய நபர் உரிய காலத்தில் கடனை செலுத்தாமல் தலைமறைவாகி மகிழ்வுடன் இருப்பதை போன்று இலங்கையும் கடனை செலுத்தாது,அந்த பணத்தை கொண்டு மகிழ்வுடன் உள்ளது.கடனை திருப்பி செலுத்தாமல் நிரந்தரமாக தலைமறைவாக இருக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு அரசமுறை கடன் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.இலங்கையின் அரசமுறை கடன்தொகை 49 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.
நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளுடனான 2.9 பில்லியன் டொலரை கொண்டு அரசமுறை கடன் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் தேசிய பொருளாதாரம் மேம்படுத்த வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5.2 சதவீதத்தால் குறைவடைந்தது.
வெளிநாட்டு கையிருப்பு தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு பிரதான காரணியாக உள்ளது.டொலர் உள்வருகையை ஊக்குவிக்க அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை செயற்படுத்தவில்லை.
பொருளாதார மீட்சிக்காக அறிவுபூர்வமாக முன்வைக்கும் யோசனைகளை பொருட்படுத்தாமல் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போன்று தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
வரி அதிகரிப்பினால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,ஆகவே தேசிய தொழிற்துறையை மேம்படுத்தும் வகையில் தொழிற்துறைக்கு தடையாக உள்ள வரிகள் நீக்கப்பட வேண்டும்,அரச நிறுவனங்கள் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும்.
வரி அறவிடும் பிரதான நிறுவனங்கான தேசிய இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மறுசீரமைக்கப்பட வேண்டும்,விவசாயம் மற்றும் தேசிய தொழிற்துறை மேம்பாட்டுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், முதலீடுகள் ஊக்குவிக்கப்படல் அவசியமாகும் அத்துடன் நட்டமடையும் 400 அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஊழல் மோசடி செய்யப்பட்ட அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்ற யோசனைகளை அரசாங்கம் துரிதமாக செயற்படுத்த உரிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது,டைட்டானிக் கப்பல் கதையை பற்றி குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திசை திருப்பி விடுகிறார்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிடின் அது எரிமலை போல் வெடிக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM