(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட மா அதிபர் என்பவர் விஷேட வரப் பிரசாதம் உடைய நபர் அல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவருக்கு எதிரான தனிப்பட்ட மனுவில் சட்ட மா அதிபர் மனுதாரரோ, பிரதிவாதியோ அல்லாத நிலையில், நகர்த்தல் பத்திரம் ஊடாக அவர் வழக்கை விசாரணைக்கு அழைத்து ஒருதலை பட்சமாக செயற்பட்டு உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தவறான முன்னுதாரமாக அமையும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை கடந்த முதலாம் அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றே, அம்மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் பெயரிட்டே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,முதலாம் திகதி அம்மனு சட்ட மா அதிபரால் நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம ஆஜராகி முன் வைத்த விடயங்களை ஆராய்ந்து, கோட்டை நீதிவான் திலின கமகே, முன்னர் பிறப்பித்த அழைப்பாணையை மீளப் பெறுவதாக அறிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி , காலி முகத்திடல் முதல் புதுக் கடை நீதிமன்ற வளாகம் வரையில் பேரணியாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு தேவையற்ற இடையூறுகளை விளைவித்து அதனை தடுத்ததாக கூறி இந்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட மா அதிபருக்கும் பிரதி செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த மனு , மனுதாரர் தரப்பின் சார்பில் மீள விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது உத்தரவுகள் எதனையும் கோராத மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்ட மா அதிபரின் நடவடிக்கை தவறான முன்னுதாரணம் என்பதை மன்றில் பதிவு செய்தார்.
பீட்டர் பொன்சேகா எதிர் மத்திய வங்கி நாணயச் சபை வழக்கில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மன்றில் பிரஸ்தாபித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அவ்வழக்கு தீர்ப்பில் சட்ட மா அதிபருக்கு விஷேட வரப் பிரசாதங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மனுதாரருக்கு தெரியாமல் வழக்கை அழைத்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்ரம, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 97 (1) பிரிவின்படி சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டவிரோத கூட்டம் தொடர்பில் வழக்குத் தொடுக்க முடியாது என வாதிட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த தனிப்பட்ட மனுவில் சட்ட விரோத கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதனைவிட, சட்ட மா அதிபர், குற்றம் சட்டப்பட்டுள்ள இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட அழைப்பாணையை மீளப் பெற வேண்டும் என்பதற்கான பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 88 (3) ஆம் அத்தியாயத்தை முன்னிறுத்தி வாதங்களை முன் வைத்திருந்ததாக சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
எனினும் குறித்த சட்டத்தின் ' நடைமுறை ', ' நடவடிக்கை ' என இரு பிரிவுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நடவடிக்கை எனும் பிரிவு சிவில் வழக்குகளுடன் தொடர்புபட்டது எனவும், அதற்கே வழக்குத் தொடர முன்னர் சட்ட மா அதிபருக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இங்கு தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட மனு குற்றவியல் வழக்கு என்பதால், அதற்கு சட்ட மா அதிபரின் அனுமதி தேவை இல்லை என அவர் வாதிட்டார்.
இந்நிலையில், பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மன்றில் ஆஜராகியில்லாத சூழலில், சட்ட மா அதிபரும் இல்லாத சூழலில் எந்த உத்தரவுகளையும் தான் கோரப் போவதில்லை என சுட்டிக்காட்டிய அவர், வழக்கு தினமான 8 ஆம் திகதி தேவையான உத்தரவுகளை கோருவதாக கூறி விடயங்களை நீதிமன்றில் பதிவு செய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM