(எம்.ஆர்.எம்.வசீம்)
சர்வதேச சக்திகளின் தேவைக்கு ஏற்றவகையில் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்வதே ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கம். அதனால் தேசத்துராேகிகளின் சதியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.
ஆர்ப்பாட்டம் மூலம் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலையே ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டை அராஜப்படுத்தும் வரலாறு இந்த நாட்டில் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. எங்களில் இருக்கும் சிலரின் நடவடிக்கையாலே எமது நாட்டை ஆசியாவில், உலகில் உயர்ந்த ஸ்தானத்தில் வைப்பதற்கு முடியாமல் இருக்கின்றது.
பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பிலும் நீண்டகால கொள்கை திட்டம் ஒன்று இல்லாமையே இதற்கு காரணமாகும். அதனால் பொது மக்களும் ஏமாற்றப்படுகின்றளர். அதன் காரணமாக நாடு வங்குராேத்து நிலையை அடைந்தது.
வங்குராேத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்ப யாரும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க அதனை பொறுப்பேற்று, மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகண்டு வரும் நிலையில், பொது மக்கள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாட்டை கட்டியெழுப்ப தேசிய கொள்கை அமைக்கப்படவேண்டும் என தெரிவித்து, பாராளுமன்றத்தில் அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்றாலும் சில கட்சிகள் அதில் இருந்து பின்வாங்குவதை காணமுடிகின்றது. இதில் பிழைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி, மாற்று திட்டம் முன்வைக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் விமர்சிப்பவர்கள் தொடர்பில் பொது மக்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், ஒருசில குழுங்கள் பொது மக்களை தூண்டி, அவர்களை கொழும்புக்கு அழைத்துவந்து ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கும் சந்தர்ப்பத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலம் ஆராேக்கியமான பெறுபேறு கிடைத்துவரும் நிலையில், அதேநேரம் நாளை 3ஆம் திகதி இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கும் நிலையில், ஆர்ப்பாட்டம் செய்ய முற்படுபவர்கள் தேசத்துராேகிகளாகும்.
மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள, குறிப்பாக சமையல் எரிவாயு, பால்மா, எரிபொருள் போன்றவற்றை பெற்றுக்காெள்ள நாட்கணக்கில் வீதியில் காத்திருக்கவேண்டி இருந்தனர். அந்த நிலைமையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓரளவு கட்டுப்படுத்தி இருக்கின்றார்.
மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு இன்னும் சில காலம் வழங்கவேண்டும். அதனால் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் நாட்டை அராஜாக நிலைக்கு கொண்டு செல்லவே ஒருசிலர் முயற்சிக்கின்றனர்.
இவர்களின் தேசத்துராேக செயலுக்கு மக்கள் துணைபோகக்கூடாது. இவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிக்கவேண்டும். நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் எமது பிள்ளைகளின் எதிர்காலமே பாதிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM