(எம்.எப்.எம்.பஸீர்)
களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, 1998 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றமை தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு, 15 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 22 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (26) தீர்ப்பளித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இதற்கான தீர்ப்பை அறிவித்தார்.
அத்துடன் குற்றவாளிகளான இருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
குறித்த தொகையை செலுத்த தவறினால், மேலதிகமாக ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பி. ஸ்ரீ ஸ்கந்த ராஜா மற்றும் நிமலன் ரோகான் ஆகிய இருவருக்குமே நீதிமன்றம் மேற்படி தண்டனையை அறிவித்து தீர்ப்பளித்தது.
சட்ட மா அதிபரினால் தொடரப்பட்ட இந்த வழக்கானது நேற்று (26) நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பாதிக்கப்பட்ட நபரான அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போதே, குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரும் தாம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றத்தினை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றுக்கு தமது சட்டத்தரணி ஊடாக அறிவித்தனர்.
பிரதிவாதிகள் இருவர் சார்பிலும் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், குற்றத்தை ஒப்புக்கொண்ட தனது சேவைப் பெறுநர்கள் இருவரும் இந்த சம்பவத்தை மையப்படுத்தி சுமார் 6 வருடங்கள் வரை விளக்கமறியலில் இருந்ததாக தெரிவித்தார்.
ஸ்ரீ ஸ்கந்தராஜா எனும் குற்றவாளி, 5 பிள்ளைகளின் தந்தை என தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல், நிமலன் என்பவர் இரு பிள்ளைகளின் தந்தை எனவும் மன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்தார். இருவரதும் பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதினை உடையவர்கள் என சுட்டிக்காட்டிய சட்டத்தரணி ரத்னவேல், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கும் இலகு ரக தண்டனையளித்து தீர்ப்பளிக்குமாறு கோரினார்.
எனினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, வழக்குடன் தொடர்புபட்ட சம்பவம் காரணமாக அமைச்சர் டக்லஸ் தேவாநந்தாவின் மண்டை ஓடு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அவரது உடலில் 57 காயங்கள் வரை இருந்ததாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டினார்.
களுத்துறை சிறையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தை, கலந்து பேசி தீர்த்து வைக்க சென்ற நபரை , இவ்வாறு கடுமையாக தாக்கி கடும் காயங்களுக்கு உள்ளாக்கியமை இலகுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும், அதனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிகளுக்கு பொருத்தமான தண்டனை ஒன்றினை வழங்கி தீர்ப்பளிக்குமாறு, அரச சட்டவாதி கோரினார்.
முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி நவரத்ன மாரசிங்க, குறித்த தாக்குதல் காரணமாக வழக்கின் முறைப்பாட்டாளரான அமைச்சருக்கு கடுமையான உடல் மற்றும் மானசீக ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரிடமிருந்தும் நடத்தையினை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என இதன்போது குறிப்பிட்ட நீதிபதி, அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும், இதற்கு முன்னர் வேறு குற்றங்கள் இல்லாததாலும் பின்வருமாறு தண்டனை அளிப்பதாகவும் தெரிவித்து நீதிபதி நவரத்ன மாரசிங்க தண்டனையை அறிவித்தார்.
இதன்போது, நீதிமன்றில் குற்றவாளிகளுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல், நட்ட ஈட்டுத் தொகையினை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்குமாறு நீதிமன்றை கோரினார். எனினும் அக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நட்ட ஈடு செலுத்த அவ்வாறு நீண்ட காலத்தை வழங்க முடியாது என அறிவித்தார்.
அதன்படி குறித்த அபராதம் மற்றும் நட்ட ஈட்டுத் தொகையினை செலுத்துவதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM