ஏ.எல்.நிப்றாஸ்
பெருநாள் அல்லது பண்டிகை காலத்தில் கடை விரிக்கும் வியாபாரிகளை ஏனைய காலங்களில் அந்தப்பக்கங்களில் காணக்கிடைப்பதில்லை. இரு தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில், கிட்டத்தட்ட இதுபோலவே பெரும்பாலான முஸ்லிம் தலைவர்களும் எம்.பி.க்களும் நடந்து கொள்கின்றனர்.
தேர்தல் காலத்தில் ‘எங்கவீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்’ போல வீடு தேடி வருகின்ற அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்த பிறகு ‘மாடிவீட்டு மைனர்’ போல தொட முடியாத அளவுக்கு தூரமாகி விடுகின்றார்கள். தேர்தல் (தேவை) காலத்தில் மக்கள் சந்திப்போ, மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்படுவதில்லை.
தங்களுக்கு நேரமில்லை. வேலைப்பழு என்று காட்டிக் கொள்கின்ற இந்த மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது அத்திபூத்தாற்போல் திருமண வீடுகள், விருந்துபசாரங்கள், நூல் வெளியீடுகள், பாராட்டு நிகழ்வுகளுக்கு மட்டும் திடிரென வந்து தலை காட்டி விட்டுப் போவதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.
தமக்கு வாக்களித்த மக்களை அல்லது பொதுவாக முஸ்லிம் மக்களை சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கண்டறிவதற்கான எந்த திட்டமிட்ட ஏற்பாடுகளும் இல்லை. அது ஒருபுமிருக்க, இவ்வாறான பயணங்களை பயன்படுத்தியாவது சாதாரண மக்களை சந்திப்பதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதும் அரிதிலும் அரிது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அரசியல்வாதிகள், கடற்கரை ஓரமாக நடந்து போதல், வயல்நிலங்களில் உள்ள தேனீர்க்கடைகளில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருத்தல், அல்லது திருமண வீடுகளில் சகஜமாக அங்குள்ளவர்களுடன் அளவளாவுவதன் மூலமும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலமும் தாம் மக்களோடு இருப்பதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்கின்றமையும் இரகசியமல்ல.
இந்தப் போக்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அதிகமாகக் காணலாம். இப்போது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் அதே பாணியில் செயற்படுகின்றார். இந்தப் பட்டியல் நீளமானது.
இவர்கள் மட்டுமன்றி, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா உள்ளடங்கலாக எம்.பி.க்களான ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், தௌபீக் தொடங்கி முஷாரப் வரையும் பரவலாக யாரிடமும் மக்கள் சந்திப்புக்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இவர்களுக்கு முன்பிருந்த மர்ஹ_ம் அஷ்ரப் தவிர்ந்த அநேக முன்னாள் எம்.பி.க்களும் அவ்வாறான முன்மாதிரியொன்றை விட்டுச் செல்லவும் இல்லை.
முஸ்லிம் தலைவர்களுக்கும் எம்.பி.க்களுக்கு பொது (அரசியல்) வாழ்க்;கைக்கு அப்பால் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கின்றது. அவர்களுக்கும் நண்பர்கள், உறவினர்கள் இருக்கின்றார்கள். சில விடயங்களை தவிர்த்து அவர்களால் செயற்பட முடியாது. என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
எம்.பி.க்கள் மக்களின் சுக, துக்கங்களில் பங்கேற்பது அவசியமானது. அதன் மூலம் மறைமுக நல்லபிப்பிராயத்தை கட்டியெழுப்ப முடியும். ஒரு அரசியல்வாதி, ஒரு திருமண வீட்டிற்கோ, விழாவுக்கோ வருவது என்ன காரணத்திற்காக என்றாலும், அதில் ஒரு ‘அரசியல்’ இருக்கின்றது என்பது முக்கியமானது.
மறுபுறத்தில், இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்பது சமூகம் சார்ந்த அரசியல்வாதி என்ற வகையில் அவர்களது கடமை எனலாம். அந்த அடிப்படையில், முஸ்லிம் தலைவர்கள் தளபதிகள் இவ்வாறான நிகழ்வுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இது பாராட்டத்தக்க முன்மாதிரி என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை.
ஆகவே இந்தக் கட்டுரை கரிசனை காட்டுகின்ற பிரச்சினை அதுவல்ல!
இங்குள்ள விவகாரம் என்னவென்றால். தேர்தல் காலத்தில் மக்களது வீடு தேடிச் சென்று வாக்குறுதிகளையும், சிலவேளை சன்மானங்களையும் கொடுத்து வாக்குக் கேட்கின்ற அரசியல்வாதிகள் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு ஊர் மக்களையும் சந்திப்பதற்கான எந்த விஜயத்தையும் திட்டமிடாமல் வெறுமனே கல்யாண நிகழ்வுகளுக்கு மட்டும் வந்து போவதே விமர்சனத்திற்குரிய விடயமாகும். இதனை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
2019 இலும் 2020 இலும் தேர்தல்கள் நடைபெற்றன. பிறகு பல அரசியல் பிரளயங்கள் நடந்தேறின. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா நெருக்கடி, அதன் பிறகு பொருளாதார நெருக்கடியென பலவற்றை நாம் சந்தித்துள்ளோம். இவற்றினால் முஸ்லிம் மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர். சில முஸ்லிம் தலைவர்களும் நெருக்குவாரங்களைச் சந்திக்க நேரிட்டது.
ஆனபோதும், தமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை. ஊர் ரீதியாக உள்ள இணைப்பாளர்கள் இதற்காக முன்னிற்கவில்லை. 20ஆவது திருத்தம், ஆட்சி மாற்றம், 21அல்லது 22ஆவது திருத்தங்கள் பற்றியும் அவை தொடர்பான தமது நிலைப்பாடுகள் பற்றியும் முஸ்லிம் மக்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கருத்தாடல்களை நடாத்தவில்லை.
தலைவர் அல்லது ஒரு குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ‘இந்த ஊருக்கு இத்தனையாம் திகதி வருகின்றார். மக்கள் தங்களது குறை நிறைகளுடன் வந்து அவரைச் சந்திக்கலாம்’ என்ற ஒரு அறிவிப்பை ஒரு முஸ்லிம் எம்.பி.யேனும் இதுவரை மேற்கொள்ளவில்லை. மக்களின் எண்ணங்களை கேட்டறியவும் இல்லை. அதேபோன்று நெருக்கடியான காலத்தில் கணிசமான எம்.பி.;க்கள் மக்களுக்கு உதவ ஓடோடி வந்ததாகவும் ஆறுதடையவும் முடியாது.
நூறு ரூபா விற்கின்ற ஒரு பிஸ்கட் பக்கட்டில் வாடிக்கையாளர்கள் தமது கருத்துக்களை சொல்வதற்கான தொலைபேசி இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வீதியால் செல்கின்ற கனரக வாகனங்களிலும் தொலைபேசி எண் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், ‘இந்த முஸ்லிம் எம்.பி.யை இந்த தொலைபேசி இலக்கத்தி;ன் ஊடாக மக்கள் தொடர்பு கொள்ள முடியும்’ என்று எந்த கட்சியோ, அந்த அரசியல்வாதியோ அறிவித்த வரலாறு உள்ளதா? மக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குறைகள் கேட்டறியப்பட்ட அபூர்வங்கள் நடந்துள்ளதா?
எவ்வளவு நேரம் முயன்றாலும், கடைசி வரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அதிகம் உள்ளனர். இந்த இலட்சணத்தில் மக்களின் குறைகளை தொலைபேசி ஊடாகவேனும் கேட்டறிந்து, குறிப்பெடுத்து அதற்காக உழைக்கின்ற எம்.பி.க்களை இன்னும் முஸ்லிம் சமூகம் தெரிவு செய்யவில்லை. இது ஒருவகையில் சமூகத்தின் பெருந் தவறாகும்.
அப்படியென்றால், மக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இத்தனை வருடமாக தலைவர்கள் செய்யாமல் தவிர்க்கின்றார்களா, அல்லது உள்ளுர் அரசியல்வாதிகள், இணைப்பாளர்கள் தலைவரைச் சுற்றி ஒரு வளையத்தை அமைத்துக் கொண்டு மக்களை நெருங்க விடாமல் தடுக்கின்றார்களா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
சரி அதை விடுவோம், ஒரு தலைவருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு தமது மக்களை சந்திக்கக் கூட நேரமில்லாத வேலைப்பழு என்றே வைத்துக் கொள்வோம். அது உண்மையில் சமூக நோக்கிலான வேலைப்பழு என்றால் கடந்த 20 வருடங்களில் மக்களைச் சந்திக்க வராமல் முஸ்லிம் எம்.பி.க்கள் சாதித்தது என்ன என்பதை கூறுவார்களா?
திருமணம் போன்ற இன்னபிற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வருவது நல்லதுதான். அது அரசியல்வாதிக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவுக்கு வழிவகுக்கும். ஆனால் மக்களுக்கான அரசியல் என்பது யாரோ ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளில், விழாக்களில் மட்டும் துளிர்ப்பதாக இருக்க முடியாது.
இவ்வாறான தனிநபர் சார்ந்த நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியுமென்றால் அதுபோல இன்னும் ஒரு நாளை ஏன் மக்கள் சந்திப்புக்காக ஒதுக்க முடியாது? ஏன் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது? இதற்கு தடையாக இருப்பது எது அல்லது யார்? என்ற கேள்விகளே இங்கு முக்கியமானது.
யாரேனும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் இந்தக் கேள்விகளின் உண்மையான தார்ப்பரியத்தை உணர்ந்து இனிமேலாவது செயற்படுவார்களாயின், அதனால் சமூகத்திற்கும் அவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்க இன்னும் வாய்ப்பிருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM