(நா.தனுஜா)
சிறந்ததொரு மாற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யுமாறு வலியுறுத்திவரும் இலங்கையர்களுக்கு உதவவேண்டுமானால், இந்தியாவும் ஏனைய உறுப்புநாடுகளும் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 06 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையிலேயே, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியதைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியாகத் தெரிவான ரணில் விக்ரமசிங்க போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு மிகையான அளவிலான பாதுகாப்புப்படையினரைப் பயன்படுத்தியதுடன் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களைக் கைதுசெய்வதற்கும் நடவடிக்கை எடுத்தாரெனச் சுட்டிக்காட்டியிருக்கும் மீனாக்ஷி கங்குலி, மூன்று மாணவ செயற்பாட்டாளர்களைத் தடுத்துவைப்பதற்காகப் பயங்கரவாத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை குறித்தும் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.
சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்தமையும் மனித உரிமை மீறல்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் தடைகளை ஏற்படுத்தியமையும் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம் என்பதுடன், இது பொருளாதார ரீதியிலான நெருக்கடி மாத்திரமன்றி அரசியல் மற்றும் மனித உரிமைகள்சார் நெருக்கடியுமாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அண்மையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது சிறந்த நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டதுடன், ஊழல்மோசடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான முன்நகர்வாக அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு பெரும்பாலான இலங்கையர்கள் கோரிக்கைவிடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர், இருப்பினும் இதற்கு சர்வதேச சமூகத்தின் உதவி அவசியம் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாற்றம் மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இலங்கையர்களுக்கு உதவுவதற்கு இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்புநாடுகளும் புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியிருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM