அரசாங்கத்தில் பொருளாதார குற்றவாளிகள் இருக்கும் வரை குற்றங்களை முடிவிற்கு கொண்டுவர முடியுமா ? - கபீர் ஹாசீம் கேள்வி

Published By: Vishnu

29 Sep, 2022 | 11:25 AM
image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் 'பொருளாதாரக்குற்றங்கள்' என்ற புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றது.

இருப்பினும் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இந்தப் பொருளாதாரக்குற்றங்கள் இப்போதேனும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றதா? தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதாரக்குற்றவாளிகள் அங்கம் வகிக்கும் வரையில் எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக்கொண்டுவரமுடியுமா ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் 28 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போது நாட்டின் கடன்களை மறுசீரமைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இதுகுறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியபோதிலும், அதனை யாரும் செவிமடுக்கவில்லை.

மாறாக அப்போது நாம் கூறியதை செவிமடுத்திருந்தால் இன்று நாடு வங்குரோத்துநிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. எனவே நாட்டின் தற்போதைய நெருக்கடிநிலைக்கு அரசாங்கம் நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டும்.

இப்போது 33 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்புச் செய்வதை இலக்காகக்கொண்டு பயணிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இதில் சுமார் 13.8 பில்லியன் டொலர்கள் இருதரப்புக்கடன்களாகக் இருப்பதுடன் இவை மொத்தக்கடன் தொகையில் 34 சதவீதமாகும்.

இருப்பினும் அவற்றில் பெருமளவானவை சீனாவிற்குத் திருப்பிச்செலுத்தவேண்டிய கடன்களாகும். சீனா இந்தக் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டின் பின்னர் நாம் டொலர்களில் கடன்பெற்றாலும் அவற்றை ரூபாவாக மாற்றி அநாவசியமாகச் செலவுசெய்து முடித்திருக்கின்றோம்.

இருப்பினும் டொலர்களில் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கு அவசியமான டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டங்கள் எவையும் தயாரிக்கப்படவில்லை.

ஆகையினாலேயே இன்றளவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் 'பொருளாதாரக்குற்றங்கள்' என்ற புதியதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றது.

நீண்டகாலமாக இந்தப் பொருளாதாரக்குற்றங்கள் இடம்பெற்று வந்திருப்பதுடன், அவை இப்போதேனும் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருக்கின்றதா? என்ற எழுந்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதாரக்குற்றவாளிகள் அங்கம்வகிக்கும் வரையில் எம்மால் அந்தக் குற்றங்களை முடிவிற்குக்கொண்டுவரமுடியுமா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் தற்போது பொருளாதார மறுசீரமைப்பு மாத்திரமே ஏற்படுத்தப்படுவதுடன், அது மக்கள்மீது மேலும் தாக்கத்தைத் தோற்றுவிக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22