
மனநோய்களால் பீடிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் விசர், பைத்தியம் என்ற கடுமையான வார்த்தைகளால் அழைத்து அவர்களை சீண்டிய ஒரு காலமாக இருந்தது. இன்று மனநோய்கள் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் ஏற்பட்ட பின்னர் அவர்களை அனுதாபத்துடனும் அன்புடனும் நோக்கும் நிலை உருவாகியுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான நிலைமை ஆகும்.
மனநோய்களில் பலவகை உண்டு. மிகச் சாதாரண மனப்பாதிப்பு நோய்கள் தொடக்கம் தீவிரமான நோய்கள் வரை பலவகையான மன நோய்கள் உண்டு. இன்றைய கட்டுரையில் மிகத் தீவிரமான மனநோயான மனச்சிதைவு நோய் பற்றி நோக்குவோம். உலகில் கால் பங்கினர் ஏதோ ஒருவகை மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பினும் மிகச் சிலரே தீவிர மனச்சிதைவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். தீவிர மனநோயான மனச் சிதைவு நோய் தவிர்ந்த மனநோய்களை இலகுவாகக் குணப்படுத்தலாம். மனச்சிதைவு நோயைக்கூட ஆரம்பத்தில் இனங் கண்டால் தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ள முடியம்.
மனச்சிதைவு நோயை சிசோ பிரிணியா (Schizophrenia) என்று அழைக்கிறோம். இது மரபு ரீதியாக பரம்பரையில் தொடரக்கூடிய நோயாகும். எனினும் அக, புற சூழல்களின் நெருக்கீடு இந்த நோய் உருவாகும் சாத்தியத்தை அதிகரிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் சிந்தனை, நடத்தை, உணர்ச்சிகள், ஆளுமை என்பவற்றை மோசமடைய வைக்கும் நோய்தான் மனச்சிதைவு நோயாகும். முதலில் சாதாரண முரண்களுடன் ஆரம்பிக்கும் இந்த மனநிலை மாறுபாடுகள் காலப் போக்கில் தீவிரமடைந்து குழப்பமான மன நிலையுள்ளவராக மாறிவிடுவார்கள். இவர்களது நினைவாற்றலின் குழப்பத்தினால் இவர்கள் தமது வாழ்வின் பல ஆண்டுகளை இழந்தவர்கள் போலாகி விடுகின்றார்கள். மாய உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள்.
மனச்சிதைவு நோய் பொதுவாக இளமையிலேயே ஆரம்பிக்கின்றது. பதின்மப்பருவ நடுக்கூறு முதல் முப்பதுகளின் பிற்பகுதி வரையிலான காலம் வரையில் நோய் ஆரம்பிக்கும் காலம் பொதுவாக இருக்கும். எனினும் மனச்சிதைவு நோய்க்குள்ளானவர்களின் நோய் தொடரக் கூடியது. உரிய சிகிச்சை பெறாவிட்டால் காலம் முழுவதும் நோயாளராகவே இருப்பார்கள். ஆரம்பத்திலேயே நோயை இனங்கண்டு உரிய சிகிச்சை பெற்று வந்தால் நோயின் தீவிர தன்மையிலிருந்து விடுபட்டு ஓரளவு இயல்பு வாழ்க்கை வாழ முடியும். தீவிர மனச்சிதைவு நோயை முழுமையாகக் குணமாக்குவது கடினம். எனினும் ஒழுங்கான சிகிச்சை மூலம் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் முடியம்.
மூளையில் சுரக்கும் சில இரசாயன பொருட்களின் மாறுபாடுகள் இந்நோய்க்கான காரணமாகும். இது பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் தீவிரமான மனப்பிரச்சினைகள் ஏற்படும்போது இந்நோய் வெளிப்படும் சாத்தியம் உண்டு. மனநோய்களை இனம் காண்பதற்கு அறிகுறிகளை அவதானிப்பதன் மூலம் முடியும். குறிப்பான உடற்பரிசோதனைகள் இல்லை. அறிகுறிகளின் புள்ளியிடல் முறையே பயன்படுத்தப்படுகின்றது.
நோயின் அறிகுறிகள்
மனச்சிதைவு நோயாளர்கள் குழப்பமடைந்தவர்களாகவும் மாறுபட்ட நடத்தையுள்ளவர்களாகவும் இருப்பர். இவர்களது நடத்தை இயல்பானதாக இருக்காது. தனக்குள் பேசிக் கொள்பவர்களாகவும் சிரிப்பவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக தனிமையை விரும்புவதுடன் பிறருடன் கதைக்காமல் ஒதுங்கி இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவும் நியாயத்தன்மையும் இருக்காது. தண்ணீரில் குளிப்பதில் அதிகம் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் குளிப்பது, உடை மற்றுவது, சாப்பிடுவது என அன்றாட செயற்பாடுகளைக் கூட செய்யாது சோம்பலாக இருப்பார்கள். எதைச் செய்வதிலும் ஆர்வம் குன்றியவர்களாக இருப்பார்கள். இவர்களது காதில் இரைச்சலை தனியே இருக்கையில் உணர்வார்கள். கோபமும் சோகமும் சந்தேகக் குணமும் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறர் தனக்குத் தீங்கு இழைப்பவர்களாக செயற்படுவதாக நினைப்பார்கள். உறவுகளையும் நண்பர்களையும் கூட நம்பமாட்டார்கள். தூக்கக் குறைவு, பசியின்மை இருக்கும்.
இவர்கள் ஒருபோதும் தாம் மனநோய்க்கு உள்ளாகி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல கூப்பிட்டாலும் மறுப்பார்கள். எனினும் ஒருவரில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் குழப்பத்தை அவதானித்தால் எப்படியும் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். ஆரம்பத்தில் அழைத்துச் சென்றால் சில மாத்திரைகளைப் பாவிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மனச்சிதைவு நோயாளர்களுக்கான சிகிச்சை
மனச்சிதைவு நோயாளர்களின் சிகிச்சையில் மருந்து மாத்திரமின்றி குடும்பத்தவரின் அரவணைப்பு, சமூகத்தின் அனுசரிப்பு என்பனவும் முக்கியமானவை. நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்போது உளவளத்துணைகள் (Counseling) இவர்களது இயல்பு நிலை தொடர்வதற்கு பெரிதும் உதவும். மனச்சிதைவு நோயாளர்கள் பிறர் தம்மை கொல்ல நினைப்பதாகவும் தீங்கு விளைவிக்கப் போவதாகவும் கருதுவார்கள். அவர்கள் நோயினால்தான் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் நோயாளியின் கூற்றை மறுத்து வாதிடக்கூடாது. அதேவேளை அவர்களது கூற்றை ஏற்றுக்கொள்வதாகவும் கூறக்கூடாது. மனநோயாளர்களுக்கு கோபம் வருவது இயல்பு என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் கோபப்பட்டாலும் அவர்களைக் கோபிக்கக்கூடாது. சிலவேளைகளில் அவர்கள் மருந்தைக் கூட குடிக்க மறுப்பார்கள். தன்னை விஷம் வைத்துக் கொல்லப் பார்ப்பதாகக் கூறி ஏசுவார்கள். அவர்களை சமாதானப்படுத்தி மருந்துகளை வழங்க வேண்டும். அவ்வாறு சமாதானப்படுத்தி மருந்தை நான் கொடுத்தபோது அதை என் மீது துப்பிய அனுபவமும் உண்டு. மனச்சிதைவு நோயாளர்களுக்கு அன்பும் அரவணைப்பும் முக்கியமானது.
மாத்திரைகளுக்கு மேலாக சிலருக்கு ஊசி மருந்தும் பாவிக்கப்படுகிறது. மிகத் தீவிரமான மனச்சிதைவுக்கு உட்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கான வைத்தியசாலைகளும் எமது நாட்டில் உள்ளன. நோயின் தீவிரத்தன்மை குறைந்ததும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை அளிக்கலாம். மன நோயாளர்களில் மனநிலை மாற்றத்தையும் (Mood Swings) அவதானிக்கலாம். நல்ல மனநிலையில் இருக்கும்போது உளவளத்துணையை மேற்கொள்ளலாம். மனச்சிதைவு நோயாளியின் சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனை இன்றி நிறுத்தக்கூடாது. சுகமாக இருக்கிறார் என்று நிறுத்தினால் நோய் தீவிரமடையும் சாத்தியமுண்டு.
மனநோயாளர்களின் நோய்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் மிகத் தீவிர இருக்கும் போது மின்னதிர்வு சிகிச்சை (Electric Shock Treatment) வழங்கப்படுகின்றது. மனச்சிதைவு நோயாளரை இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகக் கொண்டுவருவது சிரமம் எனினும், மனப்பிறழ்விலிருந்து கணிசமான அளவு மீண்டு வாழும் சாத்தியம் உண்டு.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM