(லியோ நிரோஷ தர்ஷன்)
பெரும் நகர் கொழும்பை பரந்துப்பட்ட சுற்றுலா நகரமாக மாற்றும் திட்டங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் முக்கிய விடயம் யாதெனில் ஜனாதிபதி மாளிகையை கலைக்கூடமாக மாற்றியமைப்பதாகும்.
அதே போன்று தபால் தினைக்களத்திற்குறிய காலனித்துவகால கட்டங்களை சுற்றுலா விடுதிகளாக்க ஜனாதிபதிக்கு ஜே.வி.பி ஆலோசனை வழங்கியுள்ளது. தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல திட்டங்கள் வேரோடத்தொடங்கியுள்ளமை அவதானிக்கப்பட வேண்டியவையாகும்.
எலிசெபத் மகாராணியின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் தாயாரின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்ள சென்றார்.
இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, விமலவீர திசாநாயக மற்றும் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் தாயாரின் மரண சடங்குகளில் கலந்துக்கொண்டிருந்தனர்.
இறுதியஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் அருகில் இருந்த அறையொன்றுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதன் போது ஜனாதிபதி அங்கிருந்தவர்களுடன் சம்பாஷனையில் ஈடுப்பட்டார்.
சுனில் ஹந்துன்னெத்தியை நோக்கி ஜனாதிபதி, எமது நண்பரும் வந்துள்ளார் என கூறினார். உங்களால் எனக்கு வெளியில் தலைக்காட்ட முடியவில்லை என சுனில் ஹந்துன்னெத்தி கூற, ஏன்... என்ன நடந்தது... என அங்கிருந்த இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹந்துன்னெத்தி, ஜனாதிபதி தனது இடைக்கால வரவு செலவு திட்ட உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர் நான் கூறிய விடயம் ஒன்றை சுட்டிக்காட்டினார் என கூறினார்.
இதனை அவதானித்து பதிலளித்த ஜனாதிபதி, நான் கூறியதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் நாங்கள் முன்னெடுத்துள்ள கொள்கையினையே நீங்களும் வலியுறுத்துகின்றீர்கள் என குறிப்பிட்டார்.
கொழும்பிலிருந்து தெற்கை நோக்கிய பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் இதன் போது ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.
புகையிரத நிலையங்களை அண்மித்துள்ள பழைமையான கட்டடங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளமை குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்த, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில் ஹந்துன்னெத்தி சில விடயங்களை குறிப்பிட்டு சம்பாஷனையில் இணைந்தார்.
அதாவது, இலங்கை முழுவதிலும் பாரிய கட்டடங்கள் தபால் தினைக்களத்திற்கே உள்ளன. அதே போன்று அவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டவையாகும். தற்போதைய தபால் சேவையின் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது அந்த கட்டடங்களின் பெரும்பாலானவையை உங்களது திட்டத்திற்கு உள்வாங்களாம் என ஜனாதிபதியை நோக்கி ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.
அதுவொரு சிறந்த திட்டமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதுடன், ஜனாதிபதி மாளிகையை கலைக்கூடமாக்க திட்டமிட்டுள்ளமையை வெளிப்படுத்தினார். உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மாளிகையாகவும் ஏனைய சந்தர்ப்பங்களில் கலைக்கூடமாகவும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் போது கூறினார்.
ஜனாதிபதியின் இந்த வெளிப்படுத்தலை பெரிதும் வரவேற்ற சுனில் ஹந்துன்னெத்தி, ரோஸ்மிட் வளவும் தற்போது சுற்றுலாத்தளமாக்கப்பட்டுள்ளதால் பெரும் தொகையான சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகளின் பெரும்பாலானவர்கள் பண்டார நாயகவின் அறையில் தங்குவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
விமானப்படை தலைமையகத்தை அகுரகொட பகுதிக்கு நகர்த்துவதற்கு அந்த இடத்தில் பொலிஸ் தலைமையகத்தை ஸ்தாபிக்க உத்தேசித்துள்ளமை குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் கொழும்பு நகரை முழு அளவில் சுற்றுலா நகரமாக மாற்றியமைக்க முடியும் எனவும் கூறினார். இவ்வாறு பல முக்கிய விடயங்களை மையப்படுத்தி சில மணி நேரம் நீண்ட சம்பாஷனையில் விமலவீர திசாநாயக, சிறந்த விடயங்கள் பலவற்றை கூறினீர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஹந்துன்னெத்திக்கு அழைப்பு விடுத்தார்.
இல்லை. அரசாங்கத்துடன் இணைய மாட்டோம். ஆனால் சிறந்த விடயங்களை முழுமையாக ஆதரிப்போம். ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை விமர்சிப்பபோம் என சுனில் ஹந்துன்னெத்தி கூற, அவ்வாறானால் மேற்கூறிய திட்டங்களுக்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறி ஜனாதிபதி அங்கிருந்து கொழும்பு நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM