(நா.தனுஜா)
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை போதியளவிற்குப் பலம்வாய்ந்ததல்ல எனும்போதிலும், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட கடந்தகால மீறல்களுடன் தொடர்புடையவர்கள் உரியவாறு தண்டிக்கப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதுமே தற்போதைய நெருக்கடிகள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை மிகமுக்கியமானதாகும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேசரியிடம் தெரிவித்தார்.
அதேவேளை இப்புதிய பிரேரணையில் மிகவும் இறுக்கமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இப்பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடுமென பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகள் கரிசனை கொண்டிருப்பதால், பெருமளவிற்குத் திருத்தங்கள் எவையுமின்றி 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதிவாரத்தில் (அக்டோபர் மாதம் முதலாவது வாரம்) இலங்கை தொடர்பான இப்பிரேரணை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதமும் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து இரு தினங்களில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் தயாரித்திருக்கும் புதிய பிரேரணை வரைபு வெளியாகியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் திடீர் ஜெனிவா விஜயம் பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்திருந்த நிலையில், அதுகுறித்துத் தெளிவுபடுத்துமாறு வினவியபோதே அவர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை தொடர்பில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் நோக்கில் அமெரிக்கப்பிரதிநிதிகளால் கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசுவதற்கு சுமந்திரனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனையேற்று ஜெனிவா பயணமான அவர் மறுநாள் பிரேரணை குறித்து உறுப்புநாடுகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
மேற்படி தெளிவுபடுத்தல் கலந்துரையாடலின்போது சீனா, பாகிஸ்தான், கியூபா, வெனிசூலா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கவேண்டுமென்று வலியுறுத்தி இலங்கைக்கு ஆதரவாகக் கருத்துவெளியிட்டுள்ளன. இருப்பினும் அவற்றில் பல நாடுகள் வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைப் பெறாத நாடுகள் என்பதால், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்று சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை இலங்கைக்கு ஏற்கனவே 13 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கைவசம் இருந்ததாகவும், இருப்பினும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளைக்கூட இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதில் அர்த்தமில்லை என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அதேபோன்று இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணை ஸ்திரமானதாக இல்லையென்றும், எனவே அதனை மேலும் பலப்படுத்தவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் அண்மைக்காலங்களில் தொடரும் அடக்குமுறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம், பொருளாதாரக்குற்றங்கள் உள்ளிட்ட சில புதிய விடயங்கள் அப்பிரேரணையில் உள்வாங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட கடந்தகால மீறல்களுடன் தொடர்புடையவர்கள் உரியவாறு தண்டிக்கப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதுமே தற்போதைய நெருக்கடிகள் தீவிரமடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்றும் அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை ஓரளவிற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை இப்புதிய பிரேரணையில் மிகவும் இறுக்கமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இப்பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படக்கூடுமென பிரிட்டன் உள்ளிட்ட இணையனுசரணை நாடுகள் கரிசனை கொண்டிருப்பதால், பெருமளவிற்குத் திருத்தங்கள் எவையுமின்றி 51 ஆவது கூட்டத்தொடரின் இறுதிவாரத்தில் இலங்கை தொடர்பான இப்பிரேரணை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM