இயக்குநர் கௌதமனின் 'அத்துமீறினால் யுத்தம் '

Published By: Vishnu

13 Sep, 2022 | 09:05 PM
image

தமிழின உணர்வாளராக அறியப்படும் திரையுலக படைப்பாளி கௌதமன் இயக்கத்தில் புதிதாக தயாராகும் 'மாவீரா' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில், 'அத்து மீறினால் யுத்தம்' என்ற இலக்கை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வ.கவுதமன் சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிதாக இயக்கும் திரைப்படம் 'மாவீரா'.

இந்த திரைப்படத்திற்கு பால முரளி வர்மன் வசனம் எழுத, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத, 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வீரம் செறிந்த தமிழர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தை வி. கே. புரொடக்ஷன் குழுமம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தமிழர்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கும் சந்தன காடு, முந்திரி காடு, வன்னி காடு ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை, சமரசம் இல்லாத வகையில் வீரியமிக்க படைப்பாக வழங்குவதே எம்முடைய இலக்கு.

அந்த வரிசையில் 'அத்து மீறினால் யுத்தம்' என்ற இலக்குடன் மண்ணையும், மானத்தையும் காத்திட்ட ஒரு மாவீரனின் சுயசரிதையே இந்த 'மாவீரா' திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.'' என்றார்.

இயக்குவராகவும், நடிகராகவும் வலம் வரும் வ. கௌதமன், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தை இயக்குவதால், 'மாவீரா' படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right