பிரம்மியா சண்முகராஜா
கருவில் உருவாகும் பூமியின் களம் காணும் வரை எத்தனை சவால்கள் நீர் குடத்தில் நீந்தியபடி மூச்சடைத்து இடமே தெரியாமல் கடந்து போவதற்கான பல சாத்தியங்கள் இருந்தும் புதுப்படைப்பாய் பூமி காணும் மனிதன் அப்பொழுதே வெற்றியாளன் ஆகி விடுகின்றான். வாழ்வூக்கம் அவனை தூண்டிக்கொண்டே இருக்கும்.
பிறப்பிலேயே தன் உயிர் காக்கும் ஆற்றல் குழந்தைகளிடம் காணப்படுகின்றது புதிய சூழலில் சூடு, குளிர் வேறுபாடு கண்டு சினந்து, சிரித்து பசிக்கு அழுது பற்றி பிடித்து தன்னைத்தான் காத்துக்கொள்ளும் ஆற்றலை மரபின்பால் கைப்பற்றிக் கொள்கின்றான் மனிதன். எடுத்து உண்ண, கழித்து சுத்தம் செய்ய, உடுத்து அலங்கரிக்க எதற்குமே துணை தேடும் குழந்தை பராயத்திலேயே மனிதன் தனக்கானதை அழுதே சாதித்து விடுவான். அப்படி இருக்க உலகத்தில் தனித்தும் துணிந்தும் தனக்கென தான் வாழ்ந்து சம்பாதித்து சாதிக்கும் நிலைக்கு வந்தபின் எதற்காக சாவூக்கம் வேண்டும்?
சற்று சிந்திக்க வேண்டிய விடயம் வாழ வளர நல்லதை பெறவே விரும்பும் மனித இனம் பகுத்தறிய விலங்கில் வேறுபட்டிருந்தும் ஏன் படைப்பாற்றலை மறந்து தன்னைத்தான் மாய்த்துக்கொள்ள மாரடித்துக் கொள்கின்றது. மனித மனங்களில் புரியப்படாத புதினம் தான் என்ன? ஏன் தற்கொலை எண்ணம்? எதற்காக தற்கொலை முயற்சி? எத்தனையோ தற்கொலை மரணங்கள். இவையெல்லாம் ஒருவன் விரும்பி ஏற்பதில்லை. விடை இதுவே என்று எண்ணி பல வினாக்களை விதைத்து விட்டு வீணாக தனக்குத்தானே விடை பெற்றுக்கொள்கின்றான்.
நாம் நினைக்கின்றோம் தற்கொலை என்பது மனிதன் ஒருவன் விஷம் கொண்டோ, கயிறு மாட்டி தூக்கில் தொங்கியோ, புகையிரதத்தில் பாய்ந்து புத்திசாலித்தனம் காட்டியோ, இன்னும் பல மருந்துகள் கொண்டோ சில நொடிகளில் தன்னைத்தான் மாய்த்துக் கொள்வது என்று. உண்மைதான் இத்தனை நுட்பமான மரணத் தேடல்களை கண்டுகொண்டு பலரை கண்ணீரில் பயணிக்க தூண்டும் காரியத்தை ஏன் செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் குழப்பங்களா? எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லையா? தொடர் தோல்விகளா? நம்பிக்கை துரோகங்களா? இன்னும் முயற்சிக்கவே முடியாத அளவுக்கு அன்பு முறிவுகளா? இல்லை இழப்புகளா? இல்லை எதிரிகளின் சதி சூதுகளா? இன்னும் ஒருவரின் தூண்டல்களா? எல்லாமே ஒன்று கூடி உங்களுக்கே உரிமையானதாக மாற்றப்பட்டனவா? இப்படி அடுக்கி வரிசையிடப்பட்ட சவால்களை பிரச்சினையாக பார்த்து பார்த்து ஓடி ஒழிந்து விடுகின்றோம்.
முகம் கொடுத்து உடைத்து விட முயற்சிப்பதில்லை. ஒன்று ஒன்றாக கூட்டி ஒன்று சேர்த்து நமது வாழ்வை ஒன்றுமே இல்லாமல் செய்து விடுகிறது நம் எதிர்மறை எண்ணங்கள். மனிதர்களின் இலகு தொழில் எப்பொழுதும் இன்னும் ஒருவரை சாட்டி விட்டு தப்பித்துக்கொள்ள நினைப்பது. தன்னகத்து காரணங்களை ஆராய்வதில் தவிர்த்துக் கொள்வதுதான்.
எமக்கு ஏற்படும் நெருக்கீடுகள், தடைகள் மத்தியில் நாம் நம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ள ஆயத்தப்படுத்துவது இல்லை, மாறாக நாம் மற்றவர்கள் அப்படி செய்ததால்; மற்றவர்கள் இப்படி செய்ததால் நான் துன்பப்படுகின்றேன் என்று பழி சொல்லிவிட்டு நமது வாழ்வின் சவால்களுக்கு வழி தேடுவதில் தவறு செய்து விடுகின்றோம். நாம் வாழ்ந்து நம்மை நிரூபிப்பதற்கு பதில் நம்மை நாம் தற்கொலை செய்து மற்றவர் கருத்துக்களுக்கு நிஜமென்று வலுச் சேர்க்கின்றோம்.
கோபம், எரிச்சல், பகை உணர்வு மற்றவர்களை தண்டிக்கத் துண்டும் வார்த்தை பயன்பாடுகள், இன்னும் கூறினால் கைகலப்புகள், குரோதங்கள் போன்ற எதிர்மறை உணர்வுகளால் மனிதன் தன்னைத்தான் அழித்துக் கொண்டிருக்கின்றான். மரணம் என்பது உயிருக்கு திடீரென ஏற்படுகின்றது மட்டுமா ஒருவன் வாழ்வியலில் நெறிபிறழ்ந்து பிறருக்கும் தனக்கும் தீங்கானதை விதைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விநாடியும் அவன் மரணித்துக்கொண்டே தான் இருக்கின்றான்.
தன்னையும் தனது ஆற்றல்களையும் எதிர்மறை சக்தி சிந்தனைகளால் சிதைத்துக்கொண்டே தான் இருக்கின்றான். இந்த நொடிகள் மனிதன் தன்னைக் கொல்லும் முயற்சிகளை தன்னை அறியாமலேயே எடுத்துக் கொள்கின்றான். எங்கெல்லாம் மனிதன் தனது உடல் சுத்தம் சுகாதாரத்தை மறக்கின்றானோ? எங்கெல்லாம் மனிதன் உடல் பேண உணவு உண்ண போஷணை ஊட்டம் பெற தவறுகின்றானோ, இன்னும் எங்கெல்லாம் மனிதன் புகைத்தல், மது அருந்துதல், போதை பழக்கங்களுக்கு தன்னை அடிமையாக்கி விட்டு மயங்கி கிடக்கின்றானோ? அங்கெல்லாம் அவன் தன்னை தற்கொலை செய்து கொள்ளும்படி முறையிலான செயல்களையே நகர்த்திச் செல்கின்றான் என்பதே உண்மை.
ஒரு சில நொடிகளில் தன்னை மாய்த்துக்கொள்ள தைரியம் இல்லாதோர் மறைமுகமாக தன்னைத்தான் கொலை செய்ய படிமுறைகளை வகுத்து பணி செய்கின்றனர் என்றே தான் கூற வேண்டும். அது மட்டுமா சிலர் வாழ்நாள் முழுவதனையும் தூங்கி துறந்து விடுகின்றனர். நேரத்தை விற்றுவிட்டு ஏற்ற நேரத்தில் நிம்மதி இல்லை எனக்கு என்று தனிமையில் தற்கொலைக்கு தயாராகின்றனர்.
மனிதர்களே காலம் துரிதமானது. உங்களைப் பார்த்துக்கொண்டு அது நின்றுகொண்டிருக்க நேரத்திற்கு நேரமில்லை. அது ஓடிய பாதையில் உன்னை அர்ப்பணிக்க நீ ஆயத்தமாக வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு உங்களைக் கொடுத்து விடாதீர்கள். மற்றவர்களும், சூழ்நிலையும் உங்களை ஒருபோதும் அழித்துவிட முடியாது.
நீங்கள் உங்களை பகுதியாக தற்கொலைக்கு தயார் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவது உங்கள் எதிர்மறை எண்ணங்களேதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உம்மை சுற்றியுள்ள சமுதாயம் நமது எண்ணங்களை, விருப்பங்களை புரிந்து நடக்கும் என்று எதிர்பார்ப்பதிலும்விட புரிதலுடன் நாம் எமது விருப்புக்களை சந்திக்க போராட புதிய எண்ணங்களை நேர்மறையாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் உங்கள் அன்றாட நடத்தைகளை இடைநிறுத்த ஏன் அனுமதிக்கின்றீர்கள்? உங்கள் மனம் இறுகி அழுத்தமாகி நெருக்கப்பட்டு உங்கள் வாழ்வை நீங்களே வெறுத்து விடும் அளவுக்கு மற்றவர்கள் செயற்பட நீங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? உங்கள் உணவை நீங்கள் உண்பதை தவிர்க்க எப்படி மற்றவர்கள் காரணமாகலாம்? உங்கள் உறக்கத்தை மற்றவர் எப்படி கெடுக்க முடியும்? நண்பர்களே! உறவுகளே! உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்களை கையாள உங்களுக்கு மட்டுமே முடியும். மற்றவர்கள் உங்கள் வாழ்வையோ? மரணத்தையோ? தீர்மானிப்பதற்கு நீங்கள் அனுமதிக்காத வரையில் உங்கள் பரம்பரை கடத்தல்கள் கூட உங்களை பாதிக்க முடியாது. அவற்றை சூழ்நிலை கொண்டு சரி செய்து விட முடியும்.
சற்று சிந்தியுங்கள்! ஆன்மீகங்கள் அனைத்தும் இதயத்தின் நினைவு போல நீளும் என்கின்றது. எண்ணங்களை முதலில் சரி செய்ய கற்றுக் கொள்வோம். விரும்பியதைப் பெற்று வாழ ஆசைப்படும் நாம் நம் கவனத்தை நம்மை சுற்றியுள்ள மற்றவர்கள் என்ற விடயத்தில் செலுத்துவதனை போன்று உணவிலும் உள, ஆளுமை ஆரோக்கியத்திலும் காட்ட வேண்டியுள்ளது.
இறைவன் எம்மை தனித்துவமாக படைத்துள்ளார் என்பதற்கு நம் கட்டைவிரல் ரேகைகளே சான்று. உன் கை விரல் படிந்த ரேகை மடிப்புகள் இன்னும் ஒருவருக்கு இல்லை. ஏன் இத்தனை தத்துவமாய் தனித்துவமாய் நீ படைக்கப்பட்டும் உன்னை புரிந்து உன் வாழ்வூக்கத்தில் வளம் சேர்க்க முயற்சிப்பதில் ஆர்வம் காட்ட முடியாது எதற்காக தற்கொலை எண்ணம்? மனிதா பிறப்புக்கும் இறப்புக்கும் இருக்கும் இடைவெளியில் ஒற்றை வாழ்வு தான் உனக்கும் எனக்கும்.
எண்ணங்களை சரிசெய் அவை உன்னை சாதனையாளனாக்கும். எண்ணமே வாழ்வாகின்றது. பகுதி பகுதியாய் உன்னை தற்கொலைக்கு தயார் செய்யும் பழக்கங்களுக்கு விடை கொடு. விரைவாய் விழித்துக் கொள். உலகை கைக்குள் சுருக்கி விந்தைசெய்த மனிதசாதனை கடவுளுக்கு சவால்விடும் சாதுரியங்கள் விஞ்ஞானம் கடந்து உனக்கே உரியவையடா. ஒருபோதும் துணிந்து விடாதே உன்னை கொன்று விட.
நாம் தற்கொலை எண்ணம் கொண்டவர்களை எப்படி அறிவது, உதவுவது என அறிந்திருப்போம். அவர்கள் தமது வாழ்வின் அவசியத்தைப் புரிந்தும் அதனை வாழ முடியாது தன் வாழ்வின் சவால்களுக்கு முகம்கொடுக்க சாவு ஒன்றே வழியென்று எண்ணி துணிகின்றார்கள். என்றுதான் கதை. ஆனால் தற்கொலை செய்பவர்கள் ஒருவரும் விரும்பி துணிவதில்லை வேறு வழி இல்லை என்று முனைகின்றனர். யாரேனும் அறிந்து தடுத்து விட்டால் தப்பித்துக் கொள்வர்.
அநேகர் இந்தப் பாணியினர். பலர் தாம் விரும்பியதனை பெற தற்கொலை மிரட்டல் செய்து மற்றவரை ஏமாற்ற எண்ணி தன்னைத்தான் இழந்து போனவர்கள். இன்னும் சிலர் தான் குழப்பத்தில் உள்ளேன் இனி உதவுபவர் யாரென தேடி அறியும் நோக்கில் தமது தோல்விகளின் சார்பில் எதிர்மறை எண்ணத்தில் மூழ்கியதால் தன்னை தற்கொலைக்கு தயார்செய்யும் போது யாரேனும் அறிந்து உதவட்டும் என்பதாய் தாம் தம்மை கொலை செய்யும் எண்ணத்தை ஜாடையாய், குறியீடாய், வார்த்தையாய் வெளிப்படுத்துபவர்.
நேரடியாக நல்ல நண்பனுடனும் நேர் உணர்வாளிகளிடமும் தன்னை ஆற்றுப்படுத்துபவரைவிட ஏனையவர் தாம் வெளிப்பாடுகளை எத்தனித்தும் அறியப்படுத்தியும் அடுத்தவர் கவனிக்க தவறின் அவர்கள் நொடிப்பொழுது முடிவு தன்னை அழிப்பதிலும் மற்றவரை சோகத்தில் ஆழ்த்துவதிலுமே நிறைவடைகின்றது.
நண்பர்களே ஒன்று தெரிகின்றதா? தற்கொலை தீர்வு அல்ல அது பழி. குற்றம். கடவுள் உங்கள் மரணத்தை ஏற்பதில்லை. நீங்கள் வாழும்போது என்ன தவறு செய்த போதும் இறப்பில் உங்களுக்கான நேசகண்ணீரும் பாராட்டு மடல்களும் உண்டு. தற்கொலை செய்து கொண்டால் நீங்கள் எந்த மற்றவர் பற்றி கவலை கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்தீர்களோ அந்த மற்றவர்களின் பரிகாச வார்த்தைகளுக்கு உங்களை அர்ப்பணித்துச் செல்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மரித்தபின் உங்கள் உடலுக்கும் மதிப்பு இல்லை. வெட்டிக்கொட்டி புதைத்ததையும் கிண்டி புழு பார்த்து தரம் குறைத்து விடும் உலகம். தயவான விண்ணப்பம் தவறியும் வேண்டாம் தற்கொலை எண்ணம். வாழ்வின் இரு புறங்களையும் சரிவரக் கவனியுங்கள் இன்னும் ஒருவர் உங்கள் வெளிப்பாடுகளை, துக்க துயரங்களை புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். நீங்களே உங்கள் எண்ணங்களை அடிப்படையில் சரி செய்து பண்படுத்துங்கள்.
வாழ்வும் வசப்படும். நீங்கள் அனுமதியாதவரை யாரும் உங்களை தூக்கிலிட முடியாது. நீங்கள் அனுமதியாதவரை எந்த அவமானமும் எந்த இழப்புகளும் உங்கள் புலன் தாண்டி புத்திதொட முடியாது. பகுத்தறியுங்கள். உங்களை நேரான வாழ்வுக்கு ஊக்கப்படுத்தும் விடயங்களை உள்ளெடுத்து மற்றதை அன்னமாய் தவிர்த்து தரம் பிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
யார் துணையும் புரிதலும் எதிர்பார்க்கத் தேவையில்லை. வாழ்வின் இன்பங்களைப் போல் துன்பங்களையும் அணைக்க கற்றுக்கொள்ளுங்கள். அவை உங்களை உருவாக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பதாய் ஆராயுங்கள். உங்கள் அறிவில் உற்றெடுக்கும் வாழ்வூக்கும். எல்லாம் மாறும் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு எல்லாம் சரியாகிவிடும் காலத்திடம் கையளித்து காத்திருங்கள். அனுபவித்தல் என்பது துன்பத்திற்கும் பங்காகட்டும்.
விதிவிலக்காக ஒருவர் உளநோயாளராக இருக்கும்போது (குறிப்பாக மனச்சோர்வு போன்றவை) அவனது எண்ணம் அவன் வசம் இருப்பதில்லை. இங்கு தற்கொலை மரணங்கள் தவிர்க்க முடியாதவை. உறவுகளே இவர்களை கண்காணித்து உதவுங்கள். மனித அங்கி தனித்து வாழ முடியாது தனிமை தவிருங்கள்.
உறவுகளுக்கும் ஒதுக்குங்கள் உங்கள் நேரத்தை. விஞ்ஞானத்தின் விந்தைகளுக்கு விற்றுப்போட்ட மனிதாபிமானங்களை சற்று திருப்பிப் பெற்றுக்கொள்ளுங்கள். போட்டி உலகில் தோல்விகளிடம் அடமானம் வைத்த நம் அற்புத மனதை மீட்டுக்கொள்ளுங்கள். வாழத்துணியுங்கள். ஓய்வும், உறக்கமும் தவிர்க்காது தேவைக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் உறவுகளே உங்கள் மூளை ஒருபோதும் உங்களை நிரந்தரமாய் ஓய்வெடுக்கவோ, நிரந்தரமாய் உறங்கி விடவோ நிச்சயமாய் அனுமதிப்பதில்லை. நம்மை நாம் நிதானித்து வாழ்வைப் புரிந்து வாழ வளம் சேர்ப்போம். நம்மை விட நம்மை நேசிக்க இறைவன் போல் அனைவரும் கூடி வர நம்மை நாம் உயர்ந்த எண்ணங்களுடன் நிமிர்ந்து பார்க்க வேண்டும்.வாழ்ந்து தான் பார்ப்போமே!! என்று துணியுங்கள்.
தினம் தினம் உங்களை தயார் செய்யுங்கள். குற்ற உணர்வுகள் வேண்டாம். உங்களை கல்லெறிய சுற்றவாளிகள் ஒருவரும் உலகில் இல்லை. உனக்காக நீ வாழ் உன்னோடு உள்ளவர்களையும் வாழ வைப்பாய், நீ உன்னைக் கொன்று அல்ல உன்னைக் கொண்டு வாழ்ந்துவிடு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM