(நா.தனுஜா)
இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் கடந்த 3 மாதகாலத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவிலும் பரஸ்பர அபிவிருத்தி தொடர்பான அக்கறையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இருநாடுகளினதும் மக்கள் மனதில் இவ்விருதரப்பு நட்புறவு மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளமையே அதற்குப் பிரதான காரணமாகும் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் அவரது பாரியார் ஜின் சியான் ஆகியோர் கடந்த 5 ஆம், 6 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன்படி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தை சந்தித்த சீனத்தூதுவர், 'வாக்குறுதிகள் உரியவாறு பேணப்படும். அதற்கேற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்ற விடயத்தை மீளுறுதிப்படுத்தியதுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது சீன அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டங்களில் அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். அதுமாத்திரமன்றி அண்மையில் சீனத்தூதரகத்தின் ஊக்குவிப்புடனும் கிழக்கு மாகாணசபை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் அழைப்பின்பேரிலும் எதிர்கால ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீன முயற்சியாண்மை நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனைத்தொடர்ந்து தற்போதைய சூழ்நிலையில் கல்விச்செயற்பாடுகளை சுமுகமான முறையில் முன்னெடுப்பதற்காக சுமார் 21 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 22 ஸ்மார்ட் பலகைகளை கிழக்கு மாகாணத்திலுள்ள 20 பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளித்தார். இச்செயற்திட்டத்திற்கு சீனாவின் யுனான் மாகாண அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டிருந்ததுடன் பாடசாலைகளுக்கென சூரிய மின்னுற்பத்தி விளக்குகள் 70 ஐப் பெற்றுக்கொடுப்பதற்கான இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
மேலும் கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர், மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு 7 மாதங்களுக்கும் அதிகமான காலம் உதவக்கூடியவகையில் 4.3 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கிவைத்தார்.
இதன்போது உரையாற்றிய சீனத்தூதுவர் சி சென்ஹொங், 'கடந்த 3 மாதகாலத்தில் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவிலும் பொதுவான அபிவிருத்தி தொடர்பான அக்கறையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இருநாடுகளுக்கும் - இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு, கௌரவம் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றில் மாற்றம் ஏற்படவில்லை. மக்கள் மனதில் இவ்விருதரப்பு நட்புறவு மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளமையே அதற்குக் காரணமாகும்' என்று சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் மட்டக்களப்பிலுள்ள பின்தங்கிய மீன்பிடி கிராமமான களுவங்கேணிக்குச்சென்ற சீனத்தூதுவர் சி சென்ஹொங், அங்குள்ள மிகவும் பின்தங்கிய 10 குடும்பங்களுக்குக் கையளிப்பதற்காக சீனாவின் நிதியுதவியின்கீழ் வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அடிக்கல் நாட்டிவைத்துடன் தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM