உலகிற்கு முன்னெச்சரிக்கையாகும் இலங்கை சிறுவர்களின் நிலை

Published By: Priyatharshan

27 Aug, 2022 | 09:39 PM
image

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளாகும் நிலையில், வறிய மற்றும்  மிகவும் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் அதன் தாக்கத்தை எதிர்நோக்குகின்றனர்.

இலங்கை துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியடைந்துவரும்  சுற்றுலாத்துறைக்காக பெயர் போன நாடாக விளங்கி வந்தபோதிலும், இலங்கையானது 1948 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் தற்போது மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

நாட்டின் மத்திய மலைநாடு, பெருந்தோட்டப் பகுதி, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பின்தங்கிய பல பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் அத்தியாவசிய உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் தமது வழக்கமான மூன்று வேளை உணவைத் தவிர்த்து வருவதாக யுனிசெப் மற்றும் சேவ்த சில்ரன் போன்ற அமைப்புக்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறு வறுமையின் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பட்டினியுடன் தூக்கத்திற்குச் செல்கின்றனர். கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் தாக்கத்தால் தெற்காசியாவில் இரண்டாவது உயர் விகிதத்தைக் கொண்டுள்ள இலங்கையில் இவ்வாறு தேவையுடையவர்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைக்கும் என்பதில் உறுதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் சுமார் இரண்டில் ஒரு சிறுவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் அவசர கால உதவித் தேவை காணப்படுவதாக பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.  கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்கள் தடைப்பட்ட கற்றல் நடவடிக்கையினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள 4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வியானது பாடசாலை வருகை தொடர்ந்தும் குறைவாக இருப்பதால் மேலும் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் காணப்படுகின்றது.

சிறுவர்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தற்போதுள்ள நெருக்கடியினால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகள் தோற்றம் பெறுவதற்கு முன் சிறுவர்களுக்கிடைத்த ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவர்களுக்கு தற்போது கிடைப்பதில்லை. அத்துடன் அவர்களுக்குத் தேவையான அடிப்படையான கற்றல் உபகரணங்கள் கூட அவர்களிடம் இல்லை. இவ்வாறிருக்க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் தற்போது போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், நாட்டில் உயர்ந்து செல்லும் பொருளாதார அழுத்தம் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு தொடர்பான அதிக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. நாட்டில், ஏற்கனவே 10,000 த்திற்கும் அதிகமான சிறுவர்கள் நிறுவனம் சார் கட்டமைப்பின் பராமரிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான பிரதான காரணமாக வறுமை நிலை காணப்படுகின்றது. 

இவ்வாறு சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள் அவர்கள் வளர்வதற்கான மிகப் பொருத்தமான இடமாக காணப்படவில்லை. ஏனெனில் அதில் குடும்ப உறவுக்கான சாத்தியம் இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக தம்மால் பராமரிக்கவும் உணவளிக்கவும் முடியாத நிலையில் மேலும் பல குடும்பங்கள் தமது பிள்ளைகளை இவ்வாறு நிறுவனம்சார் கட்டமைப்புக்குள் சேர்ப்பதற்கு தற்போதைய நெருக்கடிகள் வழிவகுத்துள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த யுனிசெப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லார்யா-அட்ஜேயின் “ இலங்கையில் சிறுவர்களுக்கான பேரழிவு நெருக்கடி தெற்காசியிவற்கு ஒரு எச்சரிக்கைக் கதையாகும் எனவும் இக்கட்டான நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்க முன்வரவேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

நாட்டில் தற்போதைய நிலை தொடருமாயின் இலங்கையில் சிறுவர்களுக்காக கடும் உழைப்பின் மூலம் பெறப்பட்ட நன்மைகளானது சில சந்தர்ப்பங்களில் பழைய நிலைக்குச் செல்லும் அல்லது முழுமையாக அழிக்கப்படும் ஆபத்து நிலையில் உள்ளது.

 முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் தாய்ப்பாலூட்டுபவர்களுக்கு மிக அவசியமான நிதி உதவிகளையும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்தாலும் நெருக்கடி தொடர்வதனால் மேலும் தேவைகள் அதிகரித்துள்ளன.

நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடு முயற்சித்து வரும் நிலையில் தீர்வின் முக்கிய இடத்தில் சிறுவர்கள் வைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான தொடர்ச்சியான கல்வி உறுதி செய்யப்படல் வேண்டும். அப்போது அவர்கள் தமது எதிர்காலத்திற்காக தயாராக முடியும் என்பதுடன் சிறுவர் தொழிலாளர், சிறுவர்கள் மீதான சுரண்டால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆபத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும். உயிர் ஆபத்துள்ள நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்கு மத்திய மற்றும் சமுதாயம்சார் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படல் வேண்டும்.

தெற்காசியா முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் என்பன சிறுவர்களின் வாழ்க்கையை மேலும் அச்சுறுத்தக் கூடிய நிலையில் உள்ளன. ஏற்கனவே, உலகின் ஐந்தில் ஒரு பகுதியினராக கருதப்படும் வறுமை நிலையில் வாழும் குடும்பங்களில்  சிறுவர்களின் சுகாதாரம், கற்றல் மற்றும் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் மோசமான விளைவுகளுக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் இப்போது செயல்படவில்லையென்றால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்தின் சிறுவர்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள். அத்துடன் அவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, கற்றல் மற்றும் பாதுகாப்பு என்பன மேலும் பாதிப்புக்கு உள்ளாகும். 

தமது பொறுப்பில்லாத நெருக்கடியின் விளைவுகளை சிறுவர்கள் அனுபவிப்பதற்கு நாம் அனுமதிக்க முடியாது. அவர்களது எதிர்காலத்தை காப்பதற்கு நாம் இன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீ.பி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு...

2025-02-01 13:18:06
news-image

குற்றச் செயல்களின் பின்னணியும் கடந்தகால வரலாற்று...

2025-01-26 16:38:59
news-image

இந்தியாவின் வகிபாகத்தை பெறுவதற்கான வழி என்ன?

2025-01-19 15:02:55
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவசியம்

2025-01-12 14:32:54
news-image

பொறுப்புக்கூறல் விடயத்தில் இனியும் இழுத்தடிப்பு வேண்டாம்

2025-01-05 15:33:27
news-image

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற...

2024-12-29 08:58:38
news-image

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

2024-12-15 22:38:25
news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14