லத்தீப் பாரூக்
2022 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை இந்த உலகின் எல்லாவிதமான சட்டங்களையும், நியதிகளையும் தர்ம நியாயங்களையும் மீறி ஆட்சி புரியும் இஸ்ரேல் காஸா பிரதேசத்தின் மீது தனது மூர்க்கத்தனத்தை மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்த மூர்க்கத்தனமான தாக்குதலால் 72மணநேரத்துக்குள் ஐந்து வயது பாலகன் ஒருவன் உட்பட 15சிறுவர்களுடன் 45 அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள் பல தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை விநியோகங்கள் தடுக்கப்பட்டுள்ளன. நிவாரணங்களில் மட்டுமே தங்கியுள்ள காஸா பகுதி மக்கள் இப்போது பட்டினியால் வாடிய நிலையில் மேலும் பல சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதி தய்சீர் அல்-ஜபாரியை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் ஏனைய பொது மக்களோடு சேர்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஐந்து வயது சிறுவனான அலா குஅத்தும், அவனின் தந்தை ஆகியோரும் இதில் அடங்கும். இவர்கள் அல் ஜபாரிஸ் பகுதியில் குடியிருப்பில் வசித்து வந்த நிலையிலேயே விமான குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஜபாரி இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவோ, அதற்கு திட்டமிட்டதாகவே அல்லது ஆதரவு அளித்ததாகவோ எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டித் தனம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பத்தி எழுத்தாளர் மஹா ஹ{ஸைனி என்பவர் “மகிழ்ச்சியானதோர் கோடை காலத்தை எதிர்நோக்கி இருந்த நிலையில் 16பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கால்பந்து விளையாடவும் கரையோரத்துக்கு சென்று கோடை கால கூடாரம் அமைத்து விளையாடவும் திட்டமிட்டிருந்த அப்பாவி சின்னஞ்சிறுசுகள் மீது அரக்கத்தனம் புரியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இஸ்ரேல் எல்லாவிதமான மனித விழுமியங்களையும் உணர்வுகளையும் கைவிட்டுள்ளது என்பதை பத்தி எழுத்தாளர் அஹமட் அல் ஷமாக் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அரபு சர்வாதிகாரிகளின் ஆதரவும், அமெரிக்கா பிரிட்டன் உட்பட ஏனைய ஐரோப்பிய சக்திகளினதும் பூரண ஆதரவும் ஆசீர்வாதமும் இன்றி இஸ்ரேலால் இத்தகைய கொடூரங்களை தொடர்ந்து இழைக்க முடியாது. 2020 முதல் இஸ்ரேலுடன் இயல்பு நிலைகளை ஏற்படுத்தி உள்ள ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் கூட இதுவரையில் இந்தச் சம்பவத்துக்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்காது மௌனம் காக்கின்றன.
பிரிட்டிஷ் ஊடகவியலாளர் டேவிட் ஹேர்ஸ்ட் அண்மையில் எழுதியுள்ள ஆக்கத்தில் இஸ்ரேலை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கச் செய்யும் நடவடிக்கையிலோ அல்லது அதன் குற்றச் செயல்களை உணர வைப்பதிலோ, அல்லது அதற்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதிலோ மேற்குலகின் விழுமியங்கள் அனைத்தும் வெற்றுத் தன்மையான நிலைக்கு வந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கான எனது ஆதரவு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. அதில். எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லை. தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கு பதிலாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனும் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றே தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் அடுத்த பிரமதராக வர இருப்பவர் என்று கூறப்படும் லிஸ் டிரஸ்ஸ{ம் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றே தெரிவித்துள்ளார். காயப்பட்டவர்களின் காயங்களுக்கு மேல் உப்பு தடவுவது போல் பிரித்தானியாவின் தற்போது டெல் அவிவ்வில் உள்ள தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றுவது பற்றி ஆராயப்படும் என்று லிஸ் டிரஸ் மேலும் தெரிவித்துள்ளார். பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையில் ஒரு நடுநிலையாளராக அல்லது சமாதானத்தை ஏற்படுத்துபவராக பிரித்தானியா செயற்படலாம் என்ற நம்பிக்கையை இந்த அறிவிப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.
பலஸ்தீனத்தையோ அல்லது பஸ்தீன மக்களையோ முற்றாக அழித்தொழித்துவிட முடியாது என்பது தான் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் ஆதரவுச் சக்திகள் அனைவரும் புரிந்து கொள்ளத் தவறியுள்ள உண்மையாகும்.
உலக நாடுகளில் வாழும் ஏனைய இளைய தலைமுறையினரைப் போலவே அவர்களும் உலகளாவிய ரீதியில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது நடத்தப்பட்டுள்ள மூர்க்கததனமான விமானத் தாக்குதல் மூலம் உலகத் தலைவர்கள் பலஸ்தீனர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறார்கள்?
தற்போது, காஸாவில் வாழும் பலஸ்தீன மக்களுள் மூன்றிலிரண்டு பகுதியினர் அகதிகளாகவே உள்ளனர். காஸா பிரதேசத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள எட்டு அகதி முகாம்களில் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்றனர். உலகில் சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது.
இஸ்ரேலில் அல்லது மேற்குக் கரைப் பிரதேசத்துக்கு சென்று அவசரசிகிச்சைகள் பெற வேண்டிய தேவையில் சுமார் 39சதவீதமான நோயாளிகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான அனுமதிகள் மறுக்கப்படுவதாலும் அல்லது தாமதிக்க்படுவதாலும் பெரும் உயிர் ஆபத்தை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
வேலையில்லாப் பிரச்சினை 46.6சதவீதமாக உள்ளதோடு 62 சதவீதத்துக்கும் அதிகமான இiளுர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் காஸாவில் உள்ள சிறுவர்களில் ஐந்தில் நான்கு பேர் அச்சம், துக்கம், மனச்சோர்வு என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எந்தவகையிலும் ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக காஸா பிரதேசம் திகழவில்லை. அது ஒரு மிகச் சிறிய கரையோரப் பிரதேசம். மிக எளிதாக அதைக் கட்டுப்படுத்தவும் முடியும். கடந்த 16 வருடங்களாக காஸா மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
காஸாவின் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புக்களை சீர் குலைத்து முடியுமானவரை மக்களை கொன்றொழிக்கும் வகையில் இஸ்ரேல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தி உள்ளமை ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. இது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
காஸாவில் கட்டவிழத்து விடப்பட்ட ஒவ்வொரு வன்முறையும் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றது என்று நோர்வேயின் அகதிக் கவுண்ஸிலின் மத்திய கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கார்ஸ்டன் ஹேன்ஸன் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனின் நிர்வாகம் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் காஸாவைப் பற்றி கொஞ்சம் கூட அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக பாரபட்சமான, இனவாத போக்குடைய இஸ்ரேலுக்கு அவர்கள் வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இஸ்ரேலினால் பலஸ்தீனர்களின் இரத்தம் அநியாயமாக ஓடவிடப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அமைதியாகவே இருந்துள்ளன. காஸாவில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல் தான் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.
பலஸ்தீன மக்கள் தமது சொந்த பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். அதற்காக அந்த மக்களை இஸ்ரேல் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வெறியாட்டம் ஆடுகின்றது. இதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதில் ஐரோப்பிய நாடுகளுக்கு அப்படி என்ன ஆனந்தம் இருக்கின்றது என்பதும் புரியவில்லை.
இந்த விடயத்தில் அரபுலக தலைவர்களின் நிலைப்பாடு தான் என்ன? பலஸ்தீனர்களுடன் சகோதரத்துவம் பற்றி அவர்கள் பேசுகின்றனர். ஆனால் இஸ்ரேல் இழைக்கும் குற்றங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது வெட்கப்படக்கூடியவாறு அமைதியாக இருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM