(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்திருப்பதுடன் அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமைவரை நாட்டில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி ரொரீ மன்கோவனுக்கும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பெரும்பாலும் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படும் நிலையில், இதன்போது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம், மனித உரிமை மீறல்களின் விளைவாகத் தோற்றம் பெற்றுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படக்கூடிய புதிய தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் எழுத்துமூல அறிக்கையில் மேலும் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கிலும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராயும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் தலைமையிலான உயர்மட்டக்குழுவொன்று இவ்வாராமளவில் அல்லது இம்மாத இறுதியில் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்தவகையில் இருதினங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்திருக்கும் ரொரீ மன்கோவன், எதிர்வரும் செவ்வாய்கிழமைவரை நாட்டில் தங்கியிருப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி பெரும்பாலும் இன்றைய தினம் அல்லது இவ்வார இறுதியில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ள ரொரீ மன்கோவன், இதன்போது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் மேலும் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை அண்மைக்காலத்தில் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவனிடம் எடுத்துரைப்பதற்குத் திட்டமிட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு காரணமாக அமைந்துள்ளன என்பது குறித்தும் விளக்கமளிக்கவுள்ளனர்.
அதேபோன்று எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை முன்வைக்கும் பட்சத்தில், அதில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் மற்றும் அது முன்னைய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த முக்கிய அம்சங்களை சீர்குலைக்காதவண்ணம் மேலும் காத்திரமானதாக அமையவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பிலும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ரொரீ மன்கோவனுடன் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
அத்தோடு இலங்கையில் காலங்காலமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரியவாறான தண்டனை வழங்கப்படுவது அவசியம் என்றும், இல்லாவிடின் இலங்கையின் தற்போதைய நிலை ஏனைய நாடுகளுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடும் என்றும் அவர்கள் ரொரீ மன்கோவனிடம் எச்சரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM