(எம்.மனோசித்ரா)
சீன கண்காணிப்பு கப்பலால் மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்புக்களோ அல்லது பிரச்சினைகளோ ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, அதன் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையான்மைக்கு மதிப்பளித்து சீனா மற்றும் இந்தியாவுடனான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கமும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் செய்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பிராந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் யுவான் வாங் 5 கண்காணிப்புக் கப்பல் நேற்று செவ்வாய்கிழமை முற்பகல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்தது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த சீனக் கப்பல் நேற்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவான் வாங் 5 கப்பலை கடந்த 11 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் இக்கப்பலால் இந்தியாவின் முக்கிய தரவுகளை சேமிக்க முடியும் என்பதால், இதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாது என இந்தியா எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. அதற்கமைய கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும், இவ்வாறு கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தமைக்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்தியா உறுதியான காரணங்களை முன்வைக்க தவறியதாகத் தெரிவித்து , மீண்டும் சீனக் கப்பல் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்ட போது மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச மட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும், அரசாங்கமும் அனைத்து நாடுகளினதும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையான்மைக்கு மதிப்பளித்து அந்த நாடுகளுடனான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சீனக் கப்பலின் வருகை தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு முன்னரும் எமது நாட்டுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பாக்கிஸ்தான், இந்தியா, சீனா உட்பட வெ வ்வேறு நாடுகளிலிருந்து இது போன்ற யுத்த கப்பல்கள் வருகை தந்துள்ளன. மூன்றாம் தரப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அல்லது ஏதேனுமொரு பிரச்சினைக்கு வழிவகுக்காது என்றால் இவ்வாறு வருகை தரும் கப்பல்களுக்கான அனுமதி வழங்கப்படும்.
இறையான்மை மற்றும் சமத்துவ கொள்கைகள் , கோட்பாடுகளுக்கமையவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதற்கமையவே சீன கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் அயல் நாடான இந்தியாவினால் சில பிரச்சினைகள் தொடர்பில் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை, சீன கப்பலின் வருகை ஒத்தி வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முன்னெடுக்கப்பட்ட சகல கலந்துரையாடல்களுக்கமைய எந்தவொரு தரப்பிற்கும் பாரபட்சம் ஏற்படாத வகையில் அந்தந்த நாடுகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இது அனைத்து நாடுகளுக்கும் பொறுந்தும். அனைத்து நாடுகளும் எமக்கு முக்கியத்துவமுடையவையாகும். நாட்டில் பிரிவினை வாதத்தை தோல்வியடைச் செய்து, இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து , பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையான்மையைப் பாதுகாப்பதற்கும் இந்த நாடுகள் உதவியுள்ளன.
இவை எமது நட்பு நாடுகளாகும். இந்த நட்பு நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாத வகையில் எமது அரசாங்கமும் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் செயற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM