ஏ.எல். நிப்றாஸ்
இலங்கை அரசியலில் இதுவும் ஏதோ ஒருவகையில் நிலைமாறுகாலமாகவே கருதப்படுகின்றது. இப்போது தேசிய அரசாங்கம் மற்றும் பொதுவேலைத்திட்டம் பற்றியே பெரிதும் கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே, இது தனியினம், மதம் சார்ந்து சிந்திப்பதற்கு பொருத்தமான தருணமல்ல. ‘இலங்கையர்’ என்ற ஒரு கொடியின் கீழ் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் எனலாம்.
ஆயினும், சிறுபான்மை அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் தேசிய நெருக்கடிகளை தீர்ப்பதற்காக முன்னிற்கின்ற சமகாலத்தில் தங்களது எதிர்பார்ப்புக்கள், பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழித்தடத்திலும் சமாந்திரமாக பயணிக்க வேண்டியது தவிர்க்க முடியாத விடயமாக உள்ளது.
ஏனெனில், மக்கள் இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சூழலிலும் தேசிய அரசியலில் எல்லா நகர்வுகளும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. உள்நாட்டு அரசியலிலும் புவிசார் சர்வதேச அரசியலிலும் காணலாம். எனவே சிறுபான்மையினர் மட்டும் வெறுமனே வாழாவிருக்க முடியாது என்பதையும், எல்லாக் காலத்திலும் நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தமிழ் அரசியல்வாதிகள்; என்ற அடிப்படையில், தமது மக்களின் பிரச்சினைகளை முன்னொண்டு செல்வதில் குறியாக இருப்பதைக் காண முடிகின்றது. நாடு நெருக்கடியில் உள்ளது என்பதற்காக இரண்டு வருடங்களுக்கு இயங்கமால் இருக்க முடியாது என்ற யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
இந்த விடயத்தில் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் எந்த இடத்தில் உள்ளது? முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள், அபிலாஷைகள் முறையாக முன்வைக்கப்பட்டுள்ளதா? சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளதா? என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனும் சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டியுள்ளது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரை இதற்கு ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக கொள்ளப்படலாம். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களுக்கு முறையாக, அழுத்தமாக எடுத்துச்சொல்லப்படவில்லை. அல்லது அரசாங்கங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
ஜனாதிபதி நிகழ்;த்திய அக்கிராசன உரை தொடர்பில் பலதரப்பிலும் பாராட்டுக்குள் குவிந்துள்ளன. இலங்கையில் வாழும் எல்லா மக்களுக்குமான உரையாக அது அமைந்தது. அவர் தனதுரையில், இலங்கையின் இன, மத, கலாசார பன்மைத்துவத்தை அங்கீகரித்துப் பேசினார். தேசிய அரசாங்கத்திற்கும் கூட்டியணைந்த வேலைத்திட்டத்திற்கும் ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு, கூட்டிணைந்த வேலைத்திட்டம், தேசிய சபை அமைத்தல் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதில் தனக்குள்ள முனைப்பு பற்றி உரையாற்றினார். இந்தியாவை ‘குளிர்விக்கும்’ வகையிலான கருத்துக்களையும் முன்வைத்தார்.
மிக முக்கிமாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தனது உரையில் கணிசமான இடத்தைக் கொடுத்திருந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புலம்பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான சமிக்கையையும் அவரது உரையில் அவதானிக்க முடிந்தது. இதேவேளை, மலையக மக்கள் பற்றியும் அவர் பேசினார்.
இது நல்ல விடயம் என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை. ஆனால், இதேவிதமான முக்கியத்துவத்தை முஸ்லிம்களின் பிரச்சினைகளும் அபிலாஷைகளும் பெறவில்லையா, என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். ஆனாலும், இதற்காக ஜனாதிபதியையோ, அரசாங்கத்தையோ விமர்சிக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவும் அல்ல.
மாறாக, இதற்குக் காரணம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் முறையாக அரசாங்கங்களிடம் முன்வைக்கப்படவில்லை என்பதையே இங்கு கவனிக்க வேண்டியுள்ளது, முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதை அழுத்தமாக எடுத்துச் சொல்லவில்லை என்பதன் பிரதிபலிப்பே இதுவெனலாம்.
தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் அங்கீகரிப்பதையும் இவ்வுரை புலப்படுத்தியது.. ஆனால், மற்றைய சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கும் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாட்டின் உயரிய சபையில் பேசவைக்கும் நிர்ப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் விதத்திலான அரசியலை முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தனதுரையில் ஒரு இடத்தில் முஸ்லிம்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
“நாம் இன, மத மொழி, சமய ரீதியாக பிரிந்துள்ளோம். சில தரப்பினர் இந்தப் பிரிவை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இதனை பயன்படுத்தினர். பிரித்தாளுவதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர்;” என்று கூறியுள்ளார்.
இந்தநாட்டில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந் ஒரேயொரு ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க என்பதை மறுக்க முடியாது. அதனை அவர்; தனதுரையில் குறிப்புணர்த்தியிருக்கின்றார் என்பது ஆறுலான விடயமே. ஆயினும், ஏனைய விடயங்களைப் போலவே முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கொஞ்சம் பிரத்தியேகமாக, விரிவாக பேசாமவில்லை.
தமிழ் தேசிய அரசியல்வாதிகளைப் போன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகத்தின் பிரச்சினைகளை முறையாக, அழுத்தமாக மேலிடத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதன் பிரதிபலிப்பை, நாம் அவதானித்த இன்னுமொரு சந்தர்ப்பமாகவே இதனை கருத வேண்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் எல்லா ஆட்சியாளர்களிடமும் பிரச்சினையை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றது. இதனால் தமிழர்களின் விடயம் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.
அப்படியான ஒரு அரசியலை முஸ்லிம் கட்சிகள் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிப்பதை கடந்த காலங்களிலேய காணக் கூடியதாக இருந்திருக்கும்.
உண்மையில், முஸ்லிம்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. காணிப் பிரச்சினைகள் இவற்றுள் முக்கியமானவை. முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் உரிமை மீறல்கள், இன ஒதுக்கீட்டில்; பாரபட்சம், இனவாத நெருக்குதல்கள் மற்றும் வன்முறைகள் என இந்தப் பட்டியல் மிக நீளமானது.
ஆனால் இந்தப் பிரச்சினைகளை முஸ்லிம் மக்கள் பிரநிதிகள் முறையாக, ஆவணப்படுத்தி முன்வைக்க இல்லை. அரசியல் ரீதியான பேரம் பேசல்களின் போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகத்தின் அபிலாசைகள், பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தி, அவற்றை தீர்த்துத் தாருங்கள். அதைவிடுத்து எங்களுக்கு பதவியோ பணமோ தேவையில்லை என்று தொடர்;ச்சியாக கூறியிருந்தால், முஸ்லிம்களின் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
போனது போகட்டும்! இனிமேலாவது இந்தப் போக்கில் மாற்றம் வர வேண்டும். இந்த மாற்றம்தான் முஸ்லிம் அரசியலில் இப்போது அவசியமாகின்றது. ‘அரசியல் முறைமை’ மாற வேண்டும், ஆட்சியாளர்கள் மாற வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முஸ்லிம் அரசியலில் சமூகத்தை முன்னிறுத்திச் செயற்படும் விதத்திலான இந்த மாற்றம்தான் அவசரமாக ஏற்பட வேண்டியுள்ளது வேண்டும்.
அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்குள் ஓரிரு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட சந்திப்புக்களில் சில முக்கிய விடயங்கள், சமூகப் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அது உண்மையெனில் அது வரவேற்கப்பட வேண்டிய அணுகுமுறையாகும்.
கடந்த காலங்களிலும் இதுபோல ஆயிரத்தெட்டு சந்திப்புக்கள், உடன்பாடுகள் இடம்பெற்றன. ஆனால், பல்வேறு காரணங்களால், முஸ்லிம் சமூகம் அதன் பலனை அனுபவிக்கவில்லை. சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் இல்லை. அதுபோல இந்த சந்திப்புக்களும் அமையாமல், சமூகத்தின் பிரச்சினைகள் காத்திரமாக முன்னகர்த்தப்படுமாயின் மேற்சொன்ன மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாக அது அமையும். இல்லையென்றால், பழைய கதைதான் தொடரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM