(நா.தனுஜா)
கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய போராட்டக்காரர்கள், இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
காலிமுகத்திடல், கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அகற்றுமாறு கோட்டை பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
பொலிஸாரின் அவ்வறிவிப்பிற்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களைத் தொடர்ந்து, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்து எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலிமுகத்திடலில் உள்ள 'கோட்டா கோ கம' போராட்டக்களத்திலுள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றப்போவதில்லை என சட்டமா அதிபர் மேற்முறையீட்டு நீதிமன்றுக்கு உறுதியளித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் 10 ஆம் திகதி காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்த போராட்டக்காரர்கள், அதற்கு முன்னதாகப் போராட்டக்களத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.
அதில் கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர்:
நாம் இங்கிருந்து வெளியேறினாலும் எமது போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை என்பதைக் கூறிக்கொள்ளவிரும்புகின்றோம். அதன்படி நாம் முக்கிய 7 அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
அடக்குமுறைகளுக்கு எதிராக எழுச்சியடைவோம், அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும், மக்களாணை இல்லாத ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் பதவி விலகவேண்டும், மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்காத பாராளுமன்றத்தைக் கலைக்கப்பட்டு உடனடியாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும், நாட்டுமக்களின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்படவேண்டும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும், கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்தி அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணையவேண்டும் ஆகியவையே அந்த 7 அம்சங்களாகும் என்று குறிப்பிட்டனர்.
அதேவேளை அச்செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார கூறியதாவது:
அண்மையகாலங்களில் அடக்குமுறைச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. அவை அதிகரித்துச்செல்லும் விகிதாசாரத்திற்கு அமைவாக போராட்டங்களும் தீவிரமடையும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதுடன், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் போராட்டங்களைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையேற்படும். இவ்வாறானதொரு பின்னணியில் இதுவரையான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்ட அனைத்துப் போராட்டக்காரர்களுக்கும் சட்டத்தரணிகளான நாம் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் இப்போராட்டம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிப்பதற்கு அவர்களுடன் கைகோர்ப்போம் என்று உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து போராட்டம் ஆரம்பமான கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இப்போதுவரை போராட்டக்களத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அசம்பாவிதங்களால் உயிரிழந்த அனைவரும் நேற்றைய தினம் 'கோட்டா கோ கம'வில் நினைவுகூரப்பட்டதுடன் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் 'கோட்டா கோ கம'வில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள், பலகைகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்த கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் போராட்டக்காரர்களால் கழற்றப்பட்டு, அகற்றப்பட்டதுடன் அவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM