தனது இறுதி எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ

Published By: Vishnu

10 Aug, 2022 | 04:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றுபடுமாறு எனது கடசிக்கு அழைப்பு விடுத்தபோதும் அந்த தீர்மானத்தை எடுக்க தவறியதால் நான் தீர்மானம் எடுத்தேன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் என்பதே எனது இறுதி எதிர்பார்ப்பாகும் அந்த முயற்சியை நான் இன்னும் கைவிடவில்லை என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி புதன்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியொருவரின் உரைக்கு அதிகளவில் வரவேற்பளிக்கப்பட்ட உரையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையை கூறலாம்.

கோத்தாபய ராஜபக்ஷ்வே ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தார். அதன்போது அவருக்கு தவறிய இடங்களும், ரணில் புரிந்துகொண்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கடிகளை சரியாக அடையாளம் காணமுடியாது இருந்தது. அதேபோன்று நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை.

அதனால்தான் நாட்டுக்குள் குழப்பம் ஏற்பட காரணமாகும். 2019 இல் இருந்து பாராளுமன்றத்துக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பமாகியது. அதன்படியே அவர்கள் எதிர்பார்ப்புகளுடன் வீதிகளில் சித்திரங்களை வரைந்தனர். 

அந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனதை தொடர்ந்தே போராட வேண்டியேற்பட்டது. ஏப்ரல் 9 ஆம் திகதி போராட்டம் இவ்வாறான நெருக்கடியுடனேயே ஆரம்பமாகியது.

இந்நிலையில் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஒரு மாதத்திற்காவது இருப்பதற்காக வாருங்கள் என்று கூறியிருந்தனர்.

விரட்டியடிக்கும் வரை திரும்பிச்செல்வதில்லை, இறுதி போராட்டம் என்றும் கூறினர். ஆனால் அவ்வாறு மக்கள் வரவில்லை. 

இப்போது மக்களுக்கு இது போதுமாகிவிட்டது. ரணில் விக்கிரமசிங்க மீது இப்போது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க சரியாக செய்யாவிட்டாலோ இந்த அரசாங்கம் சரியாக செய்யாவிட்டாலோ மீண்டும் மக்கள் போராடலாம். நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். 

எங்கள் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் அடுத்த முறை வாக்குகள் கிடைக்குமா என்றும் தெரியாது ? ஆனால் நோயாளி இறந்தாலும் எமது வயிறு சுத்தம் என்பது போன்றே நாங்கள் செயற்பட்டோம். பதவிக்காக வரவில்லை. பொறுப்புடன் செயற்பட்டோம்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு நான் பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அழைப்பு விடுத்தோம். கட்சி வரவில்லை.

ஆனால் நாங்கள் வந்தோம்.மொட்டுக் கட்சியை பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்கவை நியமித்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் ரணிலுக்கு முன்னர் சஜித்தையே கோத்தாபய ராஜபக்ஷ் அழைத்திருந்தார். பின்னர் சரத் பொன்சேகாவை அழைத்தார். அப்படியென்றால் கட்சியை பாதுகாக்க அழைத்தார் என்றால் முதலில் ரணில் விக்ரமசிங்கவையே அழைத்திருக்க வேண்டும்.

நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரே. இன்னும் எனது அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்தைக் கூட அகற்றவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதையே நான் விரும்புகின்றேன். இதுவே எனது இறுதி இலக்காகும்.

அத்துடன் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தளவு நாட்டில் பிரச்சினை இருக்கும்போது ஏன் அரசியல்வாதிகளுக்கு ஒன்றுபட முடியாது என்பதாலே மக்களுக்கு அரசியல் வாதிகள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அதற்காகவே ஜனாதிபதி சர்வகட்சி முறைக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். அதனால் எமக்குள் இருக்கும் பேதங்களை அகற்றிவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டால் மாத்திரமே நாட்டை பாதுகாத்துக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்