(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம். வசீம்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் பாரம்பரிய பெயரை மாற்றி இராணுவத்தினரது தலையீட்டுடன் இராணுவ பெயர்களை முன்பள்ளி பாடசாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளமை முழுமையாக வெறுக்கத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றில் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அத்தியாவசியமானது, காணிபிரச்சினைக்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான புதிய கொள்கை ,புலம்பெயர் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல் அவசியம் என ஜனாதிபதி தனது 99 பக்க கொள்கை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம் புரையோடி போயுள்ளது. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அடிப்படை பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த இரண்டு வருடகாலமாக முன்னாள் ஜனாதிபதி எவ்வித பேச்சுவார்த்தையினையும் முன்னெடுக்கவில்லை.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி அவதானம் செலுத்தினால் அவர் சிறந்த ஜனாதிபதியாக கருதப்படுவார்.நாட்டின் இனவன்முறை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நன்கு பரீட்சயம் உண்டு. தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் பொருளாதாரம் நிச்சயம் முன்னேற்றமடையும்.
யுத்தம் மற்றும் அதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் மற்றும் முறையற்ற பொருளாதார கொள்கை அரசமுறை கடனுக்கு பிரதான காரணியாக உள்ளது என்பதை உலகம் அறிந்துக்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் இராணுவம் இல்லையா என்று எண்ண தோன்றும் அளவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகி நகர் புன்னைநீராவியில் உள்ள பாற்கடல் பூங்கா முன்பள்ளியின் பெயர் மற்றும் அதே பிரதேசத்தில் உள்ள மயில்வாகனபுரம் பகுதியில் உள்ள மயூரன் முன்பள்ளியின் பெயர் இராணுவத்தினரது தலையீட்டுடன் வீரமுத்துக்கள் முன்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இச்செயற்பாடு கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன கல்வி நிலையை கேள்வி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றபோது கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வி திணைக்களங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு சிவில் பாதுகாப்பு தரப்பினரது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இராணுவத்தினரிடம் சம்பளம் பெற்று முன்பள்ளி பாடசாலைகளில் சேவையாற்றும் நிலை வடக்கு ஆசிரியர்களுக்கு வலிந்து ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.இராணுவத்தினர் நிர்வாகத்தின் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை மாகாண கல்வி திணைக்களங்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருமாக பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை.
உலகில் எங்குமில்லாத வகையில் சிறுவர் உரிமைகளை முடக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் முன்பள்ளி பாடசாலைகளை நிர்வகிப்பது பிறிதொரு இன அடக்கு முறையாக கருதப்படும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ சின்னம் பொருந்தி சீறுடை தரித்தவர்கள் முன்பள்ளி பாடசாலைகளில் நிர்வாக கட்டமைப்பில் தலையிடுவது எமது பண்பாட்டு மற்றும் கல்வி முறைமையை பாதிப்பிற்குள்ளாக்கும் செயற்பாடாக கருத முடிகிறது.
தமிழ் மக்களின் கல்வி உரிமையில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது காலம் காலமாக வலி தாங்கி நிற்கும் எமது உறவுகளை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவம் வகையில் காணப்படுகிறது.முன்பள்ளி பாடசாலைகளுக்கு இராணுவ பெயரை சூட்ட முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறான செயற்பாட்டை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM