சிவலிங்கம் சிவகுமாரன்
கொட்டகலை பிரதேச சபையின் நிர்வாகப் பிரிவுக்குள் அமைந்துள்ள பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் கடைத்தொகுதி தொடர்பில் தொட ர்ந்தும் மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. இக்கட்டிடமானது யாருடைய அனுமதியுடன் இங்கு அமைக்கப்பட்டது, அமைத்தவர்கள் யார் என்பது குறித்து இது வரை தெளிவான தகவல்களை வழங்க எவரும் முன்வரவில்லை.
இவ்விடத்தில் ஒரு கடைத்தொகுதியை மக்கள் நலனுக்காக அமைக்க ஆரம்பத்தில் சமூர்த்தி அதிகார சபை ஊடாக சமூர்த்தி பிரஜா சங்கத்தினர் மேற்கொண்ட முயற்சிகளை ஆதாரங்களுடன் நாம் வீரகேசரியில் வெளியிட்டிருந்தோம். அதையடுத்து மறு நாள் திங்கட்கிழமை இக்கடைத்தொகுதிக்கு முன்பாக பிரதேசத்தைச் சேர்ந்த சமூர்த்தி பயனாளிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
தாம் சமூர்த்தி நலன்களை பெறுவதற்கு காலத்தையும் பணத்தையும் வீணாக்கி தலவாக்கலை வரை பயணித்துக்கொண்டிருப்பதாகவும் இது தமது நலனுக்காக அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்றால் அதை தமது பயன்பாட்டுக்கே தரப்படல் வேண்டும் என்றும் இதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாலேயே இன்னும் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர்கள் கூறினர்.
இச்சந்தர்ப்பத்தில் இது கடைத்தொகுதி குறித்து நாம் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக கொட்டகலை பிரதச சபையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் வழங்கப்பட்ட பதில்களில் தெளிவின்மையும் முரண்களும் உள்ளதை இங்கு சுட்டிக்காட்டல் அவசியம். மேற்படி விவகாரம் தொடர்பில் நாம் எழுப்பியிருந்த கேள்விகள் இவ்வாறு இருந்தன,
மேற்படி கடைத்தொகுதி கொட்டகலை பிரதேச சபைக்குரியதா?
குறித்த கடைத்தொகுதி அமையப்பெற்றுள்ள காணி பிரதேச சபைக்குரியதா?
எந்த அடிப்படையில் எந்த காலப்பகுதியில் மேற்படி காணி பிரதேச சபையின் அதிகாரத்துக்குள் வந்தது?
குறித்த காணி பிரதேச சபைக்குரியது இல்லை என்றால், அது யாருக்கு உரித்துடையது?
இங்கு கடைத்தொகுதி அமைப்பதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டதா?
6) கடைத்தொகுதியின் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர்கள் யார்?
7) குறித்த காணியோ அல்லது கடைத்தொகுதியோ கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமானது இல்லை என்றால் அது எந்த உள்ளூராட்சி சபையின் கீழ் வருகின்றது?
8) யாருடைய அனுமதியும் இன்றி இக்கடைத்தொகுதி அமைக்கப்பட்டிருந்தால் அது சட்ட விரோத கட்டிடமா?
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு கொட்டகலை பிரதேச சபையால் வழங்கப்பட்ட பதில்கள் இவ்வாறு அமைந்துள்ளன.
1,2) கடைத்தொகுதியும் அது அமைந்துள்ள காணியும் கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமானதில்லை.
3) 2043/57 ஆம் இலக்க விசேட வர்த்தமானி ஊடாக 20/03/2018 ஆம் திகதி உருவாக்கப்பட்ட கொட்டலை பிரதேச சபையின் அதிகார பிரிவில் இவ்விடம் அமைந்துள்ளதால் சபையின் அதிகார எல்லைக்குள் வந்தது.
4) குறித்த காணி அவ்விடத்தில் அமைந்துள்ள ஆலய பரிபாலன சபையால் பாராமரிக்கப்பட்டு வருகின்றது.
5) கடைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு கொட்டலை பிரதேச சபையினால் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
6) கடைத்தொகுதியை அமைப்பதற்கு பிரதே சபையுடன் எவரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
7) இக்காணி கொட்டலை பிரதே சபைக்கு சொந்தமானது இல்லை என்றாலும் சபையின் அதிகாரப் பிரிவில் அமைந்துள்ளது.
8) இந்த கடைத்தொகுதிக்கான அனுமதி பத்திரம் நுவரெலியா பிரதே சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில்களிலிருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம்.
• அதாவது குறித்த காணி கொட்டலை பிரதேச சபைக்கு சொந்தமானதாக இல்லையென்ற போதிலும் அது மேற்படி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் வருகின்றது. ஆகவே எந்த வெளித்தரப்பினரும் பிரதேச சபையை அணுகாமல் ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் பிரகாரம் அனுமதியில்லை. அப்படி அமைக்கப்பட்டிருந்தால் அது சட்டவிரோத கட்டிடமாகக் கருதப்படல் வேண்டும். அதற்கு எதிராக பிரதேச சபை வழக்கு தொடரலாம்.
• நுவரெலியா பிரதேச சபையானது கொட்டலை பிரதேச சபை , அக்கரபத்தனை பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அதன் நிர்வாக எல்லைக்குள் இருந்த மேற்படி பிரதேசம் கொட்டகலை பிரதேச சபையின் வசமானது. இதை கொட்டகலை பிரதேச சபையே தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே நுவரெலியா பிதேச சபையின் காலத்தில் அவர்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளையும் தற்போது கொட்டகலை பிரதேச சபையே கொண்டுள்ளது.
• குறித்த காணி அவ்விடத்தில் அமைந்துள்ள ஆலய பரிபாலன சபையினரால் பராமரிக்கப்பட்டு வருவதாக பதில் தரப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்துக்கு இது நாள் வரை எந்த நிர்வாக சபைகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லையென்பதே உண்மை. ஏனென்றால் அந்த ஆலயம் இது வரை பதிவு செய்யப்படவில்லை. அது டெவன் மற்றும் கிரேக்கிலி தோட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இது வரை காலமும் நிர்வாக சபை இல்லாத காரணத்தினாலும் இந்த கடைத்தொகுதியை அமைத்தத் தரப்பினர் அது ஆலயத்துக்கு உரியது என்பதை மக்களிடம் காட்டுவதற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கடந்த 25/07/2022 திங்கட்கிழமையன்று முதன் முறையாக ஒரு நிர்வாக சபையை அமைப்பதற்கு நுவரெலியா மாவட்ட செயலாளரினால் குறித்த ஆலயம் அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆகவே இதன் மூலம் இதற்கு முன்பதாக இந்த ஆலயத்துக்கு ஒரு நிர்வாக சபை இருந்திருக்கவில்லையென்பது உறுதியாகின்றது. இது குறித்து கொட்டலை பிரதேச சபை ஏன் தேடிப்பார்க்கவில்லையென்பது தெரியவில்லை.
• அக்கடைத் தொகுதியை அமைப்பதற்கு கொட்டகலை பிரதேச சபை அனுமதி வழங்கவில்லையென பதில் தரப்பட்டுள்ளது. அப்படியாயின் தமது நிர்வாக எல்லைக்குள் வரக்கூடிய குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வருட காலமாக யாரோ நிர்மாணப்பணிகளை முன்னெடுத்து வந்தமை குறித்து கொட்டகலை பிரதே சபையின் நிர்வாகம் உட்பட , இது குறித்து தேடிப்பார்க்கும் பொறுப்பை கொண்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர் (T.O) மற்றும் வருமான வரி பரிசோதகர் ( R.I) ஆகிய தரப்பினருக்கு இது தெரியாமலிருந்தமை ஆச்சரியமே. மேலும் அனுமதி வழங்கப்படாமல் அமைக்கப்படும் எந்தவொரு கட்டிடத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க 1982 ஆம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் 8 ஏ (1) பிரிவின் கீழ் உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் உள்ளது.
• குறித்த கடைத்தொகுதிக்கான கட்டிட அனுமதி பத்திரத்தை 2008 ஆம் ஆண்டு நுவரெலியா பிரதே சபை வழங்கியுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி பத்திர ஆவணம் இணைக்கப்படவில்லை. எனினும் இது குறித்து நாம் பிரதேச சபை தவிசாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது 2008 ஆம் ஆண்டு அப்போதைய தவிசாளர் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் முன்வைத்து கட்டிட வரைபுக்கு ( Building Plan) அனுமதி அளித்து கையொப்பம் இட்டிருப்பதாக கூறியிருந்ததுடன் அந்த வரைபு பிரதி ஒன்றையும் அனுப்பியிருந்தார். இந்த இறுதி பதில்கள் மூலம் எமக்கு பல கேள்விகள் எழுகின்றன.
1) ஆலயத்துக்கு புதிய பரிபாலன சபையை தெரிவு செய்ய 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு மேற்படி ஆலய பரிபாலன சபையினர் என இவ்விடத்தில் கட்டிடம் அமைப்பதற்கு அப்போதைய தவிசாளரை அணுகிய தரப்பினர் யார்?
2) ஆலயம் இது வரை பதிவு செய்யப்படவில்லை. காரணம் அங்கு ஒரு நிர்வாக சபை இருந்திருக்கவில்லை. ஒரே ஒரு பூசகர் மாத்திரமே ஆலயத்தை நிர்வகித்து வருகிறார். அப்படியாயின் அப்போதைய தவிசாளர் ஏமாற்றப்பட்டிருக்கின்றாரா? அல்லது அவர் அது குறித்து தேடிப்பார்க்கவில்லையா?
3) 2008 ஆம் ஆண்டு அப்போதைய நுவரெலியா பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்ட கட்டிட வரைபை பயன்படுத்தி 14 வருடங்களுக்குப்பிறகு இப்போதைய கொட்டகலை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் இந்த கடைத்தொகுதியை சட்டரீதியாக அமைக்க முடியுமா என்ற கேள்வி ஏன் கொட்டகலை பிரதேச சபைக்கு எழவில்லை? ஏனெனில் ஒரு கட்டிடமோ குடியிருப்போ அமைப்பதற்கு குறித்த உள்ளூராட்சி சபையிடம் அனுமதி பெறும் போது அதற்கான அனுமதி பத்திரத்தின் பெறுமதி மூன்று வருடங்கள் மாத்திரமே என நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் கூறுகின்றது.
ஆகவே இதன் பின்னணியில் உள்ள மர்மங்களை கொட்டகலை பிரதேச சபையே தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. மேலும் கடைத்தொகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. ஆனாலும் இக்கடைத்தொகுதியை அருகில் உள்ள ஆலயத்தின் சொத்தாக மாற்றுவதற்கு சில தரப்பினர் முயன்றுள்ள அதே வேளை அவசர அவசரமாக நிர்வாக சபையை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய நிர்வாக சபை தெரிவுக்கு எதிர்ப்புகள்
இதற்கான அறிவித்தல் கடந்த 21/07/2022 அன்று பத்தனை பிரதேச மக்களுக்கு அறிவிக்கப்பட்டதோடு கூட்டம் இடம்பெறும் திகதியாக 25 ஆம் திகதி திங்கட்கிழமை குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் மக்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறும் சங்க கூட்டங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை புதிய கூட்டங்களை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது 14 நாட்கள் அறிவித்தலே பின்பற்றப்படல் வேண்டும். இது குறித்து நாம் ஆராய்ந்து பார்த்ததில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலின் படியே உடனடியாக இக்கூட்டத்தை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் அரசியல் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகமும் இங்கு எழுகின்றது. ஆனால் குறித்த தினத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ஆலயம் அமைந்துள்ள தோட்டப்பிரிவு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு எந்த தெரிவும் இடம்பெறவில்லை.
எனவே இந்த கடைத்தொகுதிக்கும் அருகில் அமைந்துள்ள ஆலயத்துக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ஆலயத்துக்கு நிர்வாக சபை ஒன்றும் இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை. நிர்வாக சபை ஒன்று இல்லாத ஆலயத்துக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பதை தீர்மானிப்பது யார்? ஆகவே குறித்த கடைத்தொகுதியின் பின்னணியில் ஒரு பெரிய அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளமையை இப்பிரதேச மக்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளனர். சமூர்த்தி பயனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை யாரோ மூன்றாம் தரப்பினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வளவு சம்பவங்களுக்கு பிறகும் அரச அதிகாரிகள் இந்த சட்டவிரோத கடைத்தொகுதி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்காமலிருப்பதுவும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளமை முக்கிய விடயம்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கொட்டகலை பிரதேச சபை நிர்வாகம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கீழ் உள்ளது. சபையின் நிர்வாக பிரதேசத்துக்குட்பட்ட ஒரு இடத்தில் இனந்தெரியாதோரால் அமைக்கப்பட்ட இக்கடைத்தொகுதி குறித்து பிரதேச சபையானது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருப்பதற்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் எதுவும் உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் நாம் வினவிய போது, இந்த கடைத்தொகுதி யாரால் அமைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி தான் உரிய தரப்பினரிடம் கேட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பில் தான் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் ஆகியோருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும், குறித்த கடைத்தொகுதி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தால் அதை அகற்றுவதற்குரிய வழிவகைகளை அவர்கள் ஆராய்வதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் என்ன கூறுகின்றது?
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகளில் அல்லது அதன் நிர்வாக அலகுக்குள் வரக்கூடிய பகுதிகளில் ஒரு கட்டிடத்தையோ அல்லது குடியிருப்பையோ அமைப்பதற்கு என்ன நடைமுறைகள் என்பதை நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் கூறுகின்றது. எனினும் இதில் 2021 ஆம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் சட்டவிதிகளில் மாற்றங்கள் இல்லை. கட்டணங்களில் மாத்திரமே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சை தன் வசம் கொண்டிருந்த போது, 08/07/2021 அன்று விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் படி, இதன் 29 ஆவது பிரிவு கூறுவது என்னவென்றால்,
ஒரு கட்டிடமோ, குடியிருப்போ அமைப்பதற்கான விண்ணப்பம், விண்ணப்பதாரியால் உரிய முறையில் நிரப்பப்பட்டு அதன் தொழில்நுட்ப ரீதியான முன்மொழிவுகள் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். பின்னர் திட்டமிடல் குழுவின் (Planning Committee) பரிசீலனைக்குப் பிறகே அதற்கான அபிவிருத்தி அனுமதி பத்திரம் (Development Permit) வழங்கப்படும். பிரிவு 30 இன் உப சரத்துகள் இவ்வாறு உள்ளன,
அபிவிருத்தி அனுமதி பத்திரமானது ஒரு வருடத்திற்கே செல்லுபடியாகும்.
குறித்த கட்டிடமோ குடியிருப்போ, ஒரு வருட காலத்துக்குள் பணிகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் அல்லது பூர்த்தியாக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கிய தரப்பினருக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களை விண்ணப்பதாரி உரிய முறையில் முன்வைக்கும் போது அந்த அனுமதி பத்திரத்தை ஆகக்கூடியது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கலாம்.
இந்த காலகட்டத்துக்குள் மேற்படி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க வேண்டுமாயின் உரிய தரப்பினரின் கண்காணிப்பு அறிக்கையை பெற்று அதற்கான படிவத்தை சமர்ப்பிப்பது மட்டுமல்லாது அதற்கான உரிய கட்டணங்கள் செலுத்தப்படல் வேண்டும்.
4) மூன்று வருடங்களுக்குப்பிறகு அபிவிருத்தி அனுமதி பத்திரம் காலாவதியானதாகக் கருதப்படும்.
பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு சொந்தமானது ?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM