(நா.தனுஜா)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து அவரைச் சந்தித்துப் பேசியதாகவும், இதன்போது சுமுகமானதும் நேரடியானதுமான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக மீளுறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் நாட்டின் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அதனைத்தொடர்ந்து அங்கு வருகைதந்திருந்த கட்சித்தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப்பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இன்று (நேற்று) கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தேன். இதன்போது எமக்கிடையில் சுமுகமானதும் நேரடியானதுமான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. அதேவேளை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான செயற்திறன்மிக்க ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சி கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தினேன்.
அத்தோடு அரசியல் சந்தர்ப்பவாதிகள் நாட்டின் தேசிய வளங்களை வீணடிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பெருமளவான அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்குப் பதிலாக, தேசிய ரீதியில் காணப்படும் எதிர்பார்ப்பை அடைந்துகொள்வதற்கு பாராளுமன்ற குழு முறைமையை மேலும் வலுப்படுத்தலாம் என்ற யோசனையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன் என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM