புதிய ஜனாதிபதி தெரிவு நாளை ! வாக்கெடுப்பு எவ்வாறு இடம்பெறும் !

Published By: Vishnu

19 Jul, 2022 | 02:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை புதன்கிழமை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டாவது தடவையாக இவ்வாறு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி தெரிவு இடம்பெறுகின்றது.

அதற்கமைய சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடிய போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலரின் கடமைகளை செயற்படுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகபெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிய, அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார உறுதிப்படுத்தினார்.

அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக விஜித ஹேரத் முன்மொழிய, அதனை ஹரினி அமரசூரிய உறுதிப்படுத்தினார்.

வாக்கெடுப்பு எவ்வாறு இடம்பெறும்

வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னர் தெரிவத்தாட்சி அலுவலர் வெற்று வாக்கு பெட்டியை உறுப்பினர்களுக்கு காண்பித்து அதனை முத்திரையிடுவார். 

சபாநாயகருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்கெடுப்பு ஆரம்பமானவுடன் உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அலுவரின் மேசைக்கருகில் சென்று வாக்குசீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தெரிவத்தாட்சி அலுவலர் அந்த வாக்குச்சீட்டில் தனது முதலெழுத்துடன், கையொப்பத்தை இடுவார்.

அதன் பின்னர் சபை நடுவில் வைக்கப்படும் வாக்கு பெட்டியில் தனது  தனது வாக்கினை பதிவு செய்ய முடியும்.

வாக்குச்சீட்டில் எவ்வாறு பதிவிடுவது

ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு மட்டும் வழங்கப்படும். வாக்களிக்கும் வேட்பாளரின் பெயருக்கு முன்னாள் உள்ள பகுதியில் 1 என இலக்கமிட்டு தமது வாக்கினை அடையாளப்படுத்த வேண்டும்.

பல வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் விருப்பு வாக்கு வழங்க வாய்ப்பு வழங்கப்படும். அதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கமைய  வேட்பாளர்களின் பெயருக்கு முன்பாக உள்ள கூட்டில் 2,3  என இலக்கமிட்டு தமது விருப்பு வாக்கினை வழங்க முடியும்.

பெயர் அழைக்கப்படும் போது வாக்கு அளிக்காத உறுப்பினர்களின் பெயர்களும் வாக்கெடுப்பு முடிவடைய முன்னர் மீண்டும் அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் போது குறித்த உறுப்பினர்கள் வாக்களிக்காதிருந்தால் அவர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவர்.

வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படுவதோடு ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளும் எண்ணப்படும். வேட்பாளர்கள் விரும்பினால் வாக்கு எண்ணப்படும் இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுப்படியான வாக்குகளின் எண்ணிக்கையில் அரைவாசிக்கு மேலான வாக்குகள் ஒரு வேட்பாளருக்கு கிடைக்குமாயின் அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற  செயலாளர்நாயகம் (தெரிவத்தாட்சி அலுவலர்) சபைக்கு உடனடியாக அறிவிப்பார்.

செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்க மேலான வாக்குகள் எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். அவ்வாறு நீக்கப்படும் உறுப்பினருக்கு முதலாவது விருப்பைத் தெரிவித்த உறுப்பினர்களின் இரண்டாவது விருப்புத் தெரிவு உரிய வேட்பாளர்களின் வாக்குகளுடன் இணைக்கப்படும்.

எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியான வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லையாயின் வாக்கு எண்ணும் போது அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் சபைக்கு அறிவிப்பார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றால் தெரிவத்தாட்சி அலுவலரின் தற்துணிவின் பேரில் திருவுளச்சீட்டு போடப்படும்.

பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து மூன்று நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியின் பெயரை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59