சீயான் விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் தொடக்க விழா

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 11:30 AM
image

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சர்பட்டா பரம்பரை’ என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் முதன்முறையாக சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்க, இசையமைக்கும் பணியை 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் ஏற்றிருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் சிவக்குமார், நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் எஸ் ஆர். பிரபு உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றி படக்குழுவினரை வாழ்த்தினர். 

விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களைத் தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பதாலும், கார்த்தி, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆர்யா ஆகியோர்களைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குவதாலும், இவர்கள் இருவரும் இணையும் பெயரிடப்படாத புதிய படத்திற்கு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right