(நா.தனுஜா)
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தமைக்காக நேரடியாகப் பொறுப்புக்கூறவேண்டிய நிலையிலுள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடந்த சனிக்கிழமை (9) நடைபெற்ற போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கும் மத்திய வங்கியின் நிறைவேற்று அலுவலர்கள் சங்கம், ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு மக்கள் ஆணைக்கு இணங்கி ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களது பதவிகளிலிருந்து விலகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்தும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கியின் நிறைவேற்று அலுவலர்கள் சங்கம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இன்றளவிலே நாடு என்ற ரீதியில், குறிப்பாக மத்திய வங்கி அதிகாரிகளினதும் தொழில்சார் நிபுணர்களினதும் ஆலோசனைகளைப் புறக்கணித்து, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பொருளாதாரத்தைத் தவறாக நிர்வகித்ததன் பாதக விளைவுகளை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அரசியல் தொலைநோக்கின்மை, பலவீனமான அரசியல் தலைமைத்துவம், அரசியல் உறுதிப்பாடின்மை என்பவற்றின் காரணமாக தற்போது சர்வதேச சமூகத்திடமிருந்து எத்தகைய வடிவத்திலேனும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. இதன்காரணமாக நாட்டின் நிகழ்காலமும் எதிர்காலமும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஆனால் இத்தகைய நெருக்கடிநிலைக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை மிகப்பாரதூரமான வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்கு மத்திய வங்கியானது தமது இயலுமை எல்லைக்குள் இருந்து அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றது.
அதுமாத்திரமன்றி முக்கியமான கொள்கை மறுசீரமைப்புக்களையும் மேற்கொண்டுவருகின்றது. எதுஎவ்வாறிருப்பினும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மத்திய வங்கியினால் மாத்திரம் நாட்டை மீட்டெடுக்கமுடியாது என்பதை நினைவுறுத்துகின்றோம்.
மத்திய வங்கியினால் நாணயக்கொள்கையின் ஊடாக மாத்திரம் இப்பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது. மாறாக அதனை முன்னிறுத்தி இறைக்கொள்கையிலும் உரியவாறான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
எனவே பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுக்கவிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அதன் மீட்சிக்கு அவசியமான அனைத்துப் பொருளாதாரக்கொள்கைகளும் நாணய மற்றும் இறைக்கொள்கைகளின் வலுவான ஒருங்கிணைவுடன் அமுல்படுத்தப்படவேண்டும்.
மேலும் இப்பேராபத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அடிப்படை மூலமாகக் காணப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மிகவிரைவில் உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும்.
ஆகவே தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்படுமாறும், நாட்டில் அராஜகங்கள் எவையும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள்விடுக்கின்றோம். தமது கட்சி அல்லது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை அளிப்பதனைவிடுத்து, நாட்டில் ஏற்படுத்தப்படவேண்டிய அரசியல் மற்றும் சமூக உறுதிப்பாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM