(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதியை பதவி நீக்க காலி முகத்திடலில் இன்று பெரும் போராட்டம் : ஸ்தம்பிக்கும் நிலையில் கொழும்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று சனிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எவ்வித அரசியல் கட்சிகளினதும் தலையீடு இன்றி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களினால் இன்றைய ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்டா - ரணில் அரசாங்கத்தை பதவி விலகச் செய்வோம் என்ற தொனிப்பொருளிலேயே இன்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி , மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும் , சிவில் சமூக அமைப்புக்களும் , மதத் தலைவர்களும் வெவ்வேறு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
இவ்வாறு கொழும்பில் பரந்தளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைக் கருத்திற் கொண்டு முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் நேற்று முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்ப்பாட்டங்களுக்கு வருகை தருவதற்கு தமது சங்கத்தின் ஊடாக எந்தவொரு பேரூந்தையும் வழங்கப் போவதில்லை என்று அகில இலங்கை பேரூந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மதத் தலைவர்கள்
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பௌத்த மதத் தலைவர்கள் 07 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் புறக்கோட்டை அரசமர சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் அங்கிருந்து பேரணியாகச் சென்று காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து பேரணி
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நீர்கொழும்பிலிருந்து இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் சைக்கிள் மூலம் பேரணியாக கொழும்பை வந்தடையவுள்ளனர்.
இவர்கள் 07 ஆம் திகதி தமது பேரணியை ஆரம்பித்திருந்தனர். வியாழனன்று பேரணியை ஆரம்பித்த இவர்கள் அன்றிரவு நீர்கொழும்பு - கோட்டா கோ கமவில் தங்கியிருந்து , நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் மீண்டும் கொழும்பிற்கான பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டில் காணப்படும் அடிமை கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்காகவே தாம் சுயமாக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று களனி பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பாரிய பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் ஆதரவு
இதேவேளை இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருணாகல் கோட்டா கோ கம , கண்டி , மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சைக்கிள் ஊடாக பெருந்திரளானோர் பேரணியாக வருகை தரவுள்ளனர். இவர்கள் தமது பேரணியை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM