குற்றம் நடந்தால் நிலைமை மோசமாகும் எனக் கூறி 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய கோரிக்கை ; நீதிமன்றம் மறுப்பு

Published By: Digital Desk 4

08 Jul, 2022 | 07:07 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நாளையும் (08) நாளைமறுதினமும் (09) கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை அண்மித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், அப்பகுதிக்குள் நுழையவும்  தடை விதித்து உத்தரவு பிறப்பிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று ( 7) நீதிமன்றம் நிராகரித்தது.

உளவுத் தகவல்களை ஆதாரம் காட்டி, கோட்டை பொலிஸார் குற்றவியல் சட்டத்தின்  XXXVI பகுதியின் 414 ஆம் அத்தியாயத்துக்கு அமைய சத்தியக் கடதாசி ஒன்றினை முன் வைத்து  பீ 22502/22 எனும் வழக்கினை தாக்கல் செய்து முன் வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இவ்வாறு நிராகரித்தார்.

இந்த வழக்கானது இன்று (7) பிற்பகல், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, கோட்டை பொலிஸார் சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக்குடன் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  ஜனக பண்டார தலைமையிலான குழுவினர் ஆஜராகினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் சட்டத்தரணிகளான  நுவன் போப்பகே, குனரத்ன வன்னி நாயக்க, ஜயந்த தெஹி அத்தகே உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

நாட்டின் பொருளாதார  நெருக்கடி நிலைமை உள்ள நிலையில், கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்து பொருளாதார மர்மஸ்தானம் அமைந்துள்ளதாக  கோட்டை பொலிஸார் சார்பில் நீதிமன்றுக்கு சத்தியக் கடதாசி ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 நட்சத்திர ஹோட்டல்கள் பல அப்பகுதியில் அமைந்துள்ளதன் பின்னணியில், உளவுத் துறை தகவல்களுக்கு அமைய, ஆர்ப்பாட்டங்களின் போது ஏதேனும் குற்றங்கள் நிகழ்ந்தால், நட்சத்திர ஹோட்டல்கலில் தங்கியுள்ள  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு செல்லும் நிலை ஏற்படலாம் எனவும் அது நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொருளாதாரத்தை மேலும் அதல பாதாளத்தில் தள்ளும் எனவும்  பொலிஸாருக்காக மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  ஜனக பண்டார மன்றில் குறிப்பிட்டார். எனவே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க தடை விதிக்குமாறு  அவர் கோரினார்.

எனினும் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் குறித்த கோரிக்கையை நிராகரிக்குமாறு கோரினர்.  கருத்து சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் அரசியலமைப்பூடாக உறுதி செய்யப்பட்டவை என அவர்கள் வாதிட்டனர்.

இந்த நிலையில் இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் கேமிந்த பெரேரா, ஆர்ப்பாட்டத்தின் இடையே குற்றங்கள் நடந்தால் பொருளாதார நிலைமை மேலும் பாதிப்படையும் என்பது உறுதியானதே என தெரிவித்தார்.

எனினும்  அரசியலமைப்பூடாக உறுதி செய்யப்பட்ட உரிமைக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் முன் வைக்கும் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் நீதிவான் அறிவித்தார்.

' குற்றச்செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளன. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பில் ' ஜனகோஷா ', விஜித்த பெரேரா வழக்குத் தீர்ப்புக்களில் (உயர் நீதிமன்றம்) போதுமான வழிகாட்டல்கள் உள்ளன. பொது மக்களுக்கு எந்த ஒரு இடத்துக்கும் சென்று வருவதற்கான உரிமை உள்ளது.

 தற்போதும் எரிபொருள், மின்சார பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். 

எனவே இந்த விடயத்தில் நீதிமன்ற தலையீடு அவசியமற்றது. குற்றச்செயல் இடம்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளன.

எனவே பொலிஸாரின் கோரிக்கையை நிராகரிக்கின்றேன்.' என நீதிவான் கேமிந்த பெரேரா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21