லோகன் பரமசாமி
உலகம் தற்போது, அரசியல் மூலோபாய ரீதியாக இரு கூறுகளாக பிரிந்து கிடக்கிறது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஒரு தரப்பாகவும், ஏனைய நாடுகள் பிறிதொரு தரப்பாகவும் உள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இருபெரும் சர்வதேச மாநாடுகள் இதனை தெளிவாக எடுத்து காட்டுகின்றன.
உலகின் மிகப் பெரிய நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஜி-7 நாடுகளின் கூட்டம் ஜேர்மனியில் கடந்த 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெற்றது.
அதேவேளை சில நாட்களுக்கு முன்பாக உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் அங்கத்துவத்தை கூடுதலாகக் கொண்ட பிறிக்ஸ் நாடுகளின் கூட்டம் சீனாவின் தலைமையில் மெய்நிகர் வழியில் இடம்பெற்றது.
ஜி-7நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகியவற்றுடன் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகியனவும் பங்கேற்றதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும், ஐரோப்பிய சபையின் தலைவரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மனித குலத்திற்கு நலன்பெற்றுத் தரக்கூடியது என்று கருதப்படும் ஐந்து பிரதான அடிப்படை இலக்குகளை மையமாக வைத்து ஜி-7 கூட்டம் நடாத்தப்பட்டது.
• பல்லுயிர் தன்மையை கொண்ட சூழல் பாதுகாப்பும், ஏற்றுக் கொள்ளதக்க மாற்று சக்தி வளம் ஆகியனவுடன் நீண்டகாலத்திற்கு நிலையான வாழ்வை அளிக்க கூடிய பூகோளத்தை உருவாக்குதல்
• பெருந்தொற்று காலத்திலிருந்து விடுபட்டு பொருளாதார வளர்ச்சியில் உலகை உள்ளடக்கிய அளவில் நீண்டகால நிலையான மாற்று பொருளாதார முறைகளை நோக்கிய பயணத்தை உருவாக்கதல்.
• ஆரோக்கியமான மனித வாழ்கையை நோக்கிய மேம்பட்ட தயார் நிலைகளை உருவாக்கதல் ஆராய்ச்சியும் அபிவிருத்தியையும் முன்னிலை படுத்துவதன் ஊடாக பெருந்தொற்று நேய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் நிதி முதலீடுகள் செய்தல்.
• பெண் பிள்ளைகளின் கல்வி வசதிகளிலும் உணவுப் பாதுகாப்பிலும் சர்வதேச கூட்டறவு ஊடாக நீண்ட கால அபிவிருத்தியை நோக்கி நகர்தல்.
• சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுடன் உலகம் உள்ளடங்கிய இலத்திரனியல் மயமாக்கல் ஆகியவற்றில் அதிக உறுதியான தீர்மானங்களை எடுத்தல்
என்பவே அந்த ஐந்து தீர்மானங்களுமாகும். இவை அனைத்தையும் நிலைநாட்டுவதில் ஜேர்மன், ஜி-7 நாடுகளிற்கு இடையில் பாலமாக இருக்கும் என்று தீர்மானம் காணப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் யாவும் மேலைத்தேச தலைமைத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவற்றின் வழிகாட்டலில் தமது பொருளாதார திட்டங்களை வகுத்துக் கொள்ளும் நாடுகளை மையப்படுத்தியதாகவும் அரசியல் ரீதியாக உள்ளடக்கி கொள்வதையும் நோக்கம் கொண்டதாகும்.
மனித குலத்தையும் உலகின் அனைத்து ஜீவராசிகளையம் மையமாக கொண்டதாக இந்த தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதனை மேலைதேய தலைமைத்துவம் உள்ளார பின்பற்றுமா என்பதை ஐயம் கூறும் வகையில் அதற்கு முன்னதாக 23ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்றிருந்த ‘பிறிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் அமைந்திருந்தது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆபிரிக்கா ஆகியன இணைந்து அந்த நாடுகளின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து ‘பிறிக்ஸ்’ என்று பெயரிட்டு ஒரு தரப்பாகியுள்ளன. இந்த தரப்பில் கடந்த 14ஆண்டுகளாக பூகோளத்தின் கிழக்கு மற்றும் தெற்கு வலயத்தில் அதிகமான சனத்தொகையை கொண்ட நாடுகள் உள்ளமை முக்கிய விடயமாகும்.
பிறிக்ஸ் அமைப்பின் கூட்டம் இம்முறை முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் ரஷ்யாவாகும். உக்ரேன் மீது சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மை சட்ட விதி முறைகளுக்கு மாறாக தனது படைகளை நகர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்பு முதன்முறையாக ரஷ்யா ஒரு சர்வதேச மாநாட்டில் இணைந்திருந்தது.
உலகில் வலிமை வாய்ந்தவையாகவும் பொருளாதார வளர்ச்சியும் சந்தை வாய்ப்பையும் கொண்ட இதர நான்கு நாடுகள் ரஷ்யாவை ஏற்று கொண்டுள்ளமையை மேலைத்தேச தலைமைத்துவம் தனக்கான சவாலாகவே கருதுகின்றது.
தனது தலைமை உரையில் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பின்; மேலைத்தேச தலைமைத்துவத்தைக் கடுமையாக சாடியிருந்தார். அவருடைய உரையில், “உலக பொருளாதாரத்தில் மேலாண்மை நிலையின் மூலம் அரசியல் மயப்படுத்தப்படுவதும், ஏனைய நாடுகளை கருவிகளாகப் பயன்படுத்துவதும், அதனடிப்படையில் இராணுவ மயப்படுத்தி கொள்வதானதும் தம்மைத்தாமே புண்படுத்தி கொள்வதுடன் மற்றவர்களையும் புண்படுத்துவதற்கு வாய்ப்பு அளிப்பதாக உள்ளது. இதன்மூலம் உலக மக்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுகின்றார்கள்” எனக் குறிப்பிட்டமை முக்கிய விடயமாகின்றது.
சீனாவைப் பொறுத்தவரையில், வேகமாக வளர்ந்து வந்துள்ள தமது தலைமையிலான பிறிக்ஸ் நாடுகளின் கூட்டானது சர்வதேச சமபல நிலையை உருவாக்கி உள்ளது. ஆகவே எதிர்வரும் காலத்தில் ஒற்றை மைய உலகம் அல்லது பனிப்போர் உலகம் என்று விடயங்களுக்கு இடமில்லை. வர்த்தக உலகமே தற்காலத்திற்கு தகுந்ததாகும் என்றே கருதுகின்றது.
ரஷ்யாவை பொறுத்தவரையில், அந்நாட்டின் சுமார் பத்தாயிரம் பொருட்களுக்கு எதிராக சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தடையானது சர்வதேச நியதிக்கு ஏற்றவையல்ல. இந்தியா, ரஷ்யாவுடன் எரிபொருள் வியாபாரம் செய்து கொள்வதை மேலை நாடுகள் விரும்பவில்லை. ஆகவே, இத்தகைய பெரும்பனிப்போர் நிலையை மேற்குலகம் சர்வதேச அளவில் உருவாக்கி விட்டிருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நாடுகள் தம்மத்தியில் மரியாதையுடன் வர்த்தகம் செய்து கொள்வதில் பெரும் சங்கடங்களை எதிர் நோக்குகின்றன என்று கருதுகின்றது.
அதேவேளை ஜனநாயக நாடுகள் ஒன்றுடன் ஒன்று கெடுபிடி அரசியல் செய்து கொள்வதில்லை என்ற பொதுக்கொள்கையை மேலைத்தேச நாடுகள் மிக அமைதியாக கடைப்பிடிக்கின்ற போதிலும் பிறிக்ஸ் நாடுகள் மத்தியில் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுப்பதில் பெரும்சங்கடங்கள் உள்ளன.
உதாரணமாக, சீனா பொருளாதார ரீதியாகவும் சனத்தொகை ரீதியாகவும் சர்வதேச கட்டமைப்புகள் ரீதியாகவும் வலிமை நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் சீனா, இந்தியாவுடன் சுமூகமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் இந்தியா, ‘குவாட்’ எனப்படும் நாற்கர நாடுகளிலும் அங்கத்துவம் வகிப்பதால் பிறிக்ஸ் அமைப்பை உடைப்பதற்கு மேலை நாடுகள் இந்திய சீன பதற்றத்தை சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புக்களையும் அந்த நாடுகள் கவனத்தில் கொண்டிருக்கின்றன.
உலகின் 40சதவீதமான சனத்தெகையையும் உலகின் மொத்த தேசியஉற்பத்தியில் கால்வாசியையும் 18சதவீதமான உலக வர்த்தகத்தையும் தன்னகத்தே கொண்ட பிறிக்ஸ் நாடுகள் காத்திரமாக எதிர்சமநிலையை உருவாக்கி வருவதுடன் இந்த நாடுகளுடன் தென்அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவையும் இனைத்து கொள்வதில் பேச்சகள் இடம் பெறுகிண்றன.
மேலும் எகிப்து, இந்தோனேசியா, காசகஸ்தான், நைஜீரியா, ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, செனகல் தாய்லாந்து என்று பல்வேறு மத்தியதர பொருளாதார வலுக்கொண்ட நாடுகளும் பிறிக்ஸில் இணைவதற்கு வரிசையில் காத்திருக்கின்றன. அந்த வகையில் பிறிக்ஸ் மேலை தேசத்திற்கு ஒரு சிறந்த எதிர்பலமாக வருமா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM