நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே பாதுகாப்பான தெரிவாகும் - பிரதமர் ரணில்

Published By: Vishnu

22 Jun, 2022 | 10:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே பாதுகாப்பான தெரிவாகும். 

சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாடு இல்லாமல் எந்த நாடும் எமக்கு கடன் வழங்கப்போவதில்லை.  அதனால் நாங்கள் ஆரம்பமாக அந்த உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனால் கடன் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் அரசாங்கத்துக்கு இந்த வழி மாத்திரமே தெரியும். வேறு எந்த வழியும் தெரியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, நாடு எதிர்நோக்கும் உண்மையான நிலைமை மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். 

இதை சிலர் கிண்டல் செய்துள்ளனர்.  “நாடு எதிர்கொள்ளும் கஷ்டங்களை எங்களிடம் கூறுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டாரா?” என்று என்னை விமர்சிக்கிறார்கள். 

எவ்வாறாயினும், நாங்கள் அவர்களிடம் முழு உண்மையையும் கூறுகிறோம் என்பதற்காக இன்னும் பலர் நன்றியுள்ளவர்களாக உள்ளனர், மேலும் இந்த சிக்கல்களை சமாளிக்க எங்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்களை முன்வைக்க அவர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த இரு குழுக்களில் நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த இருண்ட காலத்தைக் காண, ஒரே நாடாக ஒன்றிணைந்து, தேசத்தின் மறுகட்டமைப்புச் செயல்பாட்டில் இணையுமாறு நான் உங்களை அழைக்கிறேன். 

நாம் அனைவரும் இணைந்து இந்த பயணத்தை மேற்கொள்வோம்.  இதைச் செய்வதன் மூலம் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும்.

 எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம்.  நமது பொருளாதாரம் முழுமையான சரிவைச் சந்தித்துள்ளது.  அதுதான் இன்று எமக்கு முன்னால் உள்ள மிகத் தீவிரமான பிரச்சினை. 

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.  இதைச் செய்ய, நாம் எதிர்கொள்ளும் அந்நிய கையிருப்பு நெருக்கடியை முதலில் தீர்க்க வேண்டும்.

முற்றிலும் சரிந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, குறிப்பாக ஆபத்தான முறையில் அந்நிய கையிருப்பு குறைவாக உள்ள ஒரு நாட்டை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நாம் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்காது. 

ஆனால் அந்த வாய்ப்பை நாங்கள் இழந்தோம்.  இப்போது நாங்கள் மிகக் கீழே விழுந்துவிடக் கூடும் அறிகுறிகளை  காண்கிறோம்.  இருப்பினும், இந்த சூழ்நிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.  இல்லை என்றால் நாட்டில் வேறு எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

தற்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ளது.  இதன் விளைவாக, உலகில் எந்த நாடும் அல்லது அமைப்பும் எங்களுக்கு எரிபொருளை வழங்க தயாராக இல்லை.  கையில் இருக்கும் பணத்துக்கும் எரிபொருளைக் கொடுக்கக்கூட தயங்குகிறார்கள்.

 இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாங்கள் 4பில்லியன் டொலர் அளவுக்கு கடன் பெற்றுள்ளோம்.   இந்தியாவிடமிருந்து மேலும் கடன் உதவிகளை கேட்டிருக்கின்றோம். 

ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து எங்களுக்க கடன் வழங்க முடியாது.  அவர்களின் உதவிக்குக் கூட எல்லை உண்டு.  மறுபுறம், இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம் நமக்கும் இருக்க வேண்டும். இல்லாமல் யாரும் எமக்கு நன்கொடையாக பணம் வழங்குவதில்லை. விசேடமாக அடுத்த கட்ட கடன் தொகை வழங்குவது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் 3பேர் அரசாங்கத்துடன் கலந்துரையாட வர இருக்கின்றார்கள். இது இலகுவான விடயமல்ல. இந்திய வங்கிகளிலும் பிரச்சினை இருக்கின்றது.

அப்படியானால் இந்த பிரச்சினையில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இப்போது எம்முன் உள்ள ஒரே பாதுகாப்பான தெரிவாகும்.  சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாடு இல்லாமல் எந்த நாடும் எமக்கு கடன் வழங்கப்போவதில்லை.  அதனால் நாங்கள் ஆரம்பமாக அந்த உறுதிப்பாட்டை எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால் கடன் பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் அரசாங்கத்துக்கு இந்த வழி மாத்திரமே தெரியும். வேறு எந்த வழியும் தெரியாது. அந்த வழியிலேயே நாங்கள் செல்லவேண்டி இருக்கின்றது. இந்த வழியில் சென்று அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மேலதிக கடன் வசதிகளை பெற்றுக்கொள்வதே எமது நோக்கம்.

அடுத்த கட்டமாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கி, நமது ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கான உடனடி வேலைத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என நாங்கள் நம்புகின்றோம். மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடலில் ஒருபோதும் ரஷ்யாவின் உதவிகளையோ ரஷ்யாவின் எரிபொருள் தொடர்பாகவோ பேசியதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதனைவிட நல்ல திட்டங்கள் இருக்குமானால் எங்களுக்கு அறிவியுங்கள். உண்மையில், நீங்கள் நாட்டிற்கு ஒரு நடைமுறை மற்றும் மிகவும் சாதகமான திட்டத்தை வைத்திருந்தால், அதை முன்வைக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம். அதேபோன்று அரசியல் கட்சிகள் விரும்பினால் அவைகளால் முன்வைக்கப்படும் தீர்வுகளை நாம் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம். அவர்களுக்கு தேவையான இடத்தையும் வாய்ப்பையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் தற்போது செயல்படுத்தியுள்ள திட்டத்தை இப்போது விரிவாக உங்களுக்கு முன்வைக்கிறேன். தற்பாேது நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்பதைதெரிவிக்கின்றேன். அமைச்சரவையில் பெரும்பான்மையானவர்கள் மே 20ஆம் திகதி நியமிக்கப்பட்டனர். அன்றிலிருந்து நாங்கள் எங்கள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.  முதலில், நாங்கள் 2019 இல் நடைமுறையில் இருந்த வரி முறைக்கு திரும்ப முடிவு செய்தோம். அதன் பிறகு 2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய வரவு செலவு திட்டத்தில் முதன்மை உபரியை உறுதி செய்ய ஒப்புக்கொண்டோம்.

 அடுத்து, வருமானம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடலுக்காக இலங்கைக்கு விஜயம் செய்தது.  அதற்கான அறிக்கையை எங்களிடம் முன்வைத்தனர்.  திங்கட்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான குழு இலங்கை வந்தடைந்ததுடன், குழுவுடனான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். நாங்கள் ஆரம்ப விவாதங்களை முடித்துவிட்டோம், அரச நிதி, நிதித்துறை, கடன் நிலைத்தன்மை, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு போன்ற பல்வேறு துறைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். எங்கள் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் எங்களுக்கு உதவ நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் இன் பிரதிநிதிகள் இப்போது இலங்கையில் உள்ளனர்.  கடனை திருப்பிச் செலுத்தும் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பு வகுக்கப்படுகிறது.

 இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வரவுள்ளது. இந்த மூன்று அணிகளும் உடனடியாக இலங்கைக்கு வருவதற்குத் தேவையான பின்னணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.  அவர்களுடன் நீண்ட விவாதங்களை நடத்துவோம். இலங்கைக்குள்ளே அந்த மூன்று தூக்குழுவினரும் கூட்டங்களை நடத்த அனுமதித்திருக்கின்றோம்.  இது எங்கள் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு மேலும் உதவும்.

ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான  உத்தியோகபூர்வ அளவிலான ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளோம். இங்கு மிக முக்கியமானது நமது கடன் மறுசீரமைப்புத் திட்டம்.  லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் தூக்குழுவினருடன சேர்ந்து ஜூலை மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்பை முடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்த திட்டமிடப்பட்ட கட்டமைப்பையும் உத்தியோகபூர்வ நிலை ஒப்பந்தத்தையும் கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு அதன் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உறுதிப்பாட்டை நாங்கள் எடுக்கவேண்டும் அப்போதுதான் வேறு நாடுகளில் இருந்து எமக்கு கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு இணையாக கடன் வழங்கும் மாநாட்டை இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளின் தலைமையில் நடத்துவோம்.  எனினும் சமீப காலமாக எங்களுக்குள் சில முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளன.  இவற்றைத் தீர்த்து மீண்டும் நட்புறவை வளர்க்கும் நோக்கில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.  ஒவ்வொரு நாட்டிற்கும் கடன் வழங்குவதற்கு வெவ்வேறு செயல்முறைகள் உள்ளன.  கடன் உதவி மாநாட்டின் மூலம், கடன் வழங்கும் செயல்முறைகளில் பொதுவான ஒருமித்த கருத்துக்கு வருவோம் என்று நம்புகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாடு எமக்கு கிடைத்தால், உலக நாடுகள் மீண்டும் நம்மை நம்பும்.  உலகின் பிற நாடுகளில் இருந்து கடன் உதவி மற்றும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற இது எங்களுக்கு உதவும்.

நாங்கள் தற்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, பிற நட்பு நாடுகள் மற்றும் நாட்டுத் தலைவர்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் வரை இடைக்கால குறுகிய காலக் கடன்களைப் பெறுவதற்கு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.

இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை நாம் அமைக்க முடியும்.  ஆனால் இது எந்த வகையிலும் முடிவாக இருக்காது.  உண்மையில், இது எங்கள் பயணத்தின் தொடக்கமாக இருக்கும்.  வலுவான பொருளாதாரத்தை நோக்கிய புதிய பயணம். இலங்கையின் புதிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உருவாக்கவும் நாம் எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

முன்னோக்கி செல்லும் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்க, ஆகஸ்ட் 2022 இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால வரவு செலவு திட்டத்தை முன்வைப்போம்.  2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும்.  இது தவிர, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான பல புதிய சட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைப்போம்.  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் இவை தொடர்பில் நாம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்.  நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று  உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அடுத்த போகத்துக்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு வழங்க ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் இலங்கைச் சந்தைக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம்.  இதன் மூலம் நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

நாட்டின் விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.  அனைத்துக் கட்சிப் பிளவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் விவாதங்களில் பல குழுக்கள் கலந்துகொள்கின்றன என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை நாட்டில் விவசாய பண்ணைகளை நிறுவுவதில் முன்னணியில் இருப்போம் என உறுதியளித்துள்ளன.  இந்த செயல்முறைக்கு எந்த ஆதரவையும் அரசாங்கத்திடம் கோராமல் இந்தப் பண்ணைகளை அமைப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.  பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் குறிப்பிட்டது போல், இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பிரதேசங்களை அவரது கட்சி ஏற்கனவே தெரிவு செய்துள்ளது.

இதேவேளை, புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாரியளவில் பயன்படுத்தப்படாத காணியை விவசாய தேவைகளுக்காக ஒதுக்குவதற்கும் அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.  சஜித் பிரேமதாச மற்றும் திரு அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமது விவசாயத் திட்டங்களுக்காக காணிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.  இரு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுமாறு உணவுப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரிடமும் தெரிவித்துள்ளேன்.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை செவ்வாய்கிழமையன்று அங்கீகாரம் வழங்கியது.  ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட 21வது திருத்தத்திற்கான முன்மொழிவுகள் மீதான தீர்மானத்தை உயர் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.  தற்போது முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்து இறுதி வரைவு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.  எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்றத்தை புறக்கணித்ததன் காரணமாக இந்த செயல்முறை மேலும் தாமதமாவது துரதிர்ஷ்டவசமானது.

புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்றக் குழு அமைப்பு தொடர்பில் முழுமையான திட்டத்தை முன்வைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.  அவர் தனது அறிக்கையை திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

 எனவே, பாராளுமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரித்திருக்கும் உறுப்பினர்கள் உடனடியாக பாராளுமன்றத்துக்கு வந்து 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்து, புதிய பாராளுமன்றக் குழு அமைப்பை ஏற்படுத்துவதற்கு உடன்படுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

 நான் முன்பே குறிப்பிட்டது போல், இன்று நாம் எதிர்கொள்ளும் நிலைமை எந்த வகையிலும் சாதாரணமானது அல்ல.  இலங்கையின் அண்மைக் காலத்தில் இந்த அளவு நெருக்கடியை சந்திக்கவில்லை என்பதை நான் பலமுறை கூறி வந்துள்ளேன்.

நாங்கள் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தியவுடன், தேர்தலில் உங்கள் விருப்பப்படி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கலாம்.  அதற்கான பொறுப்பும் அதிகாரமும் இந்த நாட்டின் குடிமக்களாகிய உங்களிடமே உள்ளது. 

இலங்கை இன்று எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைக்கு காரணமானவர்கள் என்று நீங்கள் நம்பும் நபர்களை நிராகரிப்பதற்கான வாய்ப்பு அப்போது உங்களுக்கு வழங்கப்படும்.  இதையொட்டி, புதிய அரசாங்கத்திற்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான ஆணை வழங்கப்படும். 

ஆனால் இவை அனைத்தும் நாட்டின் மறுமலர்ச்சியைத் தொடர்ந்து மட்டுமே அடைய முடியும். இதனை மனதில் கொண்டு, இன்று நாடு வீழ்ச்சியடைந்துள்ள பாதாளத்தில் இருந்து கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்குமாறு நாட்டு பிரஜைகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

 எனவே இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு முதலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.  சிரமங்கள் இருக்கும்.  கஷ்டங்கள் இருக்கும். 

ஆனால் இந்த சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது கூட இதில் இருந்து மீள நாம் ஒவ்வொருவருக்கும் சிறிதளவேனும் உதவிகளை செய்ய முடியுமான  விஷயங்கள் உள்ளன, இந்த முயற்சிக்கு பங்களிக்க நாம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யலாம். 

இந்த சிரமங்களையும் கஷ்டங்களையும் ஒரு குறுகிய காலத்திற்கு தாங்கிக்கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிக்கு பங்களிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் அழைக்கிறேன்.

 தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் படிப்படியாகக் குறைவதை அனுபவிப்பீர்கள்.  மின்வெட்டு காலத்தை குறைக்க முடிந்துள்ளது.

உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டாெலர்கள் மற்றும் எமது 20 மில்லியன் டாெலர்களை பயன்படுத்தி ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் காஸ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.  இந்த காஸ் தொகை பெற்றவுடன் எரிவாயு பற்றாக்குறையை நீக்க முடியும்.

தற்போது இலங்கைக்கு மாதாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 550 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.  எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இதற்குத் தேவையான நிதியைப் பெறுவதில் நாங்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம்.  இதன் விளைவாக, எங்களின் டாெலர் வருமானத்தின் அடிப்படையில் அதிகபட்ச எரிபொருள் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்போம்.  எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க இன்னும் சில  காலம் எடுக்கும்.  எனவே எரிபொருளைப் பயன்படுத்தும் போது சிக்கனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நெருக்கடியின் விளைவாக நாட்டின் பாடசாலைக்கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.  முதலில் கோவிட் தொற்றுநோய் மற்றும் இப்போது பொருளாதார சரிவு காரணமாக பிள்ளைகள் பல மாதங்கள் படிப்பை கல்வியை இழந்துள்ளனர்.   

அமைச்சர் சுசில் பிரமஜயந்த மற்றும் அமைச்சின் அதிகாரிகள் நிலைமையை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  எரிபொருள் வழங்கும் போது பாடசாலை பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் திட்டம் வகுத்து வருகின்றனர்.  இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாகப் பாடசாலை கல்விக்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படுவதை உறுதி செய்வோம்.

இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு எமது வலுவான தூண்டுதலையும் அர்ப்பணிப்பையும் அவர்கள் உணர்ந்தால் மட்டுமே உலகம் நமக்கு உதவும். 

எனவே, நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு தேசமாக நமது அபிலாஷையை அவர்களுக்கு காட்டலாம்.  இல்லையெனில், பல்வேறு நாசவேலைகளைச் செய்வதன் மூலம் நமது அலட்சியத்தையும் ஆர்வமின்மையையும் காட்டலாம். 

உங்கள் போராட்டம் நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உயர்த்துவதற்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.  அது நம் நாட்டை அழிக்கக் கூடாது.  எனவே, எப்பொழுதும் உங்கள் செயல்களை கவனமாக பரிசீலித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை தற்போது பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் பொதுவான நிலைப்பாட்டை எட்டியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.  தற்போது அவர்களின் நிலைப்பாடு மாறிவிட்டதா?  சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களை தேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்கிறதா இல்லையா?

அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடுமாறு சர்வதேச நாணய நிதியத்தை நான் கேட்டுக் கொண்டேன்.  இவ்விரு கட்சிகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இந்த இக்கட்டான கட்டத்தில் விமர்சனங்களை விட தீர்வுகள் மிக முக்கியம்.  எனவே உங்களிடம் சிறந்த தீர்வுகள் இருந்தால் அவற்றை எங்களிடம் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்..  இந்த இரண்டு கட்சிகளுக்கும் 21வது திருத்தம் தேவையா இல்லையா?  அவர்களுக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவையில்லையா?  பாராளுமன்றக் குழு அமைப்பு மூலம் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சியில் பங்குபெறும் திறனை எளிதாக்குவதற்கு அவர்கள் ஆதரவா அல்லது எதிராக இருக்கிறார்களா?  இவை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆனால் இத்தருணத்தில் ஒருவிடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது.  இன்று ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நிராகரித்து வருகின்றனர்.  அத்தகைய நேரத்தில் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.  ஒருவருக்கு தனது நாட்டின் மீது உண்மையான அன்பு இருந்தால், இப்போது செய்ய வேண்டியது, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும், குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கும் ஒருவரின் ஆதரவை வழங்குவதுதான்.

எனவே பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி, நமது நாட்டின் நலனுக்காக புதிதாக சிந்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.  இந்தத் தேவையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்காக நடத்தப்படும் பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்குமாறு அவர்களை அழைக்கிறேன்.

இந்த சீர்திருத்தங்கள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். சிறிது காலத்துக்கு நமது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நேரத்தில் நாம் நாட்டைப் பற்றி மட்டும் நினைத்தால், வரவிருக்கும் இந்த பேரழிவிலிருந்து நம் தாய்நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.  பாராளுமன்றத்தில் எதிரக்கட்சி என்பது மாற்று அரசாங்கமாகும் அப்படியானால் அவர்கள் மாற்று கொள்கைகளை அறிமுகப்படுத்தவேண்டும். முன்னாள் நிதி அமைச்சர் சிறந்த நிதி அமைச்சர் என விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அது அவரின் நிலைப்பாடு. அதுதொடர்பில் நான் விவாதிக்கச்செல்வதில்லை. அதனை நான் ஏற்றுக்கொன்று செல்கின்றேன்.

எனவே தயவுசெய்து பகிஷ்கரித்தவர்கள் பாராளுமன்றத்துக்கு வாருங்கள். நாங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். பிரச்சினைக்கு தீர்வுகான வேலைத்திட்டங்கள் இருந்தால் அதனை முன்வையுங்கள். ஒளிந்துகொண்டு இதனை செய்ய முடியாது. அதிகாரத்தை வழங்கும்போதும் இவர்கள் ஒளிந்துகொண்டார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் ஓடுகின்றார்கள். எப்படி நாட்டை நிர்வகிப்பது? நான் பயிற்சியளித்தவர்களுக்கு எப்படி அதிகாரத்தை பெற்றுக்கொள்வது என தெரியாமல் இருப்பது இட்டு நான் கவலைப்படுகின்றேன். இவர்களுக்கு பயிறிசி அளித்து நான் தோல்வியடைந்தேனா என நினைக்கின்றேன்.

எனவே நாடுதொடர்பில் சந்தித்து, ஏனைய கருத்து முரண்பாடுகளை கொஞ்சகாலத்துக்கு ஒதுக்கிவைத்தால், நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06