இவ­ளும் ஒரு தாயா?

Published By: Nanthini

22 Jun, 2022 | 04:59 PM
image

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். குழந்தைகள் நமது செல்வங்களாக போற்றப்பட வேண்டிய­வர்கள்.

குழந்தைகள் மனதளவில் எந்தவித கள்ளம் கபடமும் இல்லாதவர்கள். தாம் செய்வது சரியா, தவறா என்பதை கூட பிரித்தறிய தெரியாத பிஞ்சு உள்ளங்கள்.

குழந்தைச் செல்வத்துக்காக காத்துக் கொண்டிருப்பவர்களும், அதன் வரவுக்காக ஏங்கித் தவிப்பவர்களும் அநேகம் பேர்.

எனினும், சில தாய்மார்களின் நட­­வடிக்கைகளை பார்க்கும்­போது, ‘இவ­ளும் ஒரு தாயா?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுகின்றது. கேள்வி மட்டு­மில்லாமல், துயர­மும், கூடவே கோபமும் பொங்கி எழுகின்றது.

பூவைப் போன்ற குழந்­தைகளுக்கு தற்­போது நேரும் கொடு­மை­களை நினைக்கும்­போதே மெய் சிலிர்க்கிறது.

‘பெற்றெடுத்த குழந்­தையை கொடூர­மாக தாக்கிய தாய்’, ‘சிசுவை வீதியில் அநாதையாக விட்டுச் சென்ற தாய்’, ‘தவ­றான உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய்’ போன்ற­வாறு மனதை உலுக்கும் செய்திகளை அடிக்கடி நாம் கேள்­விப்படுகிறோம்.

உலகம் முழுவதுமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவது இப்போது சாதாரண விடயங்களாகிவிட்டது.

பிடிக்காத கணவன் மீதுள்ள கோபம், வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த பிஞ்சுக் குழந்தையின் உடலில் இரத்­தம் சொட்டச் சொட்ட அடியாய் விழுந்திருக்கிறது. வலி தாங்க முடியாத அந்த குழந்தையின் கதறல் எத்தனை மனங்­களை கலங்க வைத்தது. இது சமீ­பத்தில் நடந்த ஒரு கொடுமைச் சம்பவம்.

பிறந்து சில தினங்களே ஆன, பச்சிளம் குழந்தையை அப்படியே நடு வீதியில் விட்டுச் சென்றிருக்கிறாள், ஒரு தாய்.

வறுமையா அல்லது வேறெதும் கார­ணமா என்று யூகிக்க முடியாத நிலை­யில் தனது மகனை கங்கையில் தூக்கி எறிந்துவிட்டு, தானும் சாகத் துணிந்தி­ருக்கிறாள், இன்னொரு தாய். ஆனால், நடைபாதையில் சென்ற­­வர்களால் அந்தத் தாய் காப்­பாற்றப்பட்டுவிட்டாள். ஆனால், அந்த பாலகனின் நிலை என்ன? அது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

வீட்டுப்பாடம் செய்யாத தன் பிள்ளையை மொட்டை மாடியில் உச்சி வெயிலில் கை, கால்களை கட்டிப் போட்டு தண்டனை கொடுத்திருக்கிறாள், வேறொரு தாய்.

வறுமையோ, குடும்பப் பிரச்சினையோ… காரணம் எதுவாக இருந்தாலும், பெற்ற பிள்ளையை எப்படியாவது வளர்த்து­விட வேண்டும் என்று எண்ணும் அம்மாக்க­ளால், இவ்வாறு தன் கண் முன்னே குழந்தைகளுக்கு நேரும் அவலத்தை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது.

அந்தப் பிள்ளைகளின் நிலையை பார்க்­கும்போது ‘அவன் நம் பிள்ளையைப் போல் தானே இருந்திருப்பான்’, ‘நம் மகன் வயது தானே அவனுக்கும் இருக்கும்’ என்றவாறு தன் பிள்ளைகளின் தலையை தடவிக் கொடுப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஒரு குழந்தையை இவ்வுலகத்துக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மரணத்தின் விளிம்புக்குச் சென்றே தாயானவள் தன் குழந்தையை பிரசவிக்கிறாள். தான் பெற்ற பிள்ளை­களை கண்மூடித்தனமாக அடிப்பது, தாங்க முடியாத தண்டனை கொடுப்பது, கொலை செய்வது போன்ற செயல்களை எவ்வாறு செய்ய முடிகிறது?

பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால், சில தாய்மார்களின் மனம் கல்­லாக மாறுகிறதே, ஏன்?

பிள்ளைகளுக்கு பிறரால் பாதுகாப்­பில்லை. அதனால், பெற்றோர் அவர்களை கவனமாக பராமரிக்கும் பொறுப்பில் உள்­ளனர். ஆனால், பெற்றோரே இவ்­வாறு செய்தால் பிள்ளைகள் எங்கே போவார்கள்?

பிள்ளைகளே உலகம் என வாழ்பவர்­களுக்கு மத்தியில், சிலரது மூர்க்கத்­தனமான செயல்கள் நம்மை மனதளவில் நொறுங்கிப் போகச் செய்துவிடுகிறது.

பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்க்க போதுமான வசதி இல்லாவிட்டால், அதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்­கின்­றன.

பிள்ளைப் பாசத்துக்காக ஏங்குபவர்­களுக்கு பிள்ளைகளை தத்து கொடுக்க­லாம் அல்லது சிறுவர் இல்லங்களின் பரா­மரிப்பில் விட்டுவிடலாம். பிறரின் அன்­பி­லாவது வாழ்ந்துவிட்டுப் போகட்­டுமே.

அதை விடுத்து அவர்களை கொடு­மைப்­படுத்துவது, வீதிகளில் எறிந்துவிட்டுச் செல்வது பெரும் பாவமாகும்.

மலர வேண்டிய மொட்டை மலரவிடாமல் கசக்கிப் போடுவது கொடுமையிலும் கொடுமையல்லவா!

தாய் என்பவள் கடவுளுக்கும் மேலான­வள். சிலர் தன் தாய்மையை மறந்துவிட்டு, மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இனியேனும், இந்தக் கொடுமைகள் முற்றுப்பெற வேண்டும்.

பிள்ளைகளை பாதுகாப்போம்! அவர்­கள் நமது நாளைய ரூபங்கள்!

- து.சிந்துஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்