(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம் வசீம்)
நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்ட பொய்யான விடயத்தை பிடித்துக் கொண்டு தயாசிறி ஜயசேகர சேறுபூசுகிறார்.
எரிவாயு கொள்வனவில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் புதன்கிழமை (22) இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது தயாசிறி ஜயசேகர எரிவாயு கொள்வனவு தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்த போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தயாசிறி ஜயசேகர குறிப்பிட்ட விடயத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிமல் லன்ஷா கடுமையாக அதிருப்தி வெளியிட்டனர்.
லிட்ரோ நிறுவனம் நிதியமைச்சின் கீழ் உள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் எரிவாயு கொள்வனவில் மோசடி செய்துள்ளதாக நாகானந்த கொடித்துவக்கு தொடர்ந்து குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்.
95 டொலரிற்கு பெற வேண்டிய எரிவாயு 129 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இக்குற்றச்சாட்டின் உண்மை தன்மை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ''இவ்விடயம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தயவு செய்து முதலில் அது குறித்து அவதானம் செலுத்துங்கள். நாகானந்த கொடித்துவக்கு என்பவர் யார் என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.
இவர் போன்ற திருடன் குறிப்பிட்ட விடயத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து கருத்து வெளியிடுவது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உங்களது பொறுப்பாகும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கனடாவில் இருந்து பெற்றுக்கொண்ட நிதிக்கு என்னவாயிற்று ? எனவே நீங்கள் சேறு பூசுவதற்காகவே இவ்விடயத்தை தொடர்ந்து குறிப்பிடுகின்றீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்று தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட தயாசிறி ஜெயசேகர, ''நாகானந்த கொடித்துவக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இன்னும் பயிற்சி பெறுகிறார்.
ஆகவே தெரியாத விடயம் பற்றி கதைக்க வேண்டாம். சமூகத்தில் பேசப்படும் விடயம் தொடர்பில் குறிப்பிட்டேன். ஆகவே என்மீது பழி சுமத்துவது பயனற்றது.'' என்று பிரதமரை நோக்கிக் குறிப்பிட்டார்.
நாகானந்த கொடித்துவக்கு தனக்காகவே நீதிமன்றம் செல்கிறார். லிட்ரோ நிறுவனம் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்விடயத்தை பிடித்துக் கொண்டு இவர் (தயாசிறி ஜெயசேகர) புதிய சக்தியை உருவாக்க முயற்சிக்கிறார் என பிரதமர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த நிமல் லன்சா, ''நாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி பிரதான பிரச்சினையாக உள்ளது. நாட்டு மக்களுக்கு தேவையான நேரத்தில் தேவையானவற்றை வழங்க தீர்மானம் எடுப்பதற்பகாகவே அமைச்சரவை காணப்படுகிறது.
எரிவாயு விவகாரத்தில் மோசடி இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை தயாசிறி ஜயசேகர படிக்காமல் இருப்பது கவலைக்குரியது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படாமல் நாட்டு மக்களுக்காக செயற்படும் அமைச்சரவையின் செயற்பாடு மதிக்கத்தக்கது' என்றார்.
இதற்கு ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய தயாசிறி ஜயசேகர, 'நிமல் லன்சா, ரணில் லன்சாவாகிவிட்டார் என நான் நினைக்கவில்லை. அதுவே பிரச்சினை. அதற்கு அவர் ஆளும் தரப்பினர் பக்கம்சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வது சிறந்தது.'' என்றார்.
இதன்போது மீண்டும் கருத்துரைத்த நிமல் லன்சா, '' இவர் தான் ரணில் விக்கிரமசிங்கவை வணங்கி, அங்கும் இங்கும் சென்று கட்சி தாவிக் கொண்டார். நான் அவ்வாறு செயற்படவில்லை. ' என தயாசிறியை நோக்கி குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM