லத்தீப் பாரூக்
பலஸ்தீன ஊடகவியலாளர் ஷெரீன் அபு அக்லா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சுமார் 20நாட்;களுக்கும் மேல் கழிந்துள்ள நிலையில் யூத குடியேற்ற தீவிரவாதிகளை அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்துக்குள் ‘கொடி ஊர்வலம்’ (பிளக் மார்ச்) என்ற பெயரில் அனுமதித்துள்ளதன் மூலம் மீண்டும் ஒரு சர்ச்சையை இஸ்ரேல் ஏற்படுத்தி உள்ளது.
சியோனிஸ ஆக்கிரமிப்புப் படைகளால் 1967இல் கிழக்கு ஜெரூஸலப் பிரதேசம் கைப்பற்றப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையிலேயே இந்த ‘கொடி ஊர்வலம்’ தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிகழ்வு இதுவரை சர்வதேச சமூகத்தால் அங்கிகரிக்கப்படாத ஒரு நிகழ்வாகும்.
இவ்வாண்டு இந்நிகழ்வு கடந்த மே 29ஆம் திகதியன்று இடம்பெற்றது. யூத தீவிவரவாத குடியேற்றவாசிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஊடாக யூதக் கொடிகளைத் தாங்கியவாறு ‘அரபிகளுக்கு மரணம் உண்டாகட்டும்’ என்ற கோஷங்களை எழுப்பியவாறும் இனவாத மற்றும் பெரும் பாதகமான சொற்களை உள்ளடக்கிய கீதங்களை இசைத்தவாறும் ஊர்வலமாக சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேல் கொடியைத் தாங்கியவாறும் இதில் பங்கேற்றனர்.
யூத பிரார்த்தனை அல்லது சமய கோஷங்களை இந்தப் பகுதிகளில் சத்தமாக முழக்கமிடலாம் என்று இஸ்ரேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்தே யூதர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். அல் அக்ஸா பள்ளிவாசல் என்பது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதப் பிரதேசமாகும். அதில் வழிபடுவது முஸ்லிம்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளாகம் பலஸ்தீனம் அரபிகள் மற்றும்; இஸ்லாத்தோடு தொடர்புடையவை. இது அரசியல் கலந்த ஒரு தேசிய விவகாரம். இஸ்ரேலின் நீதித்துறைக்கு இதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது.
இந்தக் கொடி ஊர்வலத்தின் போது இஸ்ரேல் பொலிஸார் முதலில் பள்ளிவாசல் முற்றத்தை நோக்கி கற்களை எறிந்தனர். அதன் பிறகு குடியேற்றவாசிகள் உள்ளே புகுந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். சில பலஸ்தீனர்களை தடுத்து வைத்தனர்.அண்மைக்கால நினைவுகளின்படி அவர்கள் முதற்தடவையாக இஸ்ரேல் பொலிஸாரின் தீவிர கண்கானிப்பின் கீழ் பல்வேறு குழுக்களாக இஸ்ரேல் கொடிகளைத் தாங்கிய வண்ணம் காணப்பட்டனர்.
பலஸ்தீனர்களை மேலும் ஆத்திரமூட்டும் வகையில இஸ்ரேல் தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான லெஹாவாவின் தலைவர் கிழக்கு ஜெரூஸலம் கைப்பற்றப்பட்டதை நினைவுகூறும் வகையில் அந்தப் பகுதியில் அமையப் பெற்றுள்ள குவிமாடம் தகர்க்கப்பட வேண்டும் என்று சட்டவிரோத குடியேற்ற வாசிகளிடம் கோரிக்கை விடுத்தார். தமது நாடு ஒரு சமய யுத்தத்துக்கான ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாக இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த இந்த ஊடுருவலின் போது சில குடியேற்றவாசிகள் அவர்களது சமயக் கிரியைகளிலும் ஈடுபட்டனர். பள்ளிவாசல் முற்றத்தில் அவர்கள் தங்களது கீதங்களையும் இசைத்தனர். அல்அக்ஸாவின் தற்போதைய நிலை அது தொடர்பான இஸ்ரேல் மீதான தடைகள் என்பன பற்றிய சர்வதேச உடன்பாடுகளை முற்று முழுதாக மீறும் வகையில் இது அமைந்திருந்தது.
அத்துடன், குடியேற்றவாசிகள் பலஸ்தீன பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. 50வயதான ஒரு பலஸ்தீன பெண் மீது மிளகுதூள் வீசி தாக்குதல் நடத்தும் காட்சியும் அதில் உள்ளது. இதனை அடுத்து பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் கைகலப்புக்களும் இடம்பெற்றன.
இந்தப் பெண் ஆஸ்பத்திரிக்கு எடுததுச் செல்லப்பட்ட வேளையில் அங்குள்ள பலஸ்தீனர்களை இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கி முனையில் அச்சுறுத்த அங்கு திரண்டிருந்தவர்கள் மீது யூதர்கள் மீண்டும் மிளகுத்தூள் தூவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“அல் அக்ஸா முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை நாம் நன்கு அறிவோம். அதை ஒருபோதும் நாம் விட்டுக் கொடுக்கப்; போவதில்லை என்ன விலை கொடுத்தேனும் அதை நாம் காப்போம். நாம் இங்கு தான் இருப்போம். எமது பள்ளிவாசலில், எமது வீடுகளில், எமது தெருக்களில் நாம் இருப்போம். உயிரைப் பற்றி எமக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று அய்தா சய்தவி முழக்கமிட்டார். இஸ்ரேல் குடியேற்றவாசிகளையும் பொலிஸாரையும் எதிர்த்து பலஸ்தீன பெண்களும் துணிச்சலாகப் போராடி வருகின்றனர்.
இதற்குச் சமாந்தரமாக, மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் பலஸ்தீன மக்கள் ஒன்று திரண்டு அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நிற்கும் தமது மக்களுக்கு ஆதரவாகக் கோஷமிட்டனர். இஸ்ரேல் படையினர் நேரடி துப்பாக்கிப் பிரயோகம், இறப்பர் உறையிடப்பட்ட உருக்கு துப்பாக்கி ரவைகள், புகைக் குண்டுகள் என்பனவற்றைப் பாவித்து நப்லுஸ், ஹெப்ரோன், அல் பிரேஹ், ஜெரிகோ, துல்காரம் மற்றும் ஏனைய மேற்குக் கரை நகரங்களில் கூடிய மக்களை விரட்டி அடித்தனர்
இவ்வளவு அநியாயங்களுக்கு மத்தியிலும் அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ஆட்சி பீடங்களில் அமர்த்தப்பட்டுள்ள அரபுக்கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பணியாற்றும் அரபு உலகத் தலைநகரங்களில் விநோதமான அமைதி நிலவியது. அரபு மக்கள் மீதான வரையறைகள் மட்டும் நீக்கப்படுமானால் அவர்கள் ஜெரூஸலத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று ஆக்கரமிக்கப்பட்ட தமது பூமிகளில் அநியாயக்காரர்கள் இழைத்து வரும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களுக்காக நீதி கேட்டு போராடுவர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காமல் அடக்குமுறை அரசுகள் பாதுகாத்து வருகின்றன.
நீண்டகாலமாக எல்லோரும் ஒரே விதமாகவே பலஸ்தீனர்கள் மீது சவாரி செய்து வருகின்றனர். பலஸ்தீன மக்கள் பலஸ்தீன அதிகார சபை உட்பட எல்லோர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இஸ்ரேலின் கைக் கூலியாக பலஸ்தீன அதிகார சபையும் மாறிவிட்டமையே இதற்குக் காரணம்.
இந்நிலையில் தான் அபுதாபி இஸ்ரேலுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதாகவும், இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளுக்கு வழியமைக்கும் வகையிலான ஒரு விஜயத்தை அமெரிக்க ஜனாதிபதி விரைவில் சவூதி அரேபியாவுக்கு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை வெட்கக் கேடான நிலைமைகளாகும்.
இந்த நிலையில், 1969க்கும் 1974க்கும் இடையில் இஸ்ரேலின் நான்காவது பிரதமராக இருந்த உக்ரேனில் பிறந்து வளர்ந்த ஆசிரியையான கோல்டா மேயர் “நாம் அல்அக்ஸா பள்ளிவாசலை எரித்த அன்றைய தினத்தில் அரபு நாட்டு இராணுவங்கள் எமது நாட்டுக்குள் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் நான் இரவு முழுவதும் உறங்க முடியாமல் தவித்தேன். ஆனால் அடுத்த நாள் காலையில் சூரியன் உதித்த போது, நாம் எமக்கு வேண்டிய விதத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. காரணம் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் (உம்மத்) சமூகத்துக்கு தான் நாம் முகம் கொடுக்க வேண்டி உள்ளது என்பதை நான் அப்போது புரிந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ள கருத்து நினைவூட்டத்தக்கது.
இவ்வாறான நிலையில் தற்போது மத்திய கிழக்கும் பலஸ்தீனமும் கொந்தளிக்கும் எரிமலையாகக் காணப்படுகின்றது. அது எந்த நேரத்திலும் அது வெடித்துச் சிதறி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM