(நெவில் அன்தனி)
உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து அணிகளுக்கு எதிரான ஏஎவ்சி ஆசிய கிண்ண சி பிரிவு கடைசி தகுதிகாண் சுற்றில் தடுத்தாடும் வியூகத்துடன் விளையாடி இறுக்கமான தோல்விகளைத் தழுவிய இலங்கை, இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மாலைதீவுகளுடான போட்டியில் மாறுபாடான வியூகங்களுடன் விளையாடவுள்ளது.
இந்தப் போட்டி நாமங்கன், மார்க்ஆஸி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மாலைதீவுகளுடனான இன்றைய போட்டியில் தடுத்தாடும் மற்றும் எதிர்த்தாடும் வியூகங்களை ஓரே சீராக பிரயோகித்து மாலைதீவுகளை வெற்றிகொள்வதற்கு இலங்கை முயற்சிக்கவுள்ளது.
அதற்கேற்றவாறு இலங்கை அணியை புதிய தலைமைப் பயிற்றுநர் அண்டி மொறிசன் தயார்படுத்தியுள்ளார்.
மேலும், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து அணிகளுடனான போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடிய விதம் குறித்து திருப்தி அடைந்துள்ள மொறிசன், இன்றைய போட்டியில் இலங்கையின் அதீத ஆற்றல்களை காணக்கூடியதாக இருக்கும் என கருதுவதாக உஸ்பெகிஸ்தானிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அணித் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேரா, இரண்டு மஞ்சள் அட்டைகளுக்கு இலக்கானதால் இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இது இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தைக் கொடுக்கும் என கருதப்படுகின்றது.
அவருக்குப் பதிலாக கவீஷ் லக்ப்ரிய பெர்னாண்டோ இன்றைய போட்டியில் கோல்காப்பாளராக விளையாடவுள்ளார். அத்துடன் மத்திய வரிசையைப் பலப்படுத்தும் வகையில் மரியதாஸ் நிதர்சனை முதல் பதினொருவர் அணியில் இணைப்பதற்கு கால்பந்தாட்ட அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் நிதர்சன் மாற்று வீரராக பயன்படுத்தப்பட்டிருந்தார்.
இன்றைய போட்டியில் 4 - 3 - 3 என்ற வியூக முறையைப் பயன்படுத்தி இலங்கை விளையாடவுள்ளது.
நேருக்கு நேர் போட்டிகளில் மாலைதீவுகள் முன்னிலை
சிநேகபூர்வ போட்டிகள் நீங்கலாக சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையும் மாலைதீவுகளும் 14 தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அவற்றில் 8 வெற்றிகளை மாலைதீவுகள் ஈட்டியுள்ளதுடன் 6 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
2000ஆம் ஆண்டு மாலைதீவுகளில் நடைபெற்ற பொன் விழா கால்பந்தாட்ட இறுதிப் போட்டி வெற்றிதோல்வியின்றி (1-1) முடிவடைந்த போதிலும் பெனல்டி முறையில் இலங்கை சம்பியனாகியிருந்தது. ஒட்டுமொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் மாலைதீவுகளை ஒருபோதும் இலங்கை வெற்றிகொண்டதில்லை.
கடைசியாக நடைபெற்ற மாலைதீவுகளுடனான போட்டியில் 63ஆவது நிமிடம்வரை 0 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த இலங்கை கடைசி 26 நிமிடங்களில் 4 கோல்களைப் போட்டு ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது.
எனவே கடந்த கால வரலாற்றை மாற்றி இன்றைய போட்டியில் வெற்றியீட்டி புதிய வரலாறு படைக்கும் வைராக்கியத்துடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியில் 4 - 3 - 3 என்ற வியூக முறையைப் பயன்படுத்தி இலங்கை விளையாடவுள்ளது.
தலைமைப் பயிற்றுநர் அண்டி மொறிசன், உதவி பயிற்றுநர் கீத் ஸ்டீவன்ஸ், உள்ளூர் தலைமைப் பயிற்றுநர் மொஹமத் ஹசன் ரூமி, உதவிப் பயிற்றுநர்கள் இராஜமணி தேவசகாயம், ரட்னம் ஜஸ்மின், தயாவன்ச ஆகியோர் வீரர்களுக்கு சிறந்த பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர்.
இதேவேளை, மாலைதீவுகள் அணியில் அல் பாசிர், நய்ஸ் ஹசன், இப்ராஹிம் வாஹீத் ஹசன் ஆகியோர் இன்றைய போட்டிக்கு மீளழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணி (முதல் பதினொருவர்), கவீஷ் பெர்னாண்டோ, சலன சமீர, சரித் ரத்நாயக்க, சமோத் டில்ஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, செபஸ்தியான்பிள்ளை ஜேசுதாசன், மரியதாஸ் நிதர்சன், அசிக்கூர் ரஹுமான், மொஹமத் ஆக்கிப், டிலொன் டி சில்வா, மொஹமத் ஷிபான்.
மாற்று வீரர்கள்: ருவண் அருணசிறி, தர்மகுலநாதன் கஜகோபன், சத்துரங்க மதுஷான், அப்துல் பாசித், மொஹமத் அபீல், செபமாலைநாயகம் ஜூட் சுபன், சசங்க டில்ஹார, மொஹமத் பஸால், மொஹமத் அமான், ஷெனால் சந்தேஷ், ஷபீர் ரசூனியா,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM