(எம்.எப்.எம்.பஸீர்)
பொது மக்களுக்கான மின்சார விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும் வண்ணம், அடுத்து வரும் 14 நாட்களுக்கு எந்தவொரு தொழிற் சங்க நடவடிக்கையிலும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவதை தடுத்து, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று (9) கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இலங்கை மின்சார சபை தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்தே நீதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
அதன்படி அடுத்த 14 நாட்களுக்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம், அதன் அலுவலக ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் எந்தவொரு வேலைநிறுத்தம் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதுருவ, சங்கத்தின் செயலர் தம்மிக விமலரத்ன ஆகியோருக்கு குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அந்த உத்தரவானது தொலைபேசி ஊடாக பிரதிவாதிகளான இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினருக்கு நீதிமன்ற பதிவாளரால் அறிவிக்கப்பட்டது.
இந்த முறைப்பாட்டை பதிவு செய்த இலங்கை மின்சார சபைக்காக, சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தல் பிரகாரம், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகளான ருவந்த குரே , நாக்மி நபாத் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இந்த முறைப்பாடானது எதிர்வரும் 22 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு மன்றில் ஆஜராகி விடயங்களை முன் வைக்க அறிவித்தலும் அனுப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் நேற்று ( 9) அதிகாலை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. இதனால் நாடு முழுதும் நேற்று (9)காலை 8.00 மணி முதல் மின் தடைக்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
எனினும், வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சில மணி நேரங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து அந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக நேற்று காலை கைவிடப்பட்டது.
தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடலை நடத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாகவும் அதனால் தற்காலிகமாக வேலை நிறுத்ததை கைவிட்டதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்துக்கு கொண்டுவரப்படவுள்ள திருத்தத்துக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டது.
' மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான அதானி குழுமத்தின் முன்மொழிவுகளுக்கு வழிவகை செய்யும் விதமாக, 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்துக்கு கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தம் குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் நேற்று முன் தினம் ( 8) மாலை நடத்திய இறுதிக் கட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டதுடன், பின்னர் ஜனாதிபதியின் அழைப்பை அடுத்து அது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த சட்ட திருத்தம் தொடர்பிலான காரணத்துக்கு மேலதிகமாக, தற்போதைய மின்சார சபை தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு பொருத்தமான ஒருவரை நியமித்தல், இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடல், மின்சார உற்பத்தியில் போட்டி முறையுடன் கூடிய விலைமனு முறைமையை கணக்கில் கொள்ளாது அதானி நிறுவனத்துக்கு ஒரு மின் அலகுக்கு அதிகபட்ச விலையை டொலரில் செலுத்தும் தீர்மானத்தை கைவிடல் ஆகிய கோரிக்கைகளும் மின்சார சபை பொறியியலாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று (09) அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் நேற்று நண்பகல் வரை வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, ஹட்டன், நுவரெலியா, கொழும்பு, கண்டி, மஹியங்கனை, கொட்டகலை, இரத்மலானை, தெஹிவளை, பலாங்கொடை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (09) அதிகாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிய முடிந்தது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் இவ்வாறு தடைப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மின்சாரம் வழங்கலை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்து அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதி செயலர் காமினி செனரத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
2283/22 எனும் இலக்கத்தை உடைய இந்த வர்த்தமானி அறிவித்தலானது 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மின்சாரம் மற்றும் மருத்துவம் சார் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மின்சாரம் வழங்கல், மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைள் வழமையான பொதுமக்கள் வாழ்வை கொண்டு நடத்துவதற்கு இன்றியமையாததெனவும், மேற்கூறப்பட்டுள்ள சேவைகளுக்கு இடையூறாகக்கூடுமென அல்லது தடையாகக்கூடுமென்பதைக் கருத்திற்கொண்டு எந்தவொரு அரச கூட்டுத் தாபனம் அல்லது அரச திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச்சங்கம் அல்லது அவற்றின் கிளையொன்றின்மூலம் வழங்கப்படும் பின்வரும் சேவைகள் அத்தியாவசிய சேவைகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1. மின்சாரம் வழங்கல்
2. வைத்திய சாலைகள், நேர்சிங் ஹோம்கள் , மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர் களின பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப் பட வேண் டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள் , வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM