(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 21 திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய 9 பிரதான பரிந்துரைகளை தேசிய மக்கள் சக்தி நீதித்துறை, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
குறித்த பரிந்துரைகளில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 21 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
பாராளுமன்ற உறுப்பினர்
பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் , அவர் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து வெளியேறக் கூடாது என்பதோடு , அவ்வாறு கட்சியிலிருந்து விலகுவாறாயின் அவரது கட்சி உறுப்புரிமையோடு , பாராளுமன்ற உறுப்புரிமையையும் இரத்து செய்ய வேண்டும்.
ஜனாதிபதி
ஜனாதிபதியானவர் எந்தவொரு அமைச்சு பதவியையும் தன் வசம் வைத்திருக்கக் கூடாது.
அமைச்சரவை
அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகக் காணப்படும் அதே வேளை , அதற்கான பிரதி அமைச்சுக்களும் 25 ஆகவே காணப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சு அல்லது வேறு பெயர்களில் வேறு எந்த பதவிகளும் வழங்கப்படக் கூடாது. தேசிய அரசாங்கங்கள் உருவாகும் பட்சத்தில் , சூழ்நிலையின் அடிப்படையில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது. 25 அமைச்சுக்களுக்குமான விடயதானங்கள் அல்லது பொறுப்புக்கள் அரசியலமைப்பிற்குள் உள்வாங்கப்பட வேண்டும். நடைமுறைக்கு தேவையான அமைச்சுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மன்னிப்பு
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புரைகளில் உள்ளடக்கப்படும் குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றோருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர், 1981 - 12 ஆம் இலக்க பொது சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ளவர்கள், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர், பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள், அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதாயின் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
நியமனங்கள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் அரசியலமைப்பு சபையின் ஊடாக நியமிக்கப்பட வேண்டும்.
இரட்டை குடியுரிமையுடையோர்
அரசியலமைப்புசபை, அரசியலமைப்பு சபையால் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுக்கள, அரசியலமைப்பு சபையால் ஸ்தாபிக்கப்படும் ஏனைய நியமனங்களுக்கு இரட்டை குடியுரிமையுடையோர் தகுதியற்றவர்களாகக் கருதப்பட வேண்டும்.
சொத்து விபரங்கள்
எந்தவொரு நபரினதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
வேட்பாளராகும் உரிமை
இரட்டை குடியுரிமையற்ற எந்தவொரு பிரஜைக்கும் வாக்குரிமையைப் பெற்ற நாள் முதல் தனது 70 ஆவது வயது வரை தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறங்கக் கூடிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பாராளுமன்றம்
21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் தினத்திலிருந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 9 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM