உணவு பாதுகாப்பிற்கான விரிவான அரச - தனியார் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published By: Digital Desk 3

30 May, 2022 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

உணவு பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச - தனியார் கூட்டு வேலைத்திட்டமொன்றை துரிதமாக ஆரம்பிகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உரத் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பல நாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. எனவே உரத்தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணத்திற்காகவும் பருவப் பயிர் செய்கையை கைவிட வேண்டாம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயிகளிடம் கோரியுள்ளார்.

பருவப் பயிர் செய்கை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய உணவு தட்டுப்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உரத்தை கொள்வனவு செய்தல், அதனை விநியோகித்தல், முறையான முகாமைத்துவம், தெளிவூட்டுதல், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பிற்கான தேசிய உரக் கொள்கையொன்றை துரிதமாக உருவாக்குதல் என்பன தொடர்பில் இதன் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

விவசாயிகளின் விருப்பத்திற்கமைய இரசாயன அல்லது சேதன பசளையை வழங்கி பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத நெல் வயல்களைக் கண்டறிந்து, பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும். சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு பண்ணைகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

பயிரிடப்படாத நிலங்களில் பெரும் பகுதி அரசுக்குச் சொந்தமானது. அந்த நிலங்களை கண்டறிந்து இளம் விவசாயிகளிடம் ஒப்படைக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர , 'வீட்டுத்தோட்டம் மற்றும் அரசு அலுவலக நிலங்களில் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் முதல் அனைத்து அரச ஊழியர்களும் இதற்கு பங்களிப்புச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்' என வலியுறுத்தினார்.

விவசாயம், கால்நடைகள் மற்றும் நன்னீர் மீன்பிடிக்காக மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் , பயிரிட வேண்டிய பயிர்களை அடையாளம் கண்டு அனைத்து மாகாண ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு வாரத்தை ஆரம்பிப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் பெரும் போகத்திற்கு தேவையான பொஸ்பரஸ் அடங்கிய உரத்தை உற்பத்தி செய்வதற்கு எப்பாவல பொஸ்பேட் வைப்புகளை உகந்த முறையில் பயன்படுத்துமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48