ரோயல் பார்க் படுகொலை விவகாரம் : ஜனாதிபதி பொது மன்னிப்பினை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

27 May, 2022 | 09:48 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ,  ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை அது குரித்த விசாரணைகள்   உயர் நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது.

மனுதார் தரப்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணியின், சிரமங்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறு உயர் நீதிமன்றம் இவ்வழக்கை ஒத்தி வைத்தது.

இதற்கு முன்னரான  பரிசீலனையின் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிட நீதியரசர்கள் குழாம் மனுதாரருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் மனுவின் ஒரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். 

இதற்கு மேலதிகமாக,  பெண்கள்  மற்றும் ஊடக கூட்டு எனும் அமைப்பு  தாக்கல் செய்துள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில்,  ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹ,  சட்ட மா அதிபர்,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்,  குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்,  பொலிஸ் மா அதிபர்,  நீதி அமைச்சர்,  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோரும்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, சட்டத்தரணி ருக்ஷான் சேனாதீரவுடன் ஆஜராகும் நிலையில் ,  ஜூட் ஷிரமந்த அன்டனி  ஜயமஹ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ்  முஸ்தபாவும் ஆஜராகின்றனர். ஏனைய பிரதிவாதிகளுக்காக அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்   நரின் புள்ளே ஆஜரானார்.

 இந்நிலையிலேயே குறித்த  வழக்கு எதிர்வரும்  செப்டம்பர் 23 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

 முன்னதாக, ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன்  எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டைக் கொண்டு கழுத்தை நெறித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். 

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளில் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறித்த சம்பவம் வருமாறு :

சுவீடன் தந்தைக்கும் இலங்கை தாய்க்கும் பிறந்த இவோன் ஜெக்சன்  தனது சகோதரி கரோ ஜெக்ஷன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு தொடர்மாடியில் வாழ்ந்து வந்துள்ளார்.

 அப்போது அவர் தனது படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு  கிடைத்த விடுமுறையை அடுத்து இங்கிலாந்துக்கு சென்று அங்கு குடும்பத்தாருடன் உல்லாசமாக இருந்த பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.

இவோன் அமெரிக்காவில் இருந்த காலப்பகுதியில் இலங்கையில் தனிமையில் இருந்த அவரது சகோதரி கெரோ, இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்ற வேளைகளில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது அதன் பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

 இந்நிலையிலேயே சம்பவ தினமான 2005 ஜூன் 30 ஆம் திகதி, ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ, கெரோ மற்றும் இவோன் ஜெக்சன் ஆகிய மூவரும்  குளோ இரவு களியாட்டம் என அறியப்படும்  விஷேட களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.

ராஜகிரிய ரோயல் பார்க் தொடர்மாடியில் இருந்து இவோன் ஜெக்சனும் கெரோவும்  தமது ஜீப் வண்டியில் முதலில் பகதலே வீதியில் உள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் வீட்டுக்கு சென்று ஏற்கனவே மூவரின் திட்டத்துக்கும் அமைய அவரையும் அழைத்துக்கொண்டு  குறித்த களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.  

குளோ களியாட்ட நிகழ்வுக்கு செல்லும் வழியில் அவர்கள் முதலில் வைட் ஹவுஸ் பப் எனும் களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இவோன் கெரோனே ரக பியர் பாணத்தையும்,  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ டிகிலா ரக மதுபானத்தையும் கெரோ லோங் ஐலன்ட் ஐஸ் டீ எனும் பானத்தையும் அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து இரவு 10.00 மணியளவில்  குளோ களியாட்ட நிகவுக்கு சென்றுள்ளனர். குறித்த களியாட்ட விடுதியில், ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு விஷேடமாக தனிப்பட்ட லொக்கொர் ஒன்று இருந்துள்ள நிலையில் அதிலிருந்த வொட்கா ரக மதுபானத்தை உதவியாளர் ஊடாகப் பெற்று அங்கு மூவரும் அருந்தியுள்ளனர்.

 அதனை தொடர்ந்து மூவரும் அங்கிருந்து வெளியேறி  இரவு 11.30 மணியளவில் ஹில்டன் ஹோட்டலின் புளூ எலிபன்ட் இரவு களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கும் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு இரகசிய லொக்கர் இருந்துள்ள நிலையில் அதில் இருந்த பகாடி ரக மதுபானத்தைப் பெற்று அதனையும் மூவரும் அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் நள்ளிரவு வேளையில் குளோ களியாட்டத்துக்கு அதிகமானவர்கள் வருவார்கள் என்பதால் மீண்டும் அங்கு செல்ல இவோன் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி அங்கு செல்ல மூவரும் ஹில்டனில் இருந்து வெளியேறியுள்ளனர். குளோ களியாட்ட விடுதியை அடைந்த போது அங்கு பவித்ர என்ற  நண்பரை கெரோ காணவே அவருக்கு 'ஹாய்' கூறியுள்ளார். இது அப்போது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அதனை மையப்படுத்தி கெரோவுக்கும் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கும் சண்டை வந்துள்ளது. இதன்போது தனது தங்கையுடன் சண்டை பிடிக்க வேண்டாம் என இவோன் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு கூறியுள்ளார்.

 இந் நிலையில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ தனது காதலி கெரோவுடன் குளோ  களியாட்டத்தில் இருப்பதை தவிர்த்து இருவருமாக ராஜகிரிய  ரோயல் பார்க் கில் உள்ள கெரோவின் வீட்டுக்கு வாடகை கார் மூலம் வந்துள்ளனர். இவோன் தனது கொரிய நாட்டு தோழியுடன் குளோ களியாட்டத்தில் இருந்துள்ளார்.

 இந்நிலையில் ராஜகிரிய  ரோயல் பார்க்  சொகுசு தொடர்மாடி குடியிருப்புக்கு வந்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ, கெரோவை அவரது படுக்கை அறையில் விட்டுவிட்டு சிகரட் ஒன்றினையும் புகைத்தவாறு வெளியேறியுள்ளார். கெரோ, தமது சமையலறையில், வந்தவுடன் எழுப்பவும் என தனது சகோதரி இவோனுக்கு புரியும் படியாக எழுதி வைத்துவிட்டு உறக்கத்துக்கு சென்றுள்ளார்.

இந் நிலையில் சிகரட்டை புகைத்தவாறு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அந்த தொடர்மாடியின் 23 ஆம் மாடிக்கு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கீழ் நோக்கி செல்ல மின் தூக்கியின் உதவியை நாட  மின் தூக்கி பகுதிக்கு சென்றுள்ளார்.

 அப்போது, நேரம் அதிகாலை 2.00 மணியையும் தாண்டி இருந்துள்ளது. ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கீழ் நோக்கி செல்ல முற்பட்ட வேளை மின் தூக்கில் இவோன் தனது குடியிருப்பு நோக்கி செல்ல வந்துள்ளார். அப்போது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவை கண்டுள்ள இவோன், நீ என் தங்கையின் வாழ்வை அழித்துவிட்டாய் என கோவமாக கத்தியுள்ளார். இதன்போது கோபமடைந்துள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ இவோன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

 அந்த தாக்குதலில் இருந்து தப்ப இவோன் 23 ஆம் மடையில் இருந்து படிக்கட்டு வழியே 20 ஆம் மாடிவரை ஓடியுள்ளார். துரத்திச் சென்றுள்ள ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ 20 ஆவது மாடியில் வைத்து இவோனை அவரது கூந்தலின் உதவியுடன் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று படிக்கட்டுக்களில் அவரது தலையை மிக வேகமாக பல சந்தர்ப்பங்களில் மோதியுள்ளார். மரண பரிசோதனை அறிக்கை பிரகாரம் இவோனின் மண்டை ஓடு 64 இடங்களில் நொருங்கியுள்ளதாக நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 பின்னர் இவோன் அப்போது அணிந்திருந்த காட்சட்டையை கழற்றி, அதன் கால் பகுதி இரண்டையும் கழுத்துக்கு குறுக்காக போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதனையடுத்து அவரை கோவமாக உருட்டவே இவோன் 19 ஆவது மாடியில் வந்து விழுந்துள்ளார். 

இதனையடுத்து ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அருகே சென்று பார்த்த போதே இவோன்  உயிரிழந்துள்ளமையை உணர்ந்து, உடனடியாக  தனது நண்பர் ரில்வானுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து, தான் ரோயல் பார்க்கில் உள்ளதாக கூறி அழைத்து செல்ல வருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து ரில்வான் அங்கு அதிகாலை 3.45 மணியளவில் வந்துள்ளதுடன்  அவரதுடன் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ அங்கிருந்து சென்றுள்ளார்.

 இந்த பின்னணியிலேயே இக்கொலை தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொலிஸ் பரிசோதகரான பின்னர் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

அவரது விசாரணையின் பிரகாரம் மேற்படி விடயங்கள் கண்டறியப்பட்டு நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இக்கொலையை பார்த்த சாட்சியங்கள் இல்லாமல் இருந்த நிலையில் சந்தர்ப்ப மற்றும் அறிவியல் தடயங்களில் இவ்வழக்கு தங்கியிருந்தது.

 கொலை இடம்பெற்ற இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர் மேர்வின் சமரசிங்க, சடலம் இருந்த இடத்துக்கு அருகே இரத்ததில் பதிந்த கையச்சு ஒன்றினை அடையாளப்படுத்தியிருந்தார். அந்த கை அச்சில் பதிவான கைவிரல் ரேகைகளை  பகுப்பாய்வு செய்த போது அது ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் ரேகை என உறுதியானதுடன் இரத்தமானது  கொலை செய்யப்பட்ட இவோனினுடையது என டி.என்.ஏ. பரிசோதனை ஊடாக உறுதியானது.

 இந் நிலையில் குறித்த விவகாரம் அப்போதைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி  ஐ.எம். அபேரத்ன முன்னிலையில்  விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கை,  சட்ட மா அதிபர் சார்பில்  அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனராலான தற்போதைய பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய  கையாண்டிருந்தார்.  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  தயா பெரேரா ஆஜராகியிருந்தார்.

 இவ்வழக்கு விசாரணைகளின் போது 48 சாட்சியாளர்கள் மற்றும் 51 ஆவணங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 2012 ஆம் ஆண்டு குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 அப்போது இந்த கொலை திட்டமிட்ட கொலை அல்ல என தீர்மானித்திருந்த மேல் நீதிமன்றம் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்தும் மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்திருந்தது.

 இந் நிலையில்  தீர்ப்புக்கு எதிராக  தன்னை விடுவிக்குமாறு கோரி ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ சார்பிலும், தண்டனை போதாது எனக் கூறி சட்ட மா அதிபர் சார்பிலும் இரு மேன் முறையீடுகள் மேன் முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்டன. இதில் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் சார்பில் அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரிய முன்வைத்த மேன் முறையீட்டுக்கு அமைவாக 2012 ஜூலை 11 ஆம் திகதி தீர்ப்பறிவிக்கப்பட்டது. அதன்படி  ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

 மேன் முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றின் தீர்ப்பை மாற்றி இவ்வாறு  மரண தண்டனை விதிக்கும் போது, இந்த கொலை திட்டமிட்ட கொலைதான் எனவும் உறுதி செய்திருந்த நிலையில் இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பதிவானது. 

மேல் நீதிமன்றுக்கு மட்டுமன்றி மேன் முறையீட்டு நீதிமன்றுக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்க முடியும் என் இதனூடாக உறுதி செய்யப்பட்டதே அதற்கான காரணமாகும்.

 இதனையடுத்து  மரண தண்டனை கைதிகளுக்கு உரிய  உரிமைகளின் அடிப்படையில், அந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில்ல விஷேட மேன் முறையீடு செய்யப்பட்டது.  அந்த மேல் முறையீட்டை  2013 ஒக்டோபர் 22 ஆம் திகதி நிராகரித்த உயர் நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றின் மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.

இதனையடுத்து 2014 ஜூன்  9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி  பத்மினி ரணவக்கவினால் ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு எதிரான உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு அவருக்கு வாசித்து காட்டப்பட்டது.

 அது முதல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் ஆண்டு விஷேட ஜனாதிபதி  பொது மன்னிப்பின் கீழ் குறித்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந் நிலையிலேயே மீன்டும்  2019 நவம்பர் மாதம் மற்றொரு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த மன்னிப்பு அளிக்கப்பட சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ( அப்போதைய ஜனாதிபதி மைத்திரி ) இது குறித்து பிரசித்தமாக மேடையொன்றில் கூறுயதை அடுத்து பல விமர்சனங்களும்  எழுந்திருந்தன.

' பொறுமை இல்லாத போது நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது.   இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.   அந்த இளைஞருக்கு அப்போது 19 வயதுதான்.  அவர்  குறித்த யுவதியுடன் வாக்குவாதப்பட்டு பின்னர் அவளை கொலை செய்துள்ளார்.   அந்த இளைஞன் இப்போது கலாநிதி பட்டப்படிப்பொன்றினையும் பூர்த்தி செய்துள்ளார்.   நான் நினைக்கின்றேன் இப்போது அவருக்கு 32 வயது  ஆகிறது. ' என அப்போதைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி ஹில்டன் ஹோட்டலில் நடைப் பெற்ற இளைஞர் விவகார மாநாடொன்றில் உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் முதன் முதலாக ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராய்வதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அரசியலமைப்பின் 34 ஆவது  அத்தியாம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

 அரசியலமைப்பின் 34 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய  இலங்கையில் எந்தவொரு நீதிமன்றினாலும் குற்றவாளியாக காணப்படும்  ஒருவருக்கும் மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

குறித்த குற்றவாளிக்கு பூரண மன்னிப்பா அல்லது  நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பா என்பதை ஜனாதிபதிக்கு தீர்மானிக்க அரசியலமைப்பு அதிகாரமளித்துள்ளது.

எவ்வாறாயினும் மரண தண்டணை கைதிக்கு பொது மன்னிப்பு அல்லது ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியுமா என்பது குறித்து அரசியலமைப்பின் 34 (ஈ) உறுப்புரைக்கு அமைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதன்படி அவ்வாறான நபர் ஒருவரை விடுவிக்க முன்னர் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் இருந்து அறிக்கை பெறவேண்டும்.  அந்த அறிக்கை ஜனாதிபதியின் கைக்கு கிடைத்த பின்னர் அது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரும் போது,  குறித்த ஆலோசனையை நீதி அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரிடம் ஆலோசனையை வழங்குமாறு குறிப்பிட்டே அனுப்பப்படல் வேண்டும். அதன் பின்னர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சட்ட மா அதிபரின் ஆலோசனையையுடன் தமது பரிந்துரைகளையும் உள்ளடக்கி அதனை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பார். அதன் பின்னரேயே மரண தண்டனைக் கைதி தொடர்பில் ஜனாதிபதிக்கு மன்னிப்பு வழங்குவதா இல்லையா என முடிவெவெடுக்க முடியும். என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20