நிதி அமைச்சை பொறுப்பேற்க ஹர்ஷ டி சில்வா மறுத்தது ஏன் ? 

26 May, 2022 | 07:50 PM
image

ரொபட் அன்டனி 

தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது அமைச்சரவையில்  ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் சுதந்திரக் கட்சிகளின்   எம்.பி.க்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.  சுதந்திரக் கட்சியின் நிமால்  சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் அரசாங்கத்தின் நிதி அமைச்சுப் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வாவுக்கு வழங்க வேண்டும் என்பதில் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார்.  அத்துடன் அமைச்சர்களான  ஹரீன் மற்றும் மனுஷ ஆகியோரும் ஏனைய அமைச்சரவை  அமைச்சர்களும்  விரும்புகின்றனர்.   இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்  ஹரீன் தற்போதைய இக்கட்டான சூழலில் ஹர்ஷ டி, சில்வா  நிதியமைச்சை ஏற்று செயற்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  

இதற்காக  ஹரீன் பெனாண்டோ ஹர்ஷவுடன் பல தடவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ஆனால் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஹர்ஷ  டி சில்வா தொடர்ந்து மறுத்து வருகிறார்.  எப்படியிருப்பினும் ஹர்ஷ  டி சில்வா இதற்காக கூறும் காரணம் மிக முக்கியமானது. 

அதாவது சகல கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும்   அந்த அமைச்சரவையில்  நிதி அமைச்சு பொறுப்பை ஏற்று நாட்டுக்கு சேவையாற்ற தயார்  என்றும் ஹர்ஷ  டி சில்வா   கூறுகிறார்.   மாறாக சகல கட்சிகளினதும் பங்களிப்புடன்   உருவாக்கப்படுகின்ற அரசாங்கத்தை  தாண்டி   வேறு வகையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சை பொறுப்பேற்பது முறையல்ல என்றும்  அது தனக்கு வெற்றியாக இருப்பினும்  நாட்டுக்கு வெற்றியாக அமையாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.    இதன்மூலம்    ஹர்ஷ  டி சில்வா   நிதியமைச்சை பொறுப்பேற்று செயற்பட தயாராக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. ஆனால் கட்சியின் தீர்மானம் காரணமாக அவர் தயங்குகிறார். 

 இதேவேளை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் மக்களைப் பொறுத்தவரையிலும் கூட ஹர்ஷ  டி சில்வா  நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று நாட்டின் நிதிநிலைமை   நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றும்  அதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.  அதனை சகலரும் பல்வேறு தளங்கள்  ஊடாக தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் ஹர்ஷ  டி சில்வா  தொடர்ச்சியாக  இதனை நிராகரித்து வருகிறார்.  சகல கட்சிகளும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில் தான் அதில் இடம் பெறுவதாகக் கூறுகிறார். எப்படி இருப்பினும் இந்த நேரத்தில நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து செயற்படுவது அவசியமாக இருக்கின்றது.  அரசியல் பேதங்களை     ஒரு பக்கம் வைத்துவிட்டு தற்போது   மக்களை மீட்டெடுப்பதற்கும் வரிசை பிரச்சனைக்கு தீர்வு காணவும்  சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

ஹர்ஷ  டி சில்வாவும் நிதி  அமைச்சை பொறுப்பேற்பது முக்கியம் என்றும் இந்த நேரத்தில் நாட்டுக்காக சேவை ஆற்றுவது தீர்க்கமானது  என்றும் ஏற்றுக் கொள்கிறார்.  எவ்வாறெனினும்  வரிசை பிரச்சினையை முடிக்கவும் எரிபொருள் எரிவாயு நெருக்கடியை  தீர்க்கவும் உணவு பஞ்சத்தை தவிர்க்க  சகலரும் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த இடத்தில் யாரும் அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடாது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right