(நா.தனுஜா)
இலங்கை சுற்றுலா சபையின் தலைவராக சுமார் இரண்டரை வருடம் பதவி வகித்த கிமார்லி பெர்னாண்டோ, நேற்று செவ்வாய்க்கிழமை அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பில் விளக்கமளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் கிமார்லி பெர்னாண்டோ மேலும் கூறியிருப்பதாவது:
நீங்கள் கடந்த 20 ஆம் திகதி சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உங்களுக்குரிய தலைவர்கள் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்களை நீங்கள் நியமிக்க விரும்புவீர்கள்.
எனவே உடன் அமுலுக்குவரும் வகையில் சுற்றுலாத்துறைசார் கட்டமைப்புக்களிலிருந்து நான் இராஜினாமா செய்வதை இக்கடிதம் மூலம் அறியத்தருகின்றேன்.
நான் கடந்த 30 மாதகாலமாக இந்தப் பதவியை ஓர் கௌரவ அடிப்படையிலேயே ஏற்றுக்கொண்டிருந்தேன். அதனால் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்படக்கூடிய சம்பளம், வாகனம், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் வெளிநாட்டுப்பயண வாய்ப்பு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே நான் எனது நாட்டிற்கு சேவையாற்ற முன்வந்தேனே தவிர, வரிசெலுத்துபவர்களுக்கு என்னால் எந்தவொரு செலவினங்களும் ஏற்படவில்லை.
இந்த நடவடிக்கையானது தற்போதைய சூழ்நிலையில் ஏனையோரும் இவ்வாறு செயற்படுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகுந்த நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இலங்கை சுற்றுலா சபையானது சில முக்கிய அடைவுகளை எட்டியது. உலகளாவிய மேம்படுத்தல் பிரசாரம் தொடர்பான உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு, இப்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கும் சரியான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் தயார்நிலையில் உள்ளது.
இலங்கையில் முதற்தடவையாக நாட்டிலுள்ள சுமார் 5000 இற்கும் மேற்பட்ட இடங்களை உள்ளடக்கிய பயண செயலி வடிவமைக்கப்பட்டதுடன், அதில் இணையவழி மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதிகளும் உள்ளடக்கப்பட்டன.
நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் தற்போது அனைத்து முன்பதிவுகளையும் மேற்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்துக் கட்டமைப்புக்களுக்கும் மதுசார அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டது. மேற்குறிப்பிட்ட அடைவுகளில் இவையும் உள்ளடங்குகின்றன.
இருப்பினும் கடந்தகாலங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்குரிய கூட்டம் நடைபெறாதமை வருந்தத்தக்க விடயமாகும்.
கடந்த 21 ஆம், 23 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கூட்டங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கம் தற்போதைய சூழ்நிலையில், பெருமளவான நிதியீட்டல் துறையாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. அவ்வாறிருக்கையில் நீங்கள் வெளிக்காட்டுகின்ற அலட்சியப்போக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM