( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த “மைனா கோ கம”, “கோட்டா கோ கம” அமைதிப் போராட்டக் காரர்களின் பாதுகாப்பு குறித்து தான் வழங்கிய எழுத்து மூல, வாய் மொழி மூல ஆலோசனைகளை, பொறுப்பான உயர் அதிகாரியாக செயற்பட்ட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பின்பற்றாதிருந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (21) பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் சி.ஐ.டி.யினர் 5 மணி நேரம் வரை விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
இதன்போதே பொலிஸ் மா அதிபர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியதாக சி.ஐ.டி.யின் உயர் மட்ட தகவல்கள் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தன.
கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை முன்னெடுக்க வேண்டாம் என தான் ஒரு போதும் ஆலோசனை வழங்கவில்லை எனவும் இதன்போது பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டதாக அந்த தகவல்கள் கூறின.
இந் நிலையில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜனாதிபதியிடமும், பொலிஸ் மா அதிபரிட்சமும் வெவ்வேறு விதமாக தகவல்களை கூறி அவர்களை தவறாக வழி நடாத்தியுள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி.யினரால் கடந்த 17 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி பொலிஸ் மா அதிபரிடமும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் பொலிஸ் விஷேட நடவடிக்கை பணியகத்தின் ( உளவுத் தகவல்கள் தொடர்பாக ) பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஏ. தனபால ஆகியோரிடமும் சி.ஐ.டி. விசாரணை செய்தது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி..க்கு வழங்கியதாக கூறப்படும் வாக்கு மூலத்தில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே, கோட்டா கோ கம மீது தாக்குத்கல் நடாத்த வந்தவர்களை தடுக்காமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந் நிலையில், சனிக்கிழமை (21) பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அளித்துள்ள வாக்கு மூலத்தில்,' மைனா கோ கம, கோட்டா கோ கம மீது, அலரி மாளிகைக்கு வருவோர் அத்து மீறலாம் என்பது தொடர்பிலும் வன்முறைகள் ஏற்படலாம் என்பது குறித்தும் மே 8 ஆம் திகதி உளவுத் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தகவல்கள் பிரகாரம், அலரி மாளிகைக்கு வருவோரை எந்த காரணத்துக்காகவும் அலரி மாளிகையின் முன் பக்கமாக அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பக்கமோ அல்லது காலி முகத்திடல் பக்கமோ செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனவும், அதற்கு மேலதிகமாக அரசாங்க எதிர்ப்புக்களுடன் காணப்படும் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் எழுத்து மூலமும் , வாய் மொழி மூலமும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததாக பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி.யிடம் தெரிவித்துள்ளார்.
'காலி முகத்திடல் நோக்கி பயணிக்க முடியுமான அனைத்து பாதைகளையும் வீதித் தடைகள் கொண்டு மூடி பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அவ்வாலோசனைகளில் கூறியிருந்தேன். அவற்றை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் முன்னெடுத்திருக்கவில்லை.
குறைந்த பட்சம், அரசாங்க ஆதரவாளர்களின் பேரணியை தடுக்க நீதிமன்ற உத்தரவொன்றினை கூட அவர் பெற முயன்றிருக்கவில்லை. ' என பொலிசஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மாற்றமாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சில அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டு, அவர்களின் தேவைக்கு அமைய செயற்பட்டுள்ளதாக சிற்சில தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி.ஐ.டி.யினர் பொலிஸ் விஷேட நடவடிக்கை பணியக பிரதானியிடம் செய்த விசாரணைகளில், 9 ஆம் திகதி இடம்பெற முடியுமான வன்முறைகள் தொடர்பில் விரிவான தகவல்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 8 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் பிரதானிகளுடன் இடம்பெற்ற சூம் கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலக பாதுகாப்பு மற்றும் காலி முகத்திடல் பகுதி பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன ( தற்போது கேகாலைக்கு மாற்றம் ), பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்ணீர் புகைப் பிரயோகம், நீர்த் தாரை பிரயோகம் தொடர்பில் முன் வைத்த முன் மொழிவுகளை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து கண்டித்தமை தொடர்பிலும் சி.ஐ.டி. விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM